Last Updated : 08 May, 2020 07:36 PM

1  

Published : 08 May 2020 07:36 PM
Last Updated : 08 May 2020 07:36 PM

மது வீட்டுக்கு கேடு; நாட்டுக்கு துட்டு..! திகைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களிலும் கரோனா வைரஸ் உச்சத்தில் பரவிக்கொண்டிருந்தாலும், மதுக்கடைகள் திறப்பதை மாநில அரசுகள் ஜரூராக அரங்கேற்றி வருகின்றன. மற்ற சேவைகளுக்கே ஊரடங்கிலிருந்து தளர்வு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், மதுக்கடைகளைத் திறக்க அறிவிக்கப்பட்ட தளர்வு அதிகம் விமர்சனத்துக்கு உள்ளாகிவருகிறது. இந்நிலையில் இந்தியாவில் மது நுகர்வு கலாச்சாரம், மதுவின் மூலம் கிடைக்கும் வருவாய் பற்றிய புள்ளிவிவரங்கள் மலைக்க வைக்கின்றன.

குடிமகன்கள் எண்ணிக்கை

* இந்திய மக்கள்தொகையில் 14.6 சதவீதம் பேர் மது அருந்துகிறார்கள். இவர்களில் 27 சதவீதம் பேர் ஆண்கள். 1.6 சதவீதம் பெண்கள்.

* 1992-ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மது அருந்துவோர் எண்ணிக்கை 55 சதவீதமாக அதிகரித்தது.

* லான்செட் ஆய்வின்படி, இந்தியாவில் 2010 முதல் 2017 வரை மது அருந்துதல் 38 சதவீதமாக அதிகரித்துள்ளது.

* இந்தியாவில் 75 சதவீத இளைஞர்கள் 21 வயதை எட்டுவதற்கு முன்பே மது அருந்தி விடுகிறார்கள்.

* 2019-ல் நடத்தப்பட்ட அரசு ஆய்வின்படி இந்தியாவில் 10 முதல் 75 வயதுக்கு உட்பட்டவர்களில் சுமார் 14.6 சதவீதம் (16 கோடி பேர்) பேர் மது அருந்துகிறார்கள். சத்தீஸ்கர், திரிபுரா, பஞ்சாப், அருணாச்சலப் பிரதேசம், கோவா போன்ற மாநிலங்கள் மதுபானத்தில் ஆதிக்கம் செலுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

* இந்தியாவில் ஆல்கஹால் நுகர்வு 2016-ம் ஆண்டில் சுமார் 5.4 பில்லியன் லிட்டராக (540 கோடி லிட்டர்) இருந்தது. 2020-ம் ஆண்டில் இது சுமார் 6.5 பில்லியன் லிட்டரை (650 கோடி லிட்டர்) எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

* ஓர் ஆய்வின்படி 25 வயதுக்கு உட்பட்ட இந்தியர்களில் 88 சதவீதத்துக்கு அதிகமானோர் வயது வரம்பை மீறி சட்டவிரோதமாக மதுபானங்களை வாங்குகிறார்கள்.

* இந்தியாவில் சுமார் 70 சதவீத ஆல்கஹால் விநியோகம் மதுபான விற்பனையாளர்கள் அல்லது கடைகள் மூலமாகவே நடைபெறுகின்றன. எஞ்சிய 30 சதவீதம் பார்கள், விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூலம் நடைபெறுகின்றன.

வருமானம் பராக்!

* இந்தியா முழுவதும் கலால் வரி மூலம் ரூ. 2.48 லட்சம் கோடி வருவாய் திரட்டப்படுகிறது.

* கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி பெரும்பான்மையான மாநிலங்கள் தங்களுடைய சொந்த வரி வருவாயில் சுமார் 10 - 15 சதவீத வருவாயை ஆல்கஹால் மீதான கலால் வரியிலிருந்தே பெறுகின்றன.

* ஒவ்வொரு மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் கலால் வரி மூலம் கிடைக்கும் வரி வருவாய், மாநிலத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது பெரிய பங்களிப்பாக இருந்துவருகிறது. மதுபானத்தை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மாநிலங்கள் விரும்பாததற்கு இதுவே காரணம்.

* இந்திய ரிசர்வ் வங்கியின் 2019-20 ஆம் ஆண்டு அறிக்கையின்படி இந்தியாவில் உள்ள 29 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் மொத்தம் ரூ. 1,75,501.42 கோடியை மது மீதான மாநில கலால் தொகையிலிருந்து பெற்று மாநில பட்ஜெட்டுக்குத் திருப்பியுள்ளன. இது 2018-19 ஆம் ஆண்டைவிட 16 சதவீதம் அதிகம்.

* 2018-19 ஆம் ஆண்டில் மதுபானம் மீதான கலால் வரி தொகையிலிருந்து சராசரியாக மாநிலங்கள் மாதத்துக்கு சுமார் ரூ.12,500 கோடி வசூலித்துள்ளன. இது 2019-20 ஆம் ஆண்டில் மாதத்துக்கு சுமார் ரூ.15,000 கோடியாக உயர்ந்தது. 2020-21 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயெ கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இனிவரும் காலத்தில்தான் மது விற்பனை தொகை தெரியவரும்.

* இந்தியாவில் கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் உத்தரப் பிரதேசம் மாநிலம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.2,500 கோடி தொகையை மதுபானம் விற்பனை மூலம் வசூலித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.3,000 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குடி பாதிப்புகள்

* இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளில் 40 சதவீத விபத்துகள் ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு ஓட்டுவதால் ஏற்படுகிறது.

* இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் 72 சதவீத விபத்துகள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரால் ஏற்படுகிறது.

* 2019-ம் ஆண்டில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் சுமார் 5.7 கோடி பேர் மதுவுக்கு அடிமையானவர்கள்.

* உலக சுகாதார அமைப்பின் 2018-ம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2,60,000 பேரை ஆல்கஹால் கொல்கிறது.

மதுவிலக்கு

* இந்தியாவில் குஜராத், பிஹார், மிசோராம், நாகாலாந்து, லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் மது விற்பனைக்கு தடை உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x