Published : 06 May 2020 10:04 PM
Last Updated : 06 May 2020 10:04 PM

கரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் ஜல்லிக்கட்டுக் காளைகளை பராமரிக்க முடியாமல் திண்டாட்டம்: தமிழர் வீர விளையாட்டைப் பாதுகாக்க அரசு உதவுமா?

சிக்கந்தர்சாவடியில் 17 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க முடியாமல் சிரமப்படும் வீரபாண்டி. 

மதுரை

கரோனா ஊரடங்கால் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க முடியாமல் அதன் உரிமையாளர்கள் சிரமப்படுகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு தென் மாவட்டங்களில் பிரபலம். பொங்கல் பண்டிகை நாட்களில் மட்டுமே நடக்கும் இந்த வீர விளையாட்டுக்காக சாதாரண விவசாயிகள் முதல் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரை நாட்டின ஜல்லிக்கட்டு காளைகளை தங்கள் குழந்தைகளை போல் பராமரித்து பிரத்தியேகப் பயிற்சிகள் கொடுத்து வளர்ப்பார்கள்.

இந்த ஜல்லிக்கட்டு காளைகள், மற்றக் காளைகளை காட்டிலும் விலை மிக அதிகம். ஒரு காளையை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை விலை கொடுத்து வாங்கி வளர்க்கிறார்கள். சிலர், ஒன்றிற்கும் மேற்பட்ட காளைகளை வாங்கி வளர்க்கிறார்கள். இந்த காளைகளுக்காக தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை செலவிடுவார்கள்.

தீவனம், சிறப்பு ஊட்டச்சத்து உணவுகள் உள்பட ஒரு காளையை பராமரிக்க நாள் ஒன்றுக்கு குறைந்தப்பட்சம் ரூ.250 முதல் ரூ.500 வரை செலவிடுகிறார்கள். இந்த காளைகளை விவசாய பயன்பாட்டிற்கு பயன்படுத்த மாட்டார்கள். இப்படி எந்த வருமானமும், எதிர்பார்ப்பும் இல்லாமல் முழுக்கமுழுக்க ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே இந்த காளைகளை வளர்க்கிறார்கள்.

தற்போது ஊரடங்கால் வருமானம் இல்லாமல் நலிவடைந்த காளை வளர்ப்பாளர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

அவர்கள் காளைகளையும், ஜல்லிக்கட்டு காளைகளையும் பாதுகாக்க அரசு நேசக்கரம் நீட்ட வேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து அலங்காநல்லூரை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர் பொன்குமார் கூறுகையில், ‘‘தென் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மட்டுமே சுமார் 8,500 ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளன.

தற்போது ‘கரோனா’ ஊரடங்கால் விவசாயப்பணிகள் முதல் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. அன்றாட வீட்டு செலவுகளுக்கே மக்கள் பணமில்லாமல் திண்டாடுகின்றனர்.

விவசாயப்பணிகள் முடங்கியதால் தீவனப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அப்படியே தீவனம் கிடைத்தாலும் அதை வாங்கி கொடுக்க வருமானம் இல்லாமல் ஜல்லிக்கட்டுகாளை வளர்ப்போர் கஷ்டப்படுகிறார்கள். ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அழகே, அதன் உடல் வலுவும், வீரமும்தான்.

வசதிப்படைத்தவர்கள், வழக்கம்போல் தீவனம், ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்கி ஜல்லிக்கட்டுகளின் உடல் ஆரோக்கியத்தை நலிவடையாமல் பராமரிக்கின்றனர்.

ஆனால், தற்போது தொழில்கள், வேலைவாய்ப்பு இல்லாததால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பாளர்கள், காளைகளை பராமரிக்க முடியாமல் நலிவடைந்தகாளை வளர்ப்பார்கள் சிரமப்படுகின்றனர்.

சரியான தீவனம் கிடைக்காமல் ஜல்லிக்கட்டு காளைகள் உடல் மெலியத்தொடங்கியுள்ளன. அரிசி கஞ்சி மற்றும் பழைய சோறு சாப்பிட்டு செரிமான பிரச்சனையால் அவதிப்படுகின்றன.

மதுரை அருகே சிக்கந்தர்சாவடி வீர பாண்டி என்பவர் 17 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கிறார்கள். இவர், லாரி ஓட்டுனர். தற்போது வருமானமே இல்லாமல் தீவனமும் வாங்கி கொடுக்க முடியாமல் சிரமப்பட்டார்.

அவரை நேரில் சென்று பார்த்து, 2 ஏக்கர் வைக்கோலை வழங்கினோம். அதுபோல் கால்நடை மருத்துவரையும் அழைத்து சென்று அவரது ஜல்லிக்கட்டுகாளைகளுக்கு சிகிச்சை கொடுத்தோம். இவரை போல் பலர் ஜல்லிக்கட்டுகாளைகளை பராமரிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையினர் உதவ வேண்டும், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x