Last Updated : 29 Apr, 2020 12:54 PM

 

Published : 29 Apr 2020 12:54 PM
Last Updated : 29 Apr 2020 12:54 PM

இலங்கை கடற்படையில் 181 பேருக்கு கரோனா: நமது ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

இலங்கையில் கடற்படையினர் 181 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இச்சூழலில், நமது ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கை கடற்படை வீரர்களில் 181 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உறுதி செய்யப்பட்ட வீரர்களில் 90 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும், சந்தேகத்தின்பேரில் மேலும் 4 ஆயிரம் கடற்படை வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அந்நாட்டுக் கடற்படையின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தில், முப்படைகளையும் சேர்த்து 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகிறார்கள். இவர்களில் யாருக்கும் இதுவரையில் முகக்கவசம், கையுறை உள்ளிட்ட எதுவும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதிகாரிகளைத் தவிர மற்றவர்கள் தனிமனித விலகலைக் கடைப்பிடிப்பது சாத்தியமில்லை என்பதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதுபற்றி ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியபோது, "எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் மிகமிக நெருக்கமாகப் பணியாற்றுபவர்கள். ஒருவர் எந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்துகிறபோது, அதற்கான குண்டுகளை நிரப்புவது உள்ளிட்ட வேலைக்காக மேலும் இரு வீரர்கள் அவருக்குப் பக்கத்திலேயே இருப்பார்கள். அவர்களில் பலர் பதுங்குக் குழியில் இருந்து பணிபுரிபவர்கள். இவ்வாறு பதுங்குக் குழியில் இருப்போரும், நீர் மூழ்கிக் கப்பலில் பணிபுரிவோரும் மூக்குடன் மூக்கு உரசும் அளவுக்கு நெருக்கமாக இருப்பவர்கள்.

ராணுவ வீரர்களுக்கு இதுவரையில் அரசு சார்பில் முகக்கவசங்களோ, கையுறைகளோ வழங்கப்படவில்லை. அவர்கள் தங்கள் சொந்த செலவில்தான் அவற்றை வாங்கிக் கொள்கிறார்கள். சமையலுக்குத் தேவையான பொருட்களை ராணுவ வீரர்களில் சிலர்தான் சந்தைகளுக்குப் போய் வாங்கி வருகிறார்கள். அப்போது கை கழுவுவதற்கான சோப்புகளைக்கூட அவர்களேதான் வாங்கிக் கொள்கிறார்கள்.

t1

இலங்கை ராணுவத்தில் தலைமைக்குக் கட்டுப்பட்டு செயல்படும் தன்மை குறைவு. எனவே, அவர்கள் பொறுப்பில்லாமல் வெளியே சுற்றியிருக்கலாம். நம்முடைய ராணுவ வீரர்கள் அப்படியல்ல என்றாலும்கூட, விடுமுறையில் ஊர் சென்றுவந்த வீரர்கள் மூலம் நோய் பரவ வாய்ப்புண்டு. இதுவரையில் நமது ராணுவ வீரர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகத் தகவல் இல்லை.

ராணுவ வீரர்கள் உடல் வலிமை வாய்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குத் தொற்று ஏற்பட்டாலும் அறிகுறிகள் வெளிப்பபட கால தாமதமாகலாம். அதற்குள்ளாக மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதுகுறித்து மத்திய அரசும், பாதுகாப்புத் துறையும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x