Last Updated : 27 Apr, 2020 11:32 AM

 

Published : 27 Apr 2020 11:32 AM
Last Updated : 27 Apr 2020 11:32 AM

குழந்தைமையை நெருங்குவோம்: 9- தோல்வியும் நல்லது

நம் குழந்தைகள் வெற்றியையே சந்திக்க வேண்டும், மகிழ்வாகவே இருக்க வேண்டும் என்று நினைக்காமல் தோல்வி வந்தாலும் துன்பம் நேர்ந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவர்களைப் பக்குவப்படுத்துவோம்.

நாம் நமது குழந்தைகளை கையில் தாங்குகிறோம், கண்ணின் மணி போல காக்கிறோம். அது தான் சிறந்த பெற்றோருக்கான அளவுகோலாக வகுத்து வைத்திருக்கிறோம்.

விளைவு, 'அச்' என்று தும்மினால் மருத்துவர் வீட்டு வாசலில் நின்றுவிடுகின்றோம். இல்லை நாமாகவே உடனடியாக மருந்து மாத்திரைகளைக் கொடுத்துவிடுகின்றோம். இப்படியாக, எதிர்ப்பு சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கிக்கொண்டே இருக்கின்றோம். விளையாட்டில் கூட தோற்கக் கூடாது என எண்ணுகிறோம். அதனால் தோல்வியை எதிர்கொள்ளும் தகுதியை தடுக்கிறோம்.

எனது பயணம் ஒன்றின்போது ஏலகிரி மலை கிராமத்தில் தங்கிப் பணி செய்யும் மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது மலைகிராமவாசிகள் எப்படி அவர்களின் குழந்தைகளுக்கு மருத்துவம் செய்கிறார்கள் என்பது பற்றி விசாரித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது அவர் சிறு உபாதைக்கும் உடனடி மருத்துவத்தை ஏன் நாடக் கூடாது என்பதனை விளக்கினார்.

நகரங்களில் நடு இரவில் கூட என் கிளினிக்கின் கதவைத் தட்டிய பெற்றோர் உண்டு. குழந்தை துடிக்கிறான் எனக் கதறுவார்கள். உண்மையில் உடலில் பிரச்சனை என்றால் அதைத் தானாக சரிசெய்துகொள்ளும் திறமை உடலிற்கு உள்ளது. இதை நோய் எதிர்ப்புசக்தி (immunity) என்கிறோம். ஆனால் இத்தகைய இயற்கையான எதிர்ப்புத் தன்மையை (resistance ) நாம் உடனடி மருத்துவம் பார்த்து அடியோடு அழித்துவிடுகிறோம்.

சில நோய்கள் மருத்துவம் இல்லாமலேயே குணமாகிவிடும், அதற்காக மருத்துவரை பார்க்கவே வேண்டாம் என்று அர்த்தமில்லை, அவரை எப்போது பார்ப்பது என்பதில் புரிதல் வேண்டும்.

குழந்தைகளைக் கையில் தாங்கும் மனோபாவத்தால் குழந்தைகளின் உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் பெரும் பாதகத்தினை செய்து வருகின்றோம்.

என் குழந்தையின் கண்ணில் இருந்து கண்ணீர் வரக்கூடாது. என் குழந்தை விளையாட்டாகக் கூட தோற்கக்கூடாது என்ற எண்ணங்கள் இங்கு பெரும்பாலான பெற்றோர்களிடமும் இருக்கிறது.

எனக்குக் கிடைக்காத எல்லாம் என் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர் குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுகின்றனர். காலப்போக்கில், கேட்டது உடனே கிடைக்க வேண்டும் என்ற மனப்போக்கு குழந்தைகளுக்கு வந்துவிடுகிறது. ஒரு சில மணி நேரம் கூட தாக்குப்பிடிக்கமுடியாமல் பிடிவாதம் அவர்களைத் தொற்றிக் கொள்கிறது.

அதேபோல், பெற்றோர் தங்களின் குழந்தைகளை வெளியே சக குழந்தைகளுடன் விளையாட விடுவதில்லை. பிஞ்சுகளின் கால்கள் மண்ணை தொட்டே மாமாங்கம் கடந்திருக்கும். இந்த ஊரடங்கு இன்னும் அதனை தீவிரப்படுத்தி இருக்கிறது. பெருவாரியான இடங்களில் மண்ணைப் பார்க்க கூடா முடியாத அவலம் நிலவுகிறது.

இன்னொரு வருத்தமான விஷயமும் இருக்கின்றது. குழந்தைகள் ஒன்றாக கூடினால் அவர்களுக்கு தானாக விளையாட வருவதில்லை. தொலைக்காட்சி சம்பந்தமாகவே அவர்கள் விளையாட்டுகளைக் கட்டமைக்கின்றார்கள்.

பூங்காக்களில் விளையாடும் போது பெற்றோர்களின் கண் பார்வையிலேயே விளையாட வேண்டிய நிலை உள்ளது. பூங்கா சறுக்கில் குழந்தை ஏறும்போது கூட பெற்றோர் அருகே நின்று கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். ஆயிரத்தெட்டு அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் பெற்றோர்கள் உடன் வராத குழந்தைகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டு தன் குழந்தையை நீ விளையாடு என்பார்கள். குழந்தையை சுற்றி ஒரு கண்ணோ ஒரு கைப்பிடியோ இருந்துகொண்டே இருக்கின்றது.

கீழே விழுந்துவிட்டால் உடனே இதுக்கு தான் சொன்னேன் இங்கெல்லாம் விளையாட வேண்டாம் என்று கடிந்து கொள்வார்கள்.

ஆனால் கடந்த தலைமுறையினரை யாரைக் கேட்டாலும் அவர்கள் யார் மேற்பார்வையிலும் விளையாடி இருக்க மாட்டார்கள். என்ன விளையாடினீர்கள் என்றாலும் தெரியாது. ஆனால் காலை முதல் இருட்டும்வரை விளையாடி இருப்பார்கள். கீழே விழுந்து சிறு காயம் ஏற்பட்டாலும் கூட அலட்டிக் கொள்ளாமல் விளையாட்டைத் தொடர்ந்திருப்பார்கள்.

இக்கால பெற்றோர் குழந்தைகள் தோல்வியை சுவைக்கவே கற்றுத் தருவதில்லை. வலியை அவர்கள் அருகே அண்ட விடுவதில்லை. செயற்கையாக வலியை கொடுக்க வேண்டாம், செயற்கையாக தோல்விகளை சந்திக்க வைக்கச் சொல்லவில்லை ஆனால் அவை நிகழும் போது அது வாழ்வில் ஓர் அங்கமென கற்றுத்தர வேண்டும். அல்லது அதனை கண்டும் காணாதது போலவும் இருந்துவிடலாம். விழுந்துவிட்டால், தட்டிவிட்டு ஓடு. தோல்வியை ஏற்றுக்கொள்ள கற்காவிட்டால் வாழ்வின் அடுத்த அடுத்த படிகளில் பெரும் சிரமங்களை சந்திப்பார்கள். நட்பு வட்டம் குறுகிக்கொண்டே இருக்கும். வாழ்கை என்பது வெற்றிகளால் மட்டுமே கட்டமைக்கப்பட்டு இருக்காது, அது பெரும் திருப்பத்துடனும் அதிர்ச்சிகளுடன் நிரம்பியதாக இருக்கக்கூடும்.

நம் குழந்தைகள் வெற்றியையே சந்திக்க வேண்டும், மகிழ்வாகவே இருக்க வேண்டும் என்று நினைக்காமல் தோல்வி வந்தாலும்; துன்பம் நேர்ந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவர்களைப் பக்குவப்படுத்துவோம்.

-விழியன் (சிறார்களுக்கான எழுத்தாளர்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x