

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லையைச் சேர்ந்த ஆதரவற்றோருக்கு பிரியாணி சமைத்து வழங்கியுள்ளனர் தன்னார்வலர்கள் சிலர்.
கரோனா தொற்று உலகையே முடக்கிவைத்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் 21-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 2-ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு மே 3 வரை அமலில் உள்ளது.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு ஆதரவற்றோரை பசி, பட்டினியில் ஆழ்த்தியுள்ளது. என்னதான் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் முகாம்கள் ஏற்படுத்தி ஆதரவற்றோர் தங்கவைக்கப்பட்டாலும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிலர் தாங்கள் இருந்த இடத்திலேயே முடங்கியுள்ளனர்.
அத்தகையோரைத் தேடி சமூக நல ஆர்வலர்கள் சிலர் இணைந்து பிரியாணி சமைத்து வழங்கியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து திருநெல்வேலி சந்திப்பு மற்றும் அதனைச் சுற்றி உள்ளவர்களுக்கு இன்று கோழி பிரியாணி வழங்கினர்.
இதனைப் பலரும் ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
பசித்தவர்களுக்கு அன்றாடம் பசியாற உணவு கொடுக்கும்போது ஒரு சில நாள் அதைக் கொஞ்சம் ருசியாகவும் கொடுத்தால் கூடுதல் இன்பம் சேரும் அல்லவா என மணிகண்டன் பிரியாணி வழங்கியதற்கான காரணத்தை முன்வைத்தார்.
சேவையிலும் கூட மேன்மை காக்கும் மணிகண்டன் மற்றும் குழுவினரை பொதுநல ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
-மு.லெட்சுமிஅருண்