

சிவகங்கையில் ஊரடங்கால் வீட்டில் முடங்கியவர்களுக்காக இலவசமாக புத்தகங்களை விற்பனையாளர் ஒருவர் வழங்கி வருகிறார்.
சிவகங்கை - மதுரைரோடு காளவாசல் பகுதியில் தமிழக் குடியோன் நூல் அங்காடி நடத்தி வருபவர் முருகன் (36). அங்கு குறைந்த விலையில் பழைய புத்தகங்கள் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் பலரும் பொழுதை கழிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து அவர்களுக்கு உதவும் வகையில் முருகன் தனது கடையில் உள்ள 600 நூல்களையும் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அவரது கடையில் காலை 8 முதல் பகல் 12 மணி வரை புத்தகங்களை வழங்குகிறார். பலரும் சமூக இடைவெளியுடன் வந்து நாவல், சிறுகதைகள், வரலாற்று நூல்கள், சுயசரிதை, கவிதை, போட்டித் தேர்வுக்கான நூல்கள் உள்ளிட்ட நூல்களை வாங்கிச் செல்கின்றனர்.
இவரது செயலை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து குறித்து முருகன் கூறுகையில், ஒருமுறை மட்டும் வாங்கிச் செல்வோர் புத்தகத்தை வைத்து கொள்ளலாம். அதே நபர் மீண்டும் புத்தகம் வாங்க வந்தால், ஏற்கெனவே வாங்கிய புத்தகத்தை கொடுத்துவிட்டு தான், வேறு புத்தகத்தை எடுத்துச் செல்ல முடியும். ஒருவருக்கு ஒரு புத்தகம் மட்டுமே கொடுக்கப்படும்.
சிவகங்கை பகுதி மக்களுக்கு புத்தகம் படிப்பதற்கு ஒருவாய்ப்பாக இருக்கும். இந்த முயற்சி பலருக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வத்தையும் தூண்டும், என்று கூறினார்.