Last Updated : 18 Apr, 2020 07:38 PM

 

Published : 18 Apr 2020 07:38 PM
Last Updated : 18 Apr 2020 07:38 PM

சித்திரை திருவிழா ரத்து எதிரொலி: ஃபேஸ்புக்கில் வைரலாகும் மதுரைவாசியின் ஆதங்கப் பதிவு

மதுரை

தென்மாவட்டத்தில் மிக பிரசித்த பெற்றது சித்திரை திருவிழா. மீனாட்சி திருக்கல்யாண வைபவம், தேரோட்டம், கள்ளழகர் எதிர் சேவை, வைகை ஆற்றில் இறங்குதல், தசாவதாரம் என, இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வால் மதுரையை விழாக்கோலம் பூண்டு இருக்கும்.

ஆண்டுக்கொருமுறை நடக்கும் இத்திருவிழா காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் வசிக்கும் மதுரைக்காரர்கள் குடும்பத்தினருடன் திரண்டு வருவர். எப்போது வரும் இத்திருவிழா என, காத்திருக்கும் மதுரைக்காரர்களுக்கு கரோனாவால் இவ்வாண்டு ஏமாற்றமே மிஞ்சியது. திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை வாசிகளை சாதி, மத எல்லைகளைக் கடந்து ஒன்றிணைக்கும் சித்திரைத் திருவிழா ரத்து உள்ளூர்க்காரர்களுக்கு பெருஞ்சோகமாகச் சேர்ந்துள்ளது.

இந்நிலையில், சித்திரைத் திருவிழா ரத்து அளித்த வேதனையை மதுரைக்காரர் ஒருவர் தனது முகநூலில் வருந்திப் பதிவிட்டிருந்தார்.

சாய்கிருட்டிணன் என்ற அந்த நபரின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. சித்திரைத் திருவிழாவின் சிறப்பை தனது எழுத்தில் வடித்த அந்த நபரின் பதிவு:

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் சித்திரைதிருவிழா ரத்து செய்யப்பட்டதில்லை.

அந்த 10 நாட்கள் இருக்கேசொர்கத்துலயே திருவிழா, மக்கள் பெருவிழா. அன்னைக்கே திருமணம் செய்து வைத்து உச்சிகுளிர்ந்து, உள்ளம் குளிர்ந்தவர்கள் தான் மதுரக்காராய்ங்க.

நெஞ்சு ஒரு மாதிரி கனம்மா இருக்கு. தெருவுக்கு தெரு முந்தி அடித்துக்கொண்டு அன்னை மீனாட்சியை பார்க்கும் ஆர்வம் இருக்கே.. அன்னை முகத்தை பார்த்த உடனே உடம்புல ஒரு சிலிர்ப்பு தட்டுமே, கண்கள் குளமாகுமே

கல்யாணத்துக்கு அன்னைக்கு ஊருக்கே சோறு போடுவாய்ங்க மதுரக்காராய்ங்க. அதுக்கு படியளப்பாளே என் ஆத்தா.

தேர் இழுக்கும்போது சாதி மத பேதம் இன்றி எல்லா மக்களும் சொக்கனையும், அன்னையையும் மலர் தூவி வரவேற்பார்களே.

ரோஸ் மில்க், பானகம், மோர், தண்ணி, ரஸ்னானு அள்ளி, அள்ளி குடிப்போமே.. கோவிச்சுக்கிட்டு வந்த எங்க கள்ளழகர தண்ணிபீச்சி அடிச்சு குளிர்விப்போமே..

சாரை சாரையாக மக்கள் கூட்டம் அங்கும் இங்கும் சுற்றுமே.. எல்லாம் அம்மையை, அப்பனை, கோவிந்தனைபார்க்க..

பொங்கல், விசிறி, புளியோதரை, தயிர் சாதம்னு அன்பையும்அளிப்பையும் வாங்குவோமே.

அன்னையின் கழுத்தில் திருமாங்கல்யம் ஏறும்போது தங்கள் கழுத்திலும் ஏற்றி கொள்ளும் எங்கள் தாய்மார்களே.

தேர் இழுத்து முடிச்சதும் தேர்ல கட்டியிருக்கும் வடத்தை பிக்கவயசு வித்தியாசம் இல்லாமல் போட்டிபோடுவோமே.

எல்லா பாரத்தையும் ஆத்தா மீனாட்சியிடம் இறக்கி வைத்து விட்டு பெருமூச்சுவிட்டு செல்வோமே..

நாமும் ரோஸ் மில்க் குடித்துவிட்டு நமக்காக 10 நாட்கள் குடும்பத்தை மறந்து, சரியாக சோறு சாப்பிடாமல், தூங்காமல் திருவிழாவை பாதுகாப்பாய் கொண்டுசெல்லும் காவலர்களுக்கும் கொடுப்போமே..

"சாமி எங்க வருது? போயிருச்சா?

ஏலக்காய் மாலை போறட்டுருக்காங்க பாருங்கக்கா மீனாட்சிக்கு..

இன்னைக்கு பூத வாகனம்

அம்மா சவ்வு மிட்டாய்வேணும் மா

கண் கவர் நகைகள் கள்வர்கள் கை பரித்துவிடலாகாது

உலகமே பார்த்து வியக்கும்ஒப்பற்ற பெருவிழா..

ப்பீ.. ப்பீ.. ப்பீ

சாமி சாமி இங்கபூ போடுங்க.. சாமி எனக்கு..

இந்தாங்க பாட்டி நீங்ககொஞ்சம் சாமிபூ வெச்சுக்கங்க..

நாளைக்கு திருக்கல்யாணம் எத்தனை மணிக்கு?

சேதுபதி ஸ்கூல்ல சாப்பிட்டிருவோம் பங்கு.. லைன்ல நிப்பாய்ங்க பாத்துக்கலாம்.. சீக்கிரம் விட்ருவாய்ங்க.

அக்கா இங்க சரடு குடுங்க..

அந்த சேனல் போடுடா அதுலதான் கிளியராகாட்றாய்ங்க..

தாலி கட்டியாச்சா??

பங்கு காலை 4 மணிக்குவந்துருடா கீழமாசிவீதிக்கு.. அப்பறம் கூட்டம் ஏறிரும்.. வடம்புடிக்க முடியாது..

நாமெல்லாம் யாரு "சிங்கம்"..

123 சொல்லணுமா ரெடி 1.. 2... 3.. ஆஹ் டன்டனக்குற டனக்குனக்குற..

கட்டயெல்லாம் போடல.. வந்துட்டாரு மாரிமுத்து அண்ணே.. அண்ணே கட்ட போடலேலண்ணே.. ஆஹ் கட்டபோடலையாம்.. இழுங்க.

கொட்டடிக்கணுமா?? அடிங்க.. டன்டனக்குறடனக்குனக்குற

தேர் இழுத்த பக்தகோடிகள்அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ராத்திரி பூபல்லக்கு பாத்தில்லையே.. அம்புட்டு அழகாஇருக்கும்..

வாராரு .. வாராரு.. அழகர்வாராரு..

கள்ளழகர் பச்சை பட்டுஉடுத்தி வைகைஆற்றில் இறங்கினார்"

இந்த பேச்சுக்களையெல்லாம் இந்த வருஷம் கேக்க முடியாதுல்ல...

மனம் குமுறுகிறது, நெஞ்சுஅடைக்கிறது, கண்களில் வெப்பநீர் வழிகிறது..

இதுக்கு மேல என்னசொல்றதுன்னு தெரியல.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x