Published : 07 Apr 2020 05:19 PM
Last Updated : 07 Apr 2020 05:19 PM

கரோனா விரட்டிய கோடை செய்திகள்: சுவாரசியத் தொகுப்பு

கோடை வெயில் வாட்டிக்கொண்டிருக்கிறது. கரோனா காரணமாக உலகமே ஊரடங்கியிருப்பதால், திரும்பிய பக்கமெல்லாம் அது தொடர்பான செய்திகள்தான். கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அப்படி எத்தனை செய்திகளை கரோனா வைரஸ் விரட்டியிருக்கிறது எனக் கற்பனையாக யோசித்ததில் கிடைத்தவை இவை:

* ஏப்ரல் தொடக்கத்திலேயே கோடை வெயில் 38 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. பொதுமக்கள் அவதி. சாலைகள் வெறிச்சோடின.

* வெயில் சீசனில் மக்களைக் குளிர்விக்க தர்பூசணி பழங்கள் நகரில் குவிந்தன. கேரளத்திலிருந்து மாம்பழம், பலாப்பழம் போன்ற பழ வகைகள் வண்டி வண்டியாக வந்திறங்கின.

* சிறுவாணி நீர்மட்டம் கடைசி வால்வை எட்டியது. பில்லூர் அணைக்கும் தண்ணீர் வரத்து குறைவு. மாநகராட்சிப் பகுதிகளில் 15 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் விட முடிவு.

* செல்வபுரம், கணபதி பகுதிகளில் மக்கள் குடிநீருக்காக சாலை மறியல். போலீஸார் விரட்டியடிப்பு. 101 பேர் கைது.

* ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியது. வெளிநாட்டுப் பயணிகள் தொட்டபெட்டாவில் குவிந்தனர். மலர்க் கண்காட்சிக்குத் தாவரவியல் பூங்கா தயாராக உள்ளது. ஆளுநர் கண்டுகளிக்க வந்திருக்கும் புதுவகை மலர்கள்.

* கோவை குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டன. பெரியகுளம், வாலாங்குளத்தில் சாக்கடை கழிவுகள். ஆகாயத் தாமரைகளுக்குத் தீர்வு தருமா மாநகராட்சி?

* 8.57 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். மாணவர்களைவிட மாணவிகளே அதிகம். விடைகள் சுலபமாக இருந்ததாக மாணவிகள் பேட்டி.

* 11.06 லட்சம் பேர் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதினர். பிட் அடித்ததாக 52 பேர் பிடிபட்டனர்.

* கடும் வெயிலுக்கு கிருஷ்ணகிரியில் முதியவர் ஒருவர் பலி. பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்.

* அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நீடிக்கிறது. வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

* கடுமையான வெயில், வறட்சி காரணமாக கோவை குற்றாலம், டாப்ஸ்லிப், முதுமலை ஆகிய சுற்றுலாத் தலங்கள் மூடல். சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x