Published : 15 Jan 2020 09:53 AM
Last Updated : 15 Jan 2020 09:53 AM

எங்கே இந்த ஊர்ப் பொங்கல்?

பாரததேவி

விளைந்துவிட்ட நெற்கதிரை அறுத்துப் பெறக்கி, களம் சேர்த்து அடித்து, காத்துக்காகத் தூத்திவிட்டு எல்லாவற்றையும் ஒன்றுசேர்க்கையில் களத்துக்கு நடுவே புத்தம் புதிதாய் விளைந்த நெல் தங்கக் குவியலாய்க் குவிந்திருக்கும். அந்தக் குவியலைப் ‘பொலி’ என்று சொல்வார்கள்.

பசுஞ்சாணியெடுத்துப் பிள்ளையார் பிடித்து, அதன் மீது எரியும் ஊதுபத்தியைக் கொளுத்திவைத்தபின், எல்லோரும் ஒன்றுசேர்ந்து ‘பொலியோ பொலி’ என்று குரல்கொடுத்து மகிழ்ச்சி அடைவார்கள். இந்தப் பொலி நெல்லில் கைகொண்டு அளக்காமல், பத்துப் படி பிடிக்கும் பனைநார் பெட்டியில் நிறைய அள்ளி, ஏற்கெனவே வீட்டில் வாங்கி வைத்திருக்கும் புது மண் பானையில் வயலுக்குச் சொந்தமானவர் கொட்டி வைத்துவிடுவார். அதுதான் பொங்கல் வைப்பதற்கான நெல். அதன்பிறகுதான் மரக்காலைக்கொண்டு அளப்பார்கள். முதலில் அளக்கும் மரக்காலை ‘லாபம்’ என்று அளந்துபோட்டுவிட்டு எண்ணிக்கையோடு ஒன்று, இரண்டு, மூன்று என்று சாக்குகளில் அளந்துபோட்டு மூடையாகக் கட்டுவார்கள். இப்படி அளக்கும்போது பெண்கள் ஒன்றுசேர்ந்து குலவையிட, அவர்களின் குலவைச் சத்தத்தில் சுற்றிலுமிருக்கும் மரங்களில் அடைந்திருக்கும் பறவைகள் மிரண்டு போய்த் திக்கத்துக்கு ஒன்றாகப் பறந்தோடும்.

பத்து இருபது மூடைகள் அளந்து முடித்தபின், முந்தியேந்தி நிற்கும் நெல்லறுத்த கூலிக்காரர்களுக்குக் கூலியாக ஒரு மரக்கால் நெல் அளந்து போடுவார்கள். கூலிக்காரர்கள் நெல் வாங்குவதற்காகப் பனை ஓலைப் பெட்டி வைத்திருந்தாலும் முதன்முதலாக வாங்கும் கூலி நெல்லை ஒரு பிரசாதம்போல் பக்தியோடு முந்தியை இரு கைகளிலும் ஏந்தி வாங்கிக்கொள்வார்கள். மூன்று முறை வாங்கும் பொலி நெல்லை யாரும் அடுக்குப் பானையிலோ குலுக்கையிலோ போட்டு வைப்பதில்லை. அதற்கென்று கோலம் போட்டுவரும், புது மண் பானையில்தான் போட்டு வைப்பார்கள். வயல்களில் தப்புக்கருது (தவறி முளைப்பவை) பெறக்கி, அவற்றைப் புதுப் பானையில் பத்திரப்படுத்தி வைப்பார்கள்.

வருசப் பிறப்பு

பொங்கல் நாள்தான் விவசாயிகளுக்கு வருசப் பிறப்பு. வருசப் பிறப்பு வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னாலேயே நிலம் உள்ளவர்கள் பழைய கூரையைப் பிரித்துவிட்டுப் புது கம்பந்தட்டை, புது சோளத்தட்டை என்று புதிதாக வேய, பிஞ்சை நிலம் இல்லாதவர்கள் பனை ஓலையாலும் மலையிலிருந்து அறுத்துக்கொண்டுவரும் தரகுப் புற்களாலும் கூரையை வேய்ந்துவிடுவார்கள். கருதறுத்த தட்டை, தாள்களைக் கால்நடைகளுக்காக வீட்டுக் கொல்லைப்புறத்தில் படப்பாக ஆண்கள் அடுக்கிவிடுவார்கள். புதுக் கூரை, புதுத் தவசம், புதுசாகத் தீவனமும் அடுக்கியிருப்பதால் அந்தக் கிராமமே புது வாசம் கொண்டு வீசும். அந்த வாசத்தில் மண் வாசமும் நிறைந்திருக்கும்.

பொங்கலுக்கு முதல்நாள் யாருக்கும் விடிய விடிய உறக்கமிருக்காது. இளவட்டங்கள் வீடுகளையெல்லாம் வெள்ளையடிக்க, வெள்ளையடித்த சுவர்களில் குமரிகள் செம்மண் கோலமிட்டு அழகுபடுத்துவார்கள். பழைய மண்பானைகள், ஆப்பை, துடுப்பு, பழைய துணிமணிகள் எல்லாவற்றையும் ஓடையில் கொண்டுபோய்ப் பெண்கள் எரித்துவிட்டு வருவார்கள். ஆனால், மரத்தாலான உப்பு மரவையை மட்டும் எரிக்க மாட்டார்கள். உப்பு மரவையை எரித்தால் வீட்டிலுள்ள சீதேவியும் அதோடு போய்விடுமாம்.

ஆண்கள் பெரிய பெரிய குந்தாணிகளை உருட்டிக்கொண்டு வந்து மந்தையில் போடுவார்கள். நாளைய தினம் பொங்கல் வைப்பதற்காகப் புதுப்பானையிலிருக்கும் நெல்லைக் கொண்டுவந்து குந்தாணியிலிட்டு குமரிகள் குத்த, நடுத்தரப் பெண்கள் அந்த நெல்லைப் புடைத்து அரிசியாக்குவார்கள். கிழவிகள் பொங்கலுக்காகப் பொடைத்த நெல் உமி யார் காலிலும் பட்டுவிடக் கூடாதென்பதற்காக ஒன்றாகக் கூட்டித் தீயிட்டு எரிப்பார்கள். எரித்த சாம்பலை ஒரு பொட்டியில் பத்திரமாக அள்ளி வைப்பார்கள். மறுமுறை நெல் விதைக்கும்போது இந்தச் சாம்பலைக் கொண்டுபோய் ஒவ்வொரு வயலிலும் சிதறிவிட்டு வருவார்கள். அப்போ வெள்ளாமை நன்றாக விளையுமாம்.

பொலிவு பெற்ற வீடு

ஆண்கள் ஏற்கெனவே பிடுங்கி வைத்த கண்ணுபீளைச் செடியோடு மாவிலை, கம்பந்தட்டையை வீட்டுக் கூரையில் சொருகிவிட்டு ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் பசும்புல், நாத்து, ஆமணக்குக் கொலை என்று அறுத்துக்கொண்டு வருவார்கள். பொங்கல் நாளுக்காகவே அவற்றை வைத்திருப்பார்கள்.

குமரிகள் வாசலில் பசுஞ்சாணம் தொளித்து பெரிய, பெரிய புள்ளிக் கோலங்களைப் போட்டு செம்மண் கோலமிட்டு, கூரைகளில் படர்ந்து பூத்திருக்கும் மஞ்சள் பூசணிப் பூக்களைப் பறித்து கோலங்களில் நடுவில்வைக்க, வாசலே பூந்தோட்டமாக மாறி கண்ணைப் பறிக்கும். வீடு சிறிதாகக் குடிசை வீடாக இருந்தாலும் சாணியிட்டு மெழுகியதில் வீடு முழுக்க இருக்கும் தானிய வாசத்தோடு இந்தச் சாணி வாசமும் போட்டி போடும். பித்தளைக் குடம், வெங்கலக் கும்பா, வட்டில், சொம்பு என்று அனைத்தையும் புளியும் செங்கல் பொடியும் போட்டு விளக்கி, வீட்டுக்குள் அடுக்கியிருப்பதைப் பார்த்தால் ஏதோ வீடே புதுமணப் பெண்ணை நகைகள் போட்டு அலங்கரித்ததைப் போலிருக்கும்.

முதல் பொங்கல்

இளவட்டங்கள் ஆடுகளையும் மாடுகளையும் குளிப்பாட்ட வைக்கோல் சுருளோடு குளங்களுக்கு வெள்ளன பத்திக்கொண்டு போக, அவர்களுக்குப் போட்டியாகக் குமரிகள் சிறு சிறு அம்மிகளில் அரைத்த மஞ்சள் உருண்டையோடு தலைக்குத் தேய்த்துக் குளிக்க செரட்டைகளில் (கொட்டாங்கச்சி) கரம்பையோடு போவார்கள். முதல் நாளிட்ட மருதாணியில், அவர்களின் நகங்கள் சிவந்து கிடக்கும். பெண்கள் குளித்து முழுகி, இத்தனை நாளும் அடுக்குப் பானைக்குள் 'மடிப்பு' என்ற பெயரில் சுருட்டி வைத்திருந்த புதுச்சேலைகளை எடுத்து கொசுவம்வைத்து உடுத்திக்கொண்டு, நெற்றியில் குங்குமமும் கழுத்தில் தாலிச் சொருகுகளில் பூவுமாகப் பொங்கல் வைக்கப் புறப்படுவார்கள். முகத்தில் தாய்மையோடு மஞ்சளும் பொலிவு கண்டு மிளிரும். அவர்களைச் சுற்றிலும் குழந்தைகளின் பட்டாளம்.

முதலில் ஊர் அம்மனுக்குத்தான் பொங்கல் பானை. ஏழெட்டுப்படி (பத்துக்கிலோ) வேகும் வெங்கலப் பானையை ஊர் பொதுவில் வாங்கி வைத்திருப்பார்கள். அது குமரிகள் தேய்ப்பில் பொன்னாக மின்னும். அம்மன் கோயிலுக்கு முன்னால் பெரியவர்கள் கோளாறு சொல்ல, இளவட்டங்கள் அடுப்புக்கூட்ட, இரண்டு மூன்று குமரிகள் சேர்ந்து பானையைத் தூக்கிவந்து அடுப்பில் வைக்க, இரண்டு பெண்கள் துவரம் பயறையோ பருத்திமார் கட்டையோ தூக்கிவந்து போடுவார்கள். ஒரே விறகில்தான் பொங்கல் வைக்க வேண்டும். எல்லா வீடுகளில் மாடுகள் இருப்பதால் எல்லோரும் ஒவ்வொரு செம்பிலும் பால், நெய் என்று கொண்டுவருவார்கள்.

பொங்கலுக்கு இரண்டு நாளுக்கு முந்தியே கருப்பட்டி, பனங்கிழங்கு, புது அரிசியைப் போட்டு வைக்க பனைநார்ப் பெட்டி, பொங்கலை வைத்துச் சாப்பிட ஓலைக் கொட்டான் என்று விதவிதமாகக் கொடுத்த பனை மரங்களுக்குச் சொந்தக்கார நாடார் விடியுமுன்பே வந்துவிடுவார். முந்தின நாள் ‘பூவும் சரமும்’ கொண்டுவந்து கொடுத்த பூக்காரப் பண்டாரம் வரும் வழியிலேயே, ஏதோ ஒரு கிணற்றில் முழுக்குப் போட்டவாறு முதல் ஆளாக வந்து நிற்பார். ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஊர்காலி மாடு மேய்ப்பவர்கள், வயல் வேலைக்கென்றே பிறந்ததுபோல் நடுவையிலிருந்து களத்து வேலைவரை செய்பவர்கள் என்று எல்லோரும் சூரியனுக்குப் பொங்கல் படைக்கும் நேரத்தைப் பார்க்க ஆவலோடு வந்துவிடுவார்கள்.

சூரியனுக்கே சிறப்பு

தோட்டங்களில் விளைவதால் தோகை கொண்ட கரும்புகள் ஒருபுறமும் குவிந்து கிடக்கும். பிஞ்சைகளுக்குக் கண்ணுபீளைச் செடிகளைக் கட்டப் போனவர்களும் ஏர் கலப்பையில், மாட்டு வண்டியில், இறைக்கும் கமலையில் என்று எல்லாவற்றுக்கும் மாவிலையோடு கட்டி முடித்தவர்களும் வந்துசேர பொங்கல் பானை பொங்குவதற்குத் தயாராக இருக்கும்.

அந்தக் காலத்தில் ‘முந்திரிப் பருப்பு, திராட்சை, ஏலக்காய்’எல்லாம் கிடையாது. செழிக்கப் பாலும் நெய்யும் கருப்பட்டியும் சேர்ந்த பொங்கல்தான். பொங்கலில் அரிசியைப் போடும்போது பெண்கள் ஒன்றுசேர்ந்து குலவை போடுவார்கள். இவர்கள் போடும் குலவைச் சத்தத்தில் வானத்தில் வேகமாக நகரும் தை மாத மேகம் சற்று நின்று, இவர்களைப் பார்த்துவிட்டுப் பின்னர் வேகமாக ஓடும். அது ஓடும் வேகத்தில் பனிக்காற்று அடங்கி வீசும்.

இந்தச் சுமங்கலிகள் பொங்கல்வைத்து இறக்கும் நேரமும் கிழக்கு வானில் செந்நிறப் பட்டுடுத்தி சூரியன் புறப்பட்டு வரவும் சரியாக இருக்கும். முதல் பொங்கலின் சிறப்பு சூரியனுக்குத்தான். அதன்பிறகு அம்மனைப் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பிறகுதான் மற்றவர்கள் எல்லோருக்கும். ஒலைக் கொட்டானில் பொங்கல், கரும்புத் துண்டு, பனங்கிழங்கு என்று வைத்துக் கொடுத்துவிட்டு, தேங்காய் உடைத்து, பத்தி கொளுத்தி ஊர் அம்மனைக் கும்பிட்டு வருகிறவர்கள், தங்கள் வீடுகளில் கோலத்தின் மீது இருக்கும் புது அடுப்புகளில் பொங்கலுக்கான உலையை ஏற்றுவார்கள்.

எல்லா நாளும் இருக்காதா?

மறுநாள் மாட்டுப் பொங்கல். மாடுகள் கட்டிய தொழுக்களில்தான் இந்தப் பொங்கலை வைப்பார்கள். அது மாடுகளுக்கு மட்டுமல்ல; கலப்பையிலிருந்து விவசாயத்துக்குப் பயன்படும் அத்தனை பொருட்களுக்கும்தான். மாடுகளின் உடம்புகளில் குங்குமப் பொட்டு, கொம்புகளுக்கு வர்ணம். கழுத்து மணிகளுக்குச் சந்தனம் என்று வைப்பதோடு கலப்பையிலிருந்து மண் வெட்டிவரை குங்குமப் பொட்டுதான். அன்றைய தினம் ஆடு மாடுகளுக்கும் பொங்கல், கரும்பு, பனங்கிழங்கென்று... இனிப்புப் பண்டங்களோடு பசுமையான புற்களும் உண்டு.

அன்றைய நாட்களில் வீட்டுக்கு வீடு உலை வைப்பது கிடையாது. ஊரே சேர்ந்து சோறாக்கி, குழம்பு வைத்து தெருக்களில் வாழை இலை விரித்து விருந்து படைப்பார்கள். சாப்பிட்டு முடித்தவுடன் எல்லோரும் மந்தையில் ஒன்றுதிரள, பிறகு நிலவு வெளிச்சத்தில் விதவிதமான விளையாட்டுகள்தான். பெரியவர்களும் இதில் மண் தட்டி ஓடுவார்கள். பெண்கள் கும்மி அடிப்பார்கள். முந்திச் சுருட்டி விளையாடுவார்கள். குமரிகளும் இளவட்டங்களும் விளையாடுவதுபோல் நடிக்க, குழந்தைகள் மட்டும் விடியும் நாளெல்லாம் பொங்கல் நாளாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தோடு கரும்பைத் தின்றுகொண்டிருப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x