Published : 15 Jan 2020 09:57 AM
Last Updated : 15 Jan 2020 09:57 AM

இன்பம் பொங்கும்  இந்தியப் பொங்கல்

செல்வேந்திரன்

பொங்கல் தொடர்பான அனைத்தும் எங்களுக்குப் பாலபாடம். வெள்ளையடிக்க சுண்ணாம்புச் சிப்பியைக் கையால் பொடித்துப்பார்த்து வாங்குவோம். பருவட்டான மூக்குத்திக் காய்களைக் கவனமாகப் பொறுக்குவோம். மாங்காய்ல பெருசு, தேங்காய்ல சிறுசு, பரப்பரிசிக்கு அச்சுவெல்லம், சர்க்கரைப் பொங்கலுக்கு மண்டவெல்லம் எனப் பார்த்துப் பார்த்து வாங்குவோம். அது மட்டுமல்ல; வெல்லம் பழசாபுதுசா, புளித்ததா, ரேசன் அஸ்காவை நைசாகக் கலப்படம் செய்ததா, என அத்தனையும் நுண்மான்நுழைபுலத்துடன் சோதித்து வாங்குவோம். மார்கழி முதலே பொங்கலுக்குத் தயாராவதற்கும் எங்களுக்குத் தீவிரமாகக் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது.

அம்மாவும் அப்பாவும் வெவ்வேறு சாதி. வெவ்வேறு மதம். இருவேறு பண்பாடு. ஆனால், பண்டிகைகள் சார்ந்து அவர்களுக்குள் மாச்சர்யங்கள் எவையும் இருந்ததில்லை. பண்பாட்டுடன்மனிதர்களைப் பிணைத்துக் கட்டும் கயிறாகத்தான் விழாக்களை இருவரும் கருதினார்கள். 'தமிழர் திருநாள் என இதைச் சுருக்குவது தவறு, இது இந்தியப் பெருநாள்' என்பார் அப்பா. மகரசங்கராந்தியும் மஹாபிகுவும்போகியும் லோஹ்ரியும் தைப் பொங்கலும் அவருக்கு வெவ்வேறானவை அல்ல. எந்தஒரு பொருளாதாரப் பாதிப்போ இழப்போ துக்கநிகழ்வோகூடக் குடியானவன் வீட்டுப் பொங்கலைப் பாதிக்கக் கூடாது என்பதுவிதி.

பொங்கல் வைபவம்

தீபாவளிக்கு முந்தைய இரவில்அடுப்படியில் வேகும்பெண்கள் பொங்கலுக்கு முந்தைய இரவிலோதூங்கவே மாட்டார்கள். மார்கழி முழுக்க சேகரம்செய்த வண்ணக் கோலப்பொடிகள், ஜிகினாக்கள், கோலப்புத்தகங்கள் சகிதமாக நடு இரவில் வீட்டு முற்றத்தில் இறங்கிவெள்ளி முளைக்கும்வரை தெருவடைக்கக் கோலமிடுவார்கள். கோலத்தில்இறுதியில் இரண்டொரு எழுத்துப் பிழைகளுடன் 'ஹேப்பி பொங்கல்' எழுதி, ஒரு பயல்நடமாட முடியாதபடி காவலுக்கு ஒரு சிறுமியையும் போட்டுவிடுவார்கள்.

பார்ப்பதற்குப்பெரிய அளவு

அச்சுவெல்லம்போல இருக்கும் சிமெண்டால் ஆன மூன்று தனித்தனிக் கற்கள். இதற்குப் பொங்கல் கட்டிகள் எனப்பெயர். இதுதான் பொங்கல் விடுவதற்கான அடுப்பு. முந்தைய இரவே துப்புரவாகக் கழுவிச் சுண்ணாம்பு அடிக்கப்பட்டு காவியால் குறுக்குப் பட்டைகள் வரைந்து அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த மூன்று கட்டிகளை முக்கோணமாக வைத்து, அவற்றின் மீது பித்தளைப் பானையைவைப்பார்கள். அன்றும் இன்றும் பொங்கல் விடுவதற்குக் காய்ந்த பனை ஓலைகள்தாம் பயன்படுத்தப்படுகி்ன்றன.

நெய் ஊற்றித் திரியிடப்பட்ட விளக்கின் முன்ஆளுயர வாழைஇலையை விரித்து,களிமண்ணால் கோபுரம் கட்டித் தலையில் பொங்கப்பூசெருகப்பட்ட கண்ணுப்பிள்ளையாரும், தலையில் அறுகம்புல் சொருகப்பட்ட சாணிப் பிள்ளையாரும், அச்சுவெல்லப் பிள்ளையாரும் வீற்றிருக்க காய்கறிகள், கனிகள், கிழங்குகள் படையலிடப்படும். உழக்குமுழுக்க அரிசியும் நெல்லும் கொண்டுவந்து வைக்கப்படும். துவாரகபாலகர்கள்போல இருபக்கங்களிலும் கரும்புகள். கரும்பு ஒன்றில் வேரோடுபிடுங்கப்பட்ட மஞ்சள் குலையும் சேர்ந்திருக்கும். அய்யனார் வழிபாடு உடையவர்கள் சுரைக்காய் பயன்படுத்தக் கூடாது என்பதொரு ஐதீகம். பாகற்காயும்படையலுக்கு விலக்கப்பட்டது.

கிழக்கில் பொங்குமா?

சிவப்புப் பச்சரிசியில் பொங்கலிடுவதுதான் எங்களூர் வழக்கம். அதைக் களையக் களைய நீரில் இளஞ்சிவப்பு வண்ணம் படர்ந்து கொண்டே இருக்கும். களைந்த நீரைபானையின் கழுத்து விளிம்புவரை ஊற்றிமூன்று பக்கங்களிலும் இருந்து தீயிடுவார்கள். பிள்ளைகளுக்குப் பிடித்த வேலை இது. பனை ஓலைசடசடத்து எரியும் வெக்கை முகத்தில் அடித்தாலும் புகைஅப்பி கண்ணில் நீர் வழிந்தாலும், மூக்கை உறிஞ்சிக்கொண்டு அவரவர் பக்கங்களில் ஆவேசமாகத் தீயிடுவார்கள். களைந்தநீர் கொதித்து யார் பக்கம்வழிகிறது என்பதில் போட்டி. இதைத்தான் பால் பொங்குவது என்பார்கள். கிழக்குப் பக்கமாகப் பொங்குவதுதான் ஐஸ்வர்யம் என்பதுநம்பிக்கை. அப்படித்தான் பொங்கவும் செய்யவும்.

பிற்பாடுதான் அந்த ரகசியம் பிடிபட்டது. வீட்டுப் பெண்கள் பானையைப் பொங்கல் கட்டியின்மீது வைக்கும்போதேகிழக்குப் பக்கம்சற்று வாட்டம் கொடுத்துத்தான் வைப்பார்கள். மங்கலத்துக்கான சிறிய முன்னெச்சரிக்கை ஏற்பாடு! நீர் கொதித்து பால் பொங்கும்போது வீட்டுப் பெண்கள் கூடி நின்றுகுலவையிடும் சத்தம்வானைக் கிழிக்கும். நீரின் அளவைஒரு கரண்டியால் குறைத்து, களைந்து வைத்த பச்சரிசியைக் கொதி நீருக்குள் போடுவார்கள். இனி தீ அதிகம் போடக் கூடாது. அடிப் பிடித்துவிடும். 'எரிவதும் அணைவதும் ஒன்றே' எனும் போகனின் சொற்களுக்கேற்ப ஓலையைக் கீற்றுகீற்றாகக் கிழித்து எரிக்க வேண்டும். பொங்கலிடும்போது கவனமாகஇருக்க வேண்டிய தருணம் இதுதான்.

மரத்தினால் செய்த சிறியதுடுப்பு மட்டைஒன்றைப் பானைக்குள் போட்டு, துடுப்பு போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சம் கை அசந்தாலும் பொங்கல் கெட்டித்து விடும்அல்லது அடிப் பிடித்துவிடும். முற்றாக வெந்துவிட்டதை உறுதிசெய்தபின், கரும்பில் கட்டியமஞ்சள் குலையைஅவிழ்த்துப் பொங்கல் பானையின் கழுத்தைச் சுற்றிப் படையலின்முன் இறக்கிவைப்பார்கள்.

சிறார் பொங்கல்

பொங்கலிடும் இடத்துக்கு வலதுபக்கம், தரையில் சுண்ணாம்பு அல்லதுஅரிசி மாவால்ஒரு சிறியவீடு வரையப்பட்டிருக்கும். ஒரு வாசல், தார்சா, அடுக்களை, இரண்டு- மூன்று படுக்கை அறைகள் கொண்டவீடு. அதைச் சிறுவீடு என்பார்கள். சமையல் கட்டுபாகத்தில் சோடாமூடி அளவுள்ள செப்புச் சாமான்களில் அரிசி, பருப்பு, தானியங்கள் வைக்கப்பட்டிருக்கும். வீட்டுக் குழந்தைகளுக்குக் குதூகலமளிக்கக்கூடிய ஏற்பாடு இது.

சிறு வீட்டின் முன்பு பரபரப்பு கூடியிருக்கும். பொங்கல் கட்டியின் மினியேச்சர் சைஸ் அடுப்பு மூட்டப்பட்டு சிறியபாத்திரத்தில் பால்ஊற்றிப் பிள்ளைகளைப் பொங்கலிடச்செய்வார்கள். பால்பொங்கியதும் படையலுக்குத் தேங்காய் உடைத்து, சூடம்காட்டி சிறுபூஜை. உங்கள்அப்பாவுக்குப் பத்து தேவாரம் தப்பும் தவறுமாகத் தெரியுமென்றால், அதுஉங்கள் ஊழ். இதற்குள் பசிஉச்சிக்கு ஏறியிருக்கும்.

காராபூந்திக் காகம்

அட பரப்பரிசியை மறந்துவிட்டேனே. களைந்து வைத்தபச்சரிசியில் சிறுபாகம் எடுத்து, அதில்அச்சுவெல்லத்தைப் பொடித்துப் போட்டு, துருவிய தேங்காயைப் போட்டு மூடிவைத்து விடுவார்கள். சில நிமிடங்களில் அரிசியின் ஈரத்தோடு அச்சுவெல்லம் ஊறி ஒருதேவ சுவைக்கு அந்தப்பலகாரம் தயாராகஇருக்கும். ஓலையில் தீ போடும்போதே பத்துப் பனங்கிழங்கையும் அப்பாநெருப்பில் சுட்டுஎடுத்து வைத்திருப்பார். நெருப்பில்சுடப்பட்ட பனங்கிழங்கைப் போல மதம்பிடிக்கச் செய்யும் இன்னொரு மணம்மண்ணில் இல்லை.

ஒரு பக்கம் பொங்கல், மறுபக்கம் பரப்பரிசி, இன்னொரு பக்கம்சுட்ட பனங்கிழங்கின் சுவை மணம். வயிற்றிலோ பெருங்கொண்ட பசி. ஆனால், உண்ணமுடியாது. 'காக்கா பாடினியார்' மனம் வைக்கவேண்டும். தட்டில் இலை விரித்து பொங்கலைப் படையலிட்டு மொட்டை மாடியில் ஏறி நின்றுஅடிவயிறு வலிக்க ‘கா கா’ என்று சிறுவர்கள் கதறுவார்கள். 'கொஞ்சம் பொறு தம்பி வரிசைப்படிதான் வர முடியும்' என்பதுபோல் காக்கைகள் அலட்டிக் கொள்ளும். எல்லா வீட்டுக் கூரையிலும் பொங்கல் காத்திருக்கும் திமிர்! ஒரு மணி நேரம் பாடாய்படுத்தாமல் காக்காவந்து பொங்கலில் வாய் வைக்காது. நான் பசி பொறுக்காதவன். ஒருஉபாயம் கண்டுபிடித்தேன். முந்தைய இரவே மாணிக்க நாடார் கடையில் கொஞ்சம் காராபூந்தி வாங்கி வைத்துவிடுவேன். பொங்கல் மீது பூந்தியைத் தூவினால் போயே போச்சு! காராப் பூந்திக்கு மயங்காத காகங்கள் இல்லை.

பொங்கல் படி

படையலுக்கு முன் பெரியவர்கள் மூன்று, சிறியவர்கள் பதினொன்று எனத் தோப்புக்கரணம் போட்டு விபூதிபூசிக்கொண்டு அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து பொங்கல் உண்போம். பிறகு, பொங்கலின் மிகஇனிய அம்சமான பொங்கல் படிகலெக்சன். பொங்கல் அன்று சிறுவர்களுக்குப் பணம்கொடுத்தே ஆகவேண்டும். வீட்டிலுள்ளவர்களிடம் பொங்கல் படிவாங்கிவிட்டு உறவினர்கள் வீட்டுக்கு ஓடுவோம். செல்லும் வழியில் எதிர்படும் எல்லோரிடமும் ‘பால் பொங்கிச்சா’ எனக்கேட்டே ஆக வேண்டும். மெரினா பீச்சில் புத்தாண்டு நள்ளிரவில் எல்லாப் பிள்ளைகளிடமும் பயல்கள் 'ஹேப்பி நியூ இயர்' சொல்வார்களே, அப்படி. ஒரு ஆண்டுமுழுவதும் அப்பாகொடுக்கிற பாக்கெட் மணி ஒரேநாள் பொங்கலில் கிடைத்து விடும்.

கலெக்சன் முடியவும் பிள்ளையார் கோவில் பூஜைமணியடிக்கவும் சரியாகஇருக்கும். சங்காபிஷேக பூஜை. தேவாரங்கள், வியாபாரங்களாக ஒருநெடிய பூஜை. சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தால் ‘அன்புக் குழந்தைகளே… அருமைப் பெரியோர்களே..’ என சாலமன் பாப்பையாவின் சங்கீதம் தொடங்கி இருக்கும்.

அது என்ன சிறு வீட்டுப் பொங்கல்?

தைப்பொங்கலின் இரவு முன்னோர்களுக்கானது. மரித்த குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவர் நினைவாகவும் சர்க்கரைப் பொங்கல் படையலிடப்பட்டு நினைவுகூரப்படுவார்கள். அத்துடன் அன்றைய நாளின் கொண்டாட்டங்கள் நிறைவுக்கு வந்துவிடும். மறுநாள் மாட்டுப் பொங்கல். அனேகமாக மாடுள்ளவர்கள் மட்டுமே தோட்டத்தில் பொங்கலிடுவார்கள். வீடுள்ளவர்களுக்குப் பொங்கலுக்கு அடுத்த இருநாட்கள் கரிநாட்கள். வெளியே செல்வதோ தொழில் செய்வதோ நிகழக்கூடாத நாட்கள். ஆகவே, பெயருக்கேற்ப ஆட்டுக்கறி எடுத்து முந்தைய நாள்பொங்கலுடன் சேர்த்து உண்டு மகிழ்வாருண்டு.

எங்கள் சமஸ்தானத்தில் சிறுவீட்டுப் பொங்கல் என்றும் பக்கத்து சமஸ்தானங்களில் காணும் பொங்கல் என்றும் அழைக்கப்படும் ஒருபொங்கல் மிச்சம் இருக்கும். அவரவர்வசதிப்படி, விடுமுறை கிடைக்கும் வாகைப் பொறுத்து வீட்டுக்கு வீடுஇது மாறுபடும். சிறுவீட்டுப் பொங்கல் சிறுவர்களுக்கானது. பொங்கலிட்டு முடித்த மறுகணம் உணவுப் பொட்டலங்களைக் கட்டிக்கொண்டு வெளியூருக்குச் சிற்றுலா சென்றுவிட வேண்டும். தோப்பிலோ வயல்வெளியிலோ ஆற்றங்கரையிலோ கடற்கரையிலோ கல்மண்டபத்திலோ ஷாப்பிங் மாலிலோ அமர்ந்து பொங்கல் உண்டு, கரும்பை அரைத்து சக்கையைத் துப்பி, பனங்கிழங்குப் பீலிகளால் அந்த இடத்தைஅலங்கரித்துவிட்டு ஊர்திரும்புவது மரபு.

சிறு வீட்டுப் பொங்கலிடும்வரை வாசல் கோலத்தில் சாணியில் பூசணிப்பூ சொருகி வைக்கவேண்டுமென்பது விதி. முந்தைய வருடப்பொங்கல் படையலில் வைத்த சாணிப்பிள்ளையார், களிமண் பிள்ளையாரோடு, தினசரிவைத்த பூசணிப்பூ பிள்ளையாரையும் ஒருபையில் எடுத்துச் சென்று காணும்பொங்கலன்று நீர்நிலைகளிலோ வயல்வெளிகளிலோ கரைத்துவிட்டால், அவை விடுவிடுவென்று நீரில்கரைந்து இந்தியா எனும் மாபெரும் பண்பாட்டு நீரோட்டத்தில் சென்று கலந்துவிடுவதைக் கண்டு நிமிர்கையில், அப்பாஇல்லாத முதல்பொங்கல் என்பதைஎண்ணி என்கண்ணில் நீர்கோத்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x