Published : 05 Aug 2015 10:25 AM
Last Updated : 05 Aug 2015 10:25 AM

துவாரகா பிரசாத் மிஸ்ரா 10

விடுதலைப் போராட்ட வீரரும், பிரபல எழுத்தாளருமான துவாரகா பிரசாத் மிஸ்ரா (Dwarka Prasad Mishra) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l உத்தரப் பிரதேசத்தின் பண்டரி கிராமத்தில் (1901) பிறந்தார். தந்தை ஒப்பந்ததாரர். ராய்ப்பூர், கான்பூர், ஜபல்பூரில் கல்வி பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே இலக்கிய ஆர்வமும் எழுதும் திறனும் கொண்டிருந்தார். இவர் எழுதிய ‘பாரத் மாதா கே ப்ரதி’ என்ற கட்டுரை 1918-ல் வெளிவந்தது.

l அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது, நேரு குடும்பத்துடன் தொடர்பு ஏற்பட்டது. 1920-ல் காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். தொடர்ந்து பல போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

l‘ஸ்ரீ சாரதா’ மாத இதழ், ‘தைனிக் லோகமத்’ நாளிதழ், ‘சாரதி’ நாளிதழ் மற்றும் வார இதழ்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார். சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

l சிறையில் இருந்தபோது ‘மானஸ் கா ராம் அவுர் சீதா’ என்ற நூலை எழுதினார். இதில் துளசி ராமாயணத்தை பகுப்பாய்வு செய்துள்ளார். 1937-ல் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய மாகாண அமைச்சரவையில் இடம்பெற்றார்.

l அரசியல் குறித்து இவர் எழுதிய ‘மேரே ஜியா ஹுவா யுக்’ போன்ற புத்தகங்கள் பிரபலமானவை. லாலா லஜ்பத்ராய் கொலை குறித்து ‘லோகமத்’ பத்திரிகையில் இவரது கட்டுரையைப் படித்த மோதிலால் நேரு, ‘தலைசிறந்த குற்றவியல் வழக்கறிஞரின் நேர்த்தியான குற்றப் பத்திரிகையைவிட சிறப்பாக இருக்கிறது’ என்று பாராட்டினார்.

l ஆச்சார்ய ஹசாரி பிரசாத் திவேதி, ராமதாரி சின்ஹ தினகர் போன்ற மூத்த இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அவர்கள் சந்திக்கும்போதெல்லாம் இலக்கிய விவாதங்கள் நடைபெறும்.

l ராமாயணம், மகாபாரதம் மற்றும் காவியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். மகாபாரத கிருஷ்ணர்தான் இவரது ஆதர்ச நாயகர்.1942-ல் சிறையில் இருந்தபோது ‘கிருஷ்ணாயன்’ என்ற காவியத்தை படைத்தார். நேருவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அரசியலை விட்டு விலகியிருந்தார். அப்போது, சாகர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பணிபுரிந்தார். பேராசிரியர்கள், மாணவர்களைவிட இவர் அதிகம் படித்ததாக கூறப்படுகிறது.

l மத்தியப் பிரதேச முதல்வராக 2 முறை பணியாற்றினார். சிறந்த நிர்வாகி. முடிவெடுப்பதில் வல்லவர். அனைவரும், குறிப்பாக கிராம மக்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.

l அரசியலில் இருந்து 1971-ல் வெளியேறி, இலக்கியப் பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்தார். ‘லிவிங் அன் எரா’ (Living An Era) என்ற இவரது சுயசரிதை நூல் 20-ம் நூற்றாண்டின் ஒட்டுமொத்த வரலாற்றையும் உள்ளடக்கிய படைப்பு. பல வரலாற்று ஆராய்ச்சி நூல்களையும் எழுதினார்.

l இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம், உருது இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த மேதை. சமஸ்கிருதம், உருது கவிதைகளை இந்தியில் மொழிபெயர்த்தவர். இலக்கியவாதி, வரலாற்று அறிஞர், கல்வியாளராக புகழ்பெற்ற துவாரகா பிரசாத் மிஸ்ரா 87 வயதில் (1988) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x