Last Updated : 23 Nov, 2019 03:57 PM

 

Published : 23 Nov 2019 03:57 PM
Last Updated : 23 Nov 2019 03:57 PM

ஒரு நிமிடத்தில் 112 முறை டைமண்ட் தண்டால்: சாதனை படைக்கும் கிராமத்து இளைஞர்

சிவகாசி

தண்டால் எடுப்பதில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

சிவகாசி அருகே ஈஞ்சார் நடுவப்பட்டியைச் சேர்ந்தவர் காளிராஜ் (23). பட்டப் படிப்பு முடித்துவிட்டு போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.

இவரது பெற்றோர் வீருகாளை-சுப்புலட்சுமி ஆகியோர் கூலித் தொழிலாளர்கள். சிறு வயதிலிருந்தே ஏதாவது ஒன்றில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்த காளிராஜ் தண்டால் எடுப்பதில் உலக அளவில் இதுவரை நிகழ்த்தப்பட்ட சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளைப் படைத்து வருகிறார்.

இதுகுறித்து காளிராஜ் கூறுகையில், ”ஸ்பைடர்மேன் நக்கல் புஷ்அப்-பில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் ஒரு நிமிடத்தில் 56 முறை செய்துள்ளது சாதனையாக இருந்து வந்தது. அதை முறியடிக்கும் வகையில் ஒரு நிமிடத்தில் 67 முறை தண்டால் எடுத்து சாதனை படைத்துள்ளேன். இச்சாதனை யுனிக் வேர்ல்டு ரெக்கார்டு சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து பயிற்சி பெற்றேன்.

மேலும், ஒரு நிமிடத்தில் 112 முறை டைமண்ட் தண்டால் மற்றும் பல்வேறு விதமான தண்டால்களைச் செய்து இதற்கு முன் கலாம் புக்-ஆப் ரெக்கார்டிலும் இடம்பெற்றுள்ளேன்.

எனக்கு பிரகதீஸ் என்ற நண்பர் மிகவும் உறுதுணையாக இருந்து வருகிறார். இதுமட்டுமின்றி கின்னஸ் சாதனைக்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இதற்காக தலைகீழாக தண்டால் எடுக்க பயிற்சி எடுத்து வருகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x