Published : 13 Nov 2019 05:53 PM
Last Updated : 13 Nov 2019 05:53 PM

மன அழுத்தத்தாலும் நீரிழிவு நோய் ஏற்படும்: என்ன செய்ய வேண்டும்? 

நவ.14 - சர்வதேச நீரிழிவு விழிப்புணர்வு தினம்

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் நீரிழிவு (Diabetes) விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நவம்பர் 14-ம் தேதி நீரிழிவு விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த வருடத்தின் கருப்பொருள் 'உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கவும்'. நீரிழிவின் தாக்கம், குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பாதிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள 11 பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இதில் 50% பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதே இன்னும் கண்டறியப்படவில்லை. 42.5 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தீவிரமாக உடல் நலம் பாதிக்க கூடிய ஆபத்துக்கு ஆளாகின்றனர். எண்பதுகளில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நீரிழிவு நோயினால் அதிக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை மணி விடுக்கப்பட்டது. ஆகையால் அங்கே இருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு சென்றடைந்தது. உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நீரிழிவு நோய் வராமல் தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.

ஆனால் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் தொழில் புரட்சி காரணமாகவும், வாழ்க்கை முறை மாற்றங்களாலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீரிழிவு என்பது என்ன?
நீரிழிவு என்பது நாள்பட்ட நோய் ஆகும். நமது உடலில் உள்ள இன்சுலின் என்கிற ஹார்மோன் உணவில் இருக்கும் க்ளுக்கோஸ் என்ற ரசாயனத்தை இரத்த நாளங்களில் செலுத்தி உயிரணுக்களில் ஆற்றலை உருவாக்குகிறது. அனைத்து கார்போஹைட்ரெட் உணவுகளும் இரத்தத்தில் க்ளுக்கோஸ் ஆக உடைக்க படுகின்றன. இன்சுலின் குளுக்கோஸை உயிரணுக்களில் பெற உதவுகிறது.

கணையத்தில் இருந்து இன்சுலின் சுரக்காத பொழுது அல்லது உடலால் இன்சுலினைப் பயன்படுத்த முடியாமல் போகும் பொழுது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. எதிர்மறை எண்ணங்களால் உந்தப்பட்டு குறிப்பிட்ட உணவை அளவுக்கு அதிகமாக உண்ணும் பொழுது, அல்லது கவனமின்மையால் உணவு மற்றும் தின்பண்டங்களை உட்கொள்ளும் பொழுது நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது.

நீரிழிவு நோயை சில வகைகளாகப் பிரிக்கலாம்.

Type 1; எந்த வயதினரையும் இந்த வகை நீரிழிவு பாதிக்கக்கூடும். ஆனால் பெரும்பான்மையாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். உடலில் இன்சுலின் குறைவாகவோ அல்லது முற்றிலுமாகவோ சுரக்காத பொழுது இவ்வகைப் பிரச்சினை ஏற்படுகிறது.

Type 2; இந்த வகை நீரிழிவு பெரியவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.

Gestational; கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் க்ளுகோஸ் அதிகமாவதால், இந்த வகை நீரிழிவு நோய், கர்ப்பகாலத்தில் மட்டும் வரக்கூடியது. மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து கொண்டால் தாயும் சேயும் நலமாக இருப்பர். பொதுவாக இந்த வகை நோய், குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு மறைந்துவிடும். எனினும் எதிர்காலத்தில் தாய், மற்றும் குழந்தைக்கு Type 2 வகை நீரிழிவு வருவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு.

அறிகுறிகள் என்ன?
அதிக தாகம் எடுப்பது,
அடிக்கடி சிறுநீர் கழிப்பது,
உடல் சோர்வாக உணர்தல் ,
மங்கலான பார்வை ,
கை கால்களில் உணர்ச்சியின்மை

மன அழுத்தமும் நீரிழிவும்
மன அழுத்தத்தினால் நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? நீரிழிவும் மன அழுத்தமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது.

சிந்தித்து பாருங்கள். புலி உங்களை சமீபத்தில் துரத்தியதா? தினமும் காலையில் அவசர கதியில் அலுவலகம் செல்லும் உங்களைத் துரத்தும் பதற்றம்தான் அந்தப்புலி. ஆதிகால குகை மனிதனை புலி துரத்தும் பொழுது, அவனது உடலும் மனமும் பதற்றமடைகிறது, ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, அட்ரீனலின் என்கிற ஹார்மோன் சுரக்கிறது. உடல் ரத்தத்தை ஜீரண உறுப்புகளில் இருந்து பிரித்து தசைகளுக்குச் செலுத்துகிறது, இந்த சமயத்தில் ஜீரண உறுப்புகளுக்கு வேலை இருக்காது.

அப்போது புலியிடம் இருந்து தப்பிக்கும் மனிதன் குகைக்குள் ஓய்வு எடுக்கிறான். 20 நிமிடம் ஆனதும் அவனின் உடல் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. உங்கள் உடம்புக்கு புலி துரத்துவதும் அலுவலகதிற்கு அவசரகதியில் ஓடுவதற்கும் வித்தியாசம் தெரியாது, ஆகையால் குகை மனிதனுக்கு உண்டான அதே மனப் பதற்றம் உங்களுக்கும் ஏற்படுகிறது. உங்களுக்கும் குகை மனிதனுக்கும் ஒரே வித்தியாசம்தான் இருக்கிறது. குகை மனிதன் ஓய்வு எடுக்கிறான். ஆனால் நீங்கள் ஓய்வெடுப்பது இல்லை.

நாள் முழுவதும் அடுத்தடுத்து பம்பரம் போல சுழல்கிறீர்கள். ஆரோக்கியமற்ற உணவு வகைகளை நாடுகிறீர்கள், இதனால் உங்கள் உடம்பில் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால் நாள்பட்ட வியாதிகளான நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தள்ளப்படுகிறீர்கள்.

சிறுநீரகத்தின் மேல் இருக்கும் அட்ரீனல் சுரப்பி அனைத்து வகையான ஹார்மோன்களையும் உடலுக்கு விநியோகிக்கிறது. மன பதற்றம் அட்ரீனல் சுரப்பியைச் சோர்வடைய வைக்கிறது. ஆகையால் மன சோர்வு அனைத்து வகை நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது. குறிப்பாக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன.

நீரிழிவு நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்று அறிந்தவுடன் உங்கள் சிந்தனை இப்படி இருக்கக் கூடும். இதை நாங்கள் DABDA என்று கூறுவோம் ,

Denial (நமக்கு நோய் வந்திருக்கிறதா என்று சந்தேகம் எழும். அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது)

Anger (ஏன் எனக்கு மட்டும் இந்த நோய் வருகிறது என்று கோபம் ஏற்படும்)

Bargain (எவ்வளவு செலவானாலும் என்னைக் காப்பாற்றி விடுங்கள் என்று மருத்துவரிடமோ, உறவினர்களிடமோ, கடவுளிடமோ கெஞ்சுவோம்)

Depression (நீரிழிவு நோய், உடலின் அனைத்து பாகங்களையும் பாதித்து விடுமே, நான் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்க மாட்டேன் என்று மன அழுத்தம் கொள்வது)

Acceptance (சரி, இதை எப்படிச் சரிசெய்யலாம் என்று ஏற்றுக்கொள்வது)

நோய் வந்ததை ஏற்றுக்கொண்டு முறையான சிகிச்சைக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மருந்து, மாத்திரைகள் தவிர்த்து அன்றாட வாழ்க்கையில், சிலவற்றை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?
உங்களை நீங்களே அமைதிப்படுத்த ஒரு குகையை உங்களைச் சுற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
உணவை மெதுவாக, நிதானமாக ரசித்து, உணர்ந்து சாப்பிடுங்கள்.
அலுவலகம் செல்லும் பொழுது பாடல்களைக் கேட்டுக்கொண்டே போகலாம்.
அனாவசியமாக தொலைபேசி, செல்போன்கள் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
நேரத்திற்கு சத்தான உணவு உண்பது அவசியம்.
இரவு நீண்ட நேரம் விழிக்காமல் குறித்த நேரத்தில் தினமும் தூங்க செல்லுங்கள்.
நேரத்தை கையாளும் முறையை கற்றுக்கொள்ளுங்கள்.
மன அழுத்தத்தாலும் ஹார்மோன்கள் மாற்றம் ஏற்படும் என்பதை உணர வேண்டும்.
நேர்மறை எண்ணங்களுடன் இருப்பவர்களுக்கு, சீக்கிரமே குணமாகும்.

நேற்றைய தினத்தை நம்மால் திரும்பப் பெற முடியாது. ஆனால் நாளைய தினத்தை வெற்றியா, தோல்வியா என்பதை நாம் நிர்ணயிக்கலாம்.

- வந்தனா, மனநல ஆலோசகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x