Published : 02 Nov 2019 03:34 PM
Last Updated : 02 Nov 2019 03:34 PM

பருவமழையால் 60 சதவீதம் உற்பத்தி குறைவு: மதுரை மல்லி கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை

மதுரை

மழைக்காலமும், குளிர்காலமும் தொடங்கிவிட்டதால் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் மல்லிகைப்பூ உற்பத்தி 60 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால் இன்று (நவ.2) நிலக்கோட்டை சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,500 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், மதுரை, உசிலம்பட்டியில் கிலோ ரூ.2 ஆயிரமும் விற்பனையானது.

பூக்களில் அதிக மனமும், மனதிற்கு ஈர்ப்பும் கொண்டது மல்லிகைப்பூ. பெண்கள், இந்த பூவை விரும்பி வாங்கி தலையில் சூடுவார்கள். சாமி மாலை தயாரிப்பு, கோயில் பூஜைகள் மற்றும் சென்ட் தயாரிப்பிற்கும் மல்லிகைப்பூ அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் மல்லிகைப்பூ, 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படுகிறது. மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், ஈரோடு, கிருஷ்ணிகிரி மற்றும் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் மல்லிகைப்பூ அதிகம் விளைவிக்கப்படுகிறது.

இதில், ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில்(மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம்) விளையும் மதுரை மல்லிகைப்பூ ‘புவி சார் குறியீடு’ பெற்றது.

சுத்தமான வெள்ளை நிறத்தில், குண்டு குண்டாக முழுவதுமாக விரியாமல், மற்ற இடங்களில் உற்பத்தியாகும் பூக்களை விட அதிக மனமும் கொண்டது. அதனால், உள்ளூர் சந்தைகள் முதல் சர்வதேச சந்தைகள் வரை மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் விளையும் மதுரை மல்லிகைப் பூவுக்கு மவுசு அதிகம்.

மதுரையில் மட்டும் மல்லிகைப்பூ சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள மண் வளமும், சீதோஷநிலையும் மல்லிகைப்பூ உற்பத்திக்கும், அதன் சிறப்புக்கும் உகந்ததாக உள்ளது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மதுரையில் போதிய பருவமழை பெய்யாததால் விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வறட்சிக்கு இலக்காகின. ஆண்டு முழுவதும் நீரோட்டம் காணப்படும் வைகை ஆறும், ஏரி, குளங்களும் வறண்டன. அதனால், நீர் ஆதாரம் இல்லாமல் மதுரை மல்லிகைப்பூ குறைந்தளவே உற்பத்தியாகி வந்தது.

உற்பத்தியாகும் முதல் ரக மல்லிகைப்பூக்கள் சென்ட் தயாரிப்பிற்கு விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின. இரண்டாம் தரம், மூன்றாம் தரம் மல்லிகைப்பூக்களும் உள்ளூர் சந்தைகளுக்கும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் உள்ளூரில் மல்லிகை அபூர்வமானது.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதோடு கடும் குளிரும் அடிக்கிறது. இந்த சீதோஷனநிலைக்கு மல்லிகைப்பூ சரியாக வளராது. உற்பத்தியாகும் பூக்களும் தரமில்லாமல் இருக்கும்.

சந்தைகளில் வரத்து குறைவால் மல்லிகைப்பூக்களுக்கு கடந்த 2 வாரமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த தீபாவளி பண்டிகை நேரத்திலே மதுரை மல்லிகைப்பூ கிலோ 2 ஆயிரத்திற்கு விற்றது. தற்போதும் கடந்த சில நாளாக ரூ.1,500 முதல் ரூ.2000 வரை விற்கப்படுகிறது.

சில்லறை பூ வியாபாரிகளும் சந்தைகளில் கூடுதல் விலைக்கு மல்லிகைப்பூக்களை வாங்கி தொடுத்து விற்பதில்லை.

சில்லறை வியாபாரிகள் கடைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மதுரை மல்லிகைப்பூ ‘அபூர்வம்’ ஆகிவிட்டது.

இன்று மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரம் வரையும், உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில் கிலோ 2 ஆயிரமும் விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிலும் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்பனையாது.

தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி கூறுகையில், ‘‘பொதுவாக முகூர்த்த நாட்களில், விழாக் காலங்களில் மல்லிகைப்பூ அதிகமாக விற்கும். தற்போது முகூர்த்தம் இல்லாவிட்டாலும் விலை அதிகமாக உள்ளது.

மே, ஜூன், ஜூலை மாதங்களில் மல்லிகைப்பூக்கு நல்ல சீசன். அப்போது அதிகமாக உற்பத்தியாகும். மழைக்காலமும், குளிர் காலமும் தொடங்கும் நவம்பர், டிசம்பர் முதல் ஜனவரி வரை மல்லிகைப்பூ உற்பத்தி குறையும். அதனாலே, உற்பத்தி குறைந்து மல்லிகைப்பூ விலை உயர்ந்துள்ளது, ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x