Published : 11 Oct 2019 04:20 PM
Last Updated : 11 Oct 2019 04:20 PM

வெள்ளம், புயல் சேதத்தில் இருந்து காய்கறிகள், பழமரங்களை பாதுகாப்பது எப்படி?- விவசாயிகளுக்கு தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை டிப்ஸ்

மதுரை

வெள்ளம், புயல் சேதத்தில் இருந்து காய்கறிகள், பழமரங்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழை இந்தமாத இறுதியில் தொடங்க உள்ளது. பொதுவாக பருவமழைக் காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் புயல் பாதிப்பினால் பயிர் சேதம் ஏற்படலாம். மழைக்காலங்களில் வெப்பநிலை குறைந்து காற்றில் ஈரப்பதம் அதிகமாவதால் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கம் பயிர்களில் அதிகம் தென்படும்.

அதனால், பருவமழை சேதத்தில் இருந்து காய்கறிகள், பழமரங்கள், செடிகளை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்ககைள் குறித்து தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அனைத்து மாவட்டங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில்,
*தோட்டங்களை களைகள் இன்றியும் காய்ந்த இலை தழைகள் இன்றியும் பராமரிப்பதன் மூலம் பூச்சி மற்றும் நோய்களின் பெருக்கத்தை குறைக்கலாம்.
*இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 15 வைத்து ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
*இரவு நேரங்களில் விளக்குப் பொறிகளை வைத்து பெண் பூச்சிகளை கவர்ந்து அழிப்பதன் மூலம் முட்டையிட்டு பெருகுவதை தவிர்க்கலாம்.

காய்கறி பாதுகாப்புக்கு..
*காய்கறி பயிர் சாகுபடி செய்த நிலத்தில் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும்.
*தக்காளி, கத்தரி, மிளகாய் மற்றும் கொடிவகை காய்கள் ஆகியவற்றிற்கு முறையாக மண் அமைப்பதன் மூலம் நீர் தேக்கத்தினால் வேர்கள் அழுகுவதை தவிர்க்கலாம்.
*காய்கறிப் பயிர்கள் நடவிற்கு திறந்த வெளியில் நாற்றாங்கால் அமைப்பதைத் தவிர்த்து குழித்தட்டு முறையில் பாதுகாக்கப்பட்ட நிழல்வலைக் குடில்களில் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம்.

வாழை பாதுகாப்புக்கு:
* காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் இடங்களில் வாழை மரங்களைச் சுற்றி மண் அமைத்தும், சவுக்கு அல்லது யூகலிப்டஸ் குச்சிகள் மற்றும் கயிறுகள் மூலம் முட்டு கொடுத்தும் சாய்வதை தவிர்க்கலாம்.
* வாழைத்தார் உறைகளைக் கொண்டு வாழைத்தார்களை மூடுவதன் மூலம் மழைநீர் நேரடியாக காய்களில் பட்டு ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.
* வாழைத் தோப்பினைச் சுற்றி வாய்க்கால் எடுத்து மழைநீர் தேங்காமல் வெளியேற வடிகால் செய்ய வேண்டும்.
* காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும்.
* 90 சதவீத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும்.
* காற்று மரங்களின் ஊடே புகுந்து லகுவாக செல்லும் வகையில் பக்கக் கிளைகளையும் அதிகப்படியான இலைகளை கவாத்து செய்து மரம் வேரோடு சாய்வதை தடுக்கலாம்.

மலைத்தோட்டப்ப பயிர் பாதுகாப்புக்கு என்ன செய்யலாம்?

* நிழல் தரும் மரங்களில் தேவையற்ற கிளைகளை பருவ மழைக்கு முன்னரே கவாத்து செய்வதன் மூலம் நல்ல காற்றோட்டமான வசதியை ஏற்படுத்தி மலைத்தோட்டப்ப பயிர்களான காபி, மிளகு, டீ, ஆரஞ்சு போன்றவற்றில் ஏற்படக்கூடிய நோய்களைத் தவிர்க்கலாம்.
* கவாத்தின் போது வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்சி குளோரைடு 300 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து தடவி பூச்சி மற்றும் நோய் ஊடுருவுவதை தவிர்க்க வேண்டும்.
* தோப்புகளுக்கு நீர் பாய்ச்சுவதை இரண்டு நாட்களுக்கு முன்பே நிறுத்திவிடுவதன் மூலம் வேர்ப்பகுதி இறுகி மரம் காற்றில் சாயாமல் தடுக்கலாம்.

பொதுவானவை..
* தோட்டங்களில் காய்ந்த நோய்வாய்ப்பட்ட செடிகளையும் களைகளையும் அகற்ற வேண்டும்.
* அடிமரத்தை சுற்றி மண் அணைக்க வேண்டும். 1 முதல் 3 வயதுள்ள கன்றுகள் மற்றும் ஒட்டுச் செடிகளை முட்டுக் கொடுத்து நிலை நிறுத்திக் கொள்ளலாம். முட்டுக் கொடுப்பதற்கு பச்சை குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது.
* குடியிருப்பு பகுதிகள் மற்றும் கால்நடைத் தொழுவங்களை சுற்றி உள்ள மரங்களின் கிளைகளை அகற்றி விட வேண்டும்.
* பசுமைக்குடில் நிழல்வலைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* பசுமைக்குடிலின் உட்பகுதியில் காற்று உட்புகா வண்ணம் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடியிருக்க வேண்டும்.
* அருகிலுள்ள பெரிய மரங்களில் கிளைகளை அகற்றி விடவேண்டும்.
* பசுமை மற்றும் நிழல்வலைக் கூடங்களைச் சுற்றி சவுக்கு போன்ற காற்றின் வேகத்தை குறைக்கக்கூடிய மரங்களை உயிர்வேலியாக அமைப்பதன் மூலம் காற்றின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x