Published : 12 Jul 2015 01:43 PM
Last Updated : 12 Jul 2015 01:43 PM

பாப்லோ நெருடா 10

சிலி நாட்டின் மகத்தான கவிஞரும், ராஜதந்திரியுமான பாப்லோ நெருடா (Pablo Neruda) பிறந்த தினம் இன்று (ஜூலை 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* தென்அமெரிக்க நாடான சிலியின் பரால் நகரில் (1904) பிறந்தவர். இயற்பெயர் ரிக்கார்டோ எலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்டோ. பிறந்த சில நாட்களிலேயே தாயை இழந்தார். ரயில்வே கூலித் தொழிலாளியான தந்தை மறுமணம் செய்துகொண்டார். சிற்றன்னை இவரை மிகுந்த பாசத்துடன் வளர்த்தார். தனது 8-வது வயதில் நெருடா முதன்முதலில் எழுதிய கவிதையே இந்த அன்புத் தாயைப் பற்றியதுதான்.

* கவிதை எழுதுவதில் நாட்டமும் திறனும் கொண்டவர். சிறு வயதிலேயே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். 10 வயது முதல், பலரால் அறியப்படும் கவிஞராகப் புகழ்பெற்றார்.

* தந்தை இவரது எழுத்தையும் இலக்கிய நாட்டத்தையும் எதிர்த்தார். ஆனாலும்கூட, இவரது இலக்கிய ஆர்வம் தடைபடவில்லை. தந்தையின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்க 'பாப்லோ நெருடா' என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கினார்.

* உள்ளூர் பத்திரிகையில் இவரது முதல் கட்டுரை 13 வயதில் வெளிவந்தது. முதல் கவிதைத் தொகுப்பான 'புக்ஸ் ஆஃப் ட்விலைட்ஸ்' 19 வயதில் வெளிவந்தது. தொடர்ந்து கவிதை, உரைநடை, கட்டுரைகளை எழுதிவந்தார். இவரது கவிதைகள் பன்முகத் தன்மை கொண்டவை. இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன.

* காதல், யதார்த்தம், அரசியல் என பல சிந்தனைகளை இவரது கவிதைகள் மையமாகக் கொண்டிருந்தன. கவிதைகளை பச்சை மையில்தான் எழுதுவார். ஆசை மற்றும் நம்பிக்கையின் சின்னம் பச்சை என்பது அவரது கருத்து.

* சிறந்த அரசியல் தலைவர், ராஜதந்திரியாகவும் விளங்கினார். சிலி நாட்டின் தூதராக 1927-ல் பர்மா சென்றார். இலங்கை, சிங்கப்பூர், பர்மாவில் தூதராக 6 ஆண்டுகள் பணியாற்றினார். இந்த சமயத்தில் ப்ராஸ்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ், வால்ட் விட்மன் ஆகியோரது படைப்புகளை வாசித்தார்.

* ஸ்பெயின் தூதராக 1934-ல் பணிபுரிந்தார். அப்போது அந்நாட்டுக் கவிஞர் லோர்க்காவின் நட்பைப் பெற்றார். உள்நாட்டுப் போரில் அரசியல் காரணங்களால் லோர்க்கா கொல்லப்பட்டார். இதை கண்டித்து பத்திரிகைகளில் எழுதியதால், நெருடாவின் தூதர் பதவி பறிபோனது. அதன் பிறகு, இலக்கியப் படைப்பில் தீவிரமாக இறங்கினார்.

* மார்க்சியத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். சிலியில் கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. இவரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. நண்பர்கள் உதவியுடன் மாதக்கணக்கில் தலைமறைவாக இருந்தவர், பின்னர் அர்ஜென்டினாவுக்கு தப்பினார். 1971-ல் பாரீஸில் தூதராகப் பணியாற்றியபோது, இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

* கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடல் வரிகளைப் போலவே அமைந்துள்ள 'பூமியின் சருமம் உலகெங்கும் ஒன்றுதான்' (The skin of the earth is same everywhere)' என்ற இவரது கவிதை வரிகள் பிரபலமானவை. '20-ம் நூற்றாண்டின் மாபெரும் கவிஞர் என்று புகழப்பட்ட பாப்லோ நெருடா 69 வயதில் (1973) மறைந்தார்.











FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x