Last Updated : 23 Sep, 2019 12:48 PM

 

Published : 23 Sep 2019 12:48 PM
Last Updated : 23 Sep 2019 12:48 PM

'வாட்ஸ் அப்'-பில் ஒருங்கிணைந்து நிதி சேகரிப்பு: திருப்பாச்சேத்தி அரசுப் பள்ளியை சீரமைக்கும் முன்னாள் மாணவர்கள்

மதுரை

சிவகங்கை மாவட்டம், திருபாச்சேத்தி அரசு மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் நிலையைக் கண்டு, அப்பள்ளியைத் தத்தெடுத்து முழுமையாக சீரமைக்கின்றனர்.

வாழ்க்கை ஓட்டத்தில் குடும்ப உறவுகளையே மறக்கும் காலத்தில் அடிப்படைக் கல்வியைக் கற்றுத் தந்த பள்ளியை எத்தனை பேர் நினைப்பர். அப்படியே நினைத்து உதவ முன்வந்தாலும், டேபிள், சேர், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வேண்டுமானால் வாங்கித்தருவர்.

ஆனால், சிவகங்கை மாவட்டம், திருபாச்சேத்தி அரசு மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் நிலையைக் கண்டு, அப்பள்ளியைத் தத்தெடுத்து முழுமையாக சீரமைக்கின்றனர்.

யாருக்காகவும் காத்திருக்காமல் தங்களால் முயன்ற நிதியைத் திரட்ட 'வாட்ஸ் அப்'குரூப் ( GHSS TPC 60 YEAR) ஒன்றை 4 மாதத்திற்கு முன்பு தொடங்கினர்.

சங்கிலித்தொடர் போன்று ஒவ்வொருவராக குரூப்பில் இணைத்தனர். 30 ஆண்டுக்கு முன்பு இருந்து சமீபத்தில் பயின்றவர்கள் வரை குரூப்பில் ஒருங்கிணைக்கப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர்.

பள்ளியின் வளர்ச்சி, மேம்பாடு பற்றி சில முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் ராமநாதன், முனியாண்டி உள்ளிட்டோர் பள்ளியை நேரில் ஆய்வு செய்து, ஆலோசனை நடத்தினர். ரூ.20 லட்சத்தில் பணிகள் மேற்கொள்வது என, தீர்மானித்தனர்.

ஆசிரியர் ராமநாதன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பாண்டி உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றையும் உருவாக்கினர். பொதுவான வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கி அதன் மூலம் வெளியூர், வெளிநாடுகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்களிடம் நிதி திரட்டுகின்றனர்.

முதல் கட்டமாக ரூ. 13 லட்சத்தில் கூடுதல் கட்டிடம், மைதானம், சுற்றுச்சுவர், கழிப்பறை உள்ளிட்ட மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் வைர விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆர்வமுடன் பங்களிக்கும் முன்னாள் மாணவர்கள்..

முன்னாள் மாணவர்களின் இந்த முயற்சி குறித்து ஆசிரியர் ராமநாதன், "சில முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்களின் பங்களிப்புடன் ரூ.7.50 லட்சத்தில் கழிப்பறை புதுப்பித்தல், தற்காலிக அறிவியல் ஆய்வகம், சுற்றுச்சுவர் புதுப்பித்தல், விளையாட்டு மைதானம் சீரமைத்தல், நினைவு அரங்கம் பணிகள் நிறைவுற்றன.

ரூ. 6 லட்சத்தில் பழுதடைந்த தரைத்தளங்களை சீரமைத்தல் பணியை முன்னாள் மாணவர்கள் பீசர் துரை, ஆடிட்டர் ராஜா ஆகியோர் முடித்துள்ளனர்.

மின்சார வசதி, மேல்தளம் சீரமைத்தல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் பாக்கி உள்ளன. நிதியுதவி அளித்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். 2019 டிசம்பரில் பள்ளியின் 60-ம் ஆண்டு வைர விழா நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்" என்றார்.

முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பாண்டி, "முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி, மாஜிஸ்திரேட் பாண்டி மகாராஜன், வங்கி அதிகாரி லோகநாதன் மற்றும் கல்வி, ராணுவம், காவல், நீதி, ஊடக துறை உட்பட பல்வேறு துறைகளில் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பணி புரிகின்றனர்.

நிதியுதவி அளித்த ராமகிருஷ்ணன், சசிகுமார், லோகநாதன், பாண்டி மகராஜன் உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்கள். தற்போது குரூப்பில் உள்ள அனைவரும் தலா ரூ.1000 உதவினாலே பணிகளை முடித்துவிடலாம். வாட்ஸ் ஆப் குரூப் 500-க்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர். வைர விழாவுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x