Last Updated : 25 May, 2014 11:59 AM

 

Published : 25 May 2014 11:59 AM
Last Updated : 25 May 2014 11:59 AM

மனதுக்கு இல்லை வயது: மூத்த குடிமக்கள் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யுமா தமிழக அரசு?

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்துடன் (ஐ.ஆர்.சி.டி.சி.) வடமாநிலங்கள் இணைந்து மூத்த குடிமக்களை இலவச புனிதப் பயணம் அழைத்துச் செல்வதுபோல தமிழக அரசும் அழைத்துச் செல்ல வேண்டும் என்கிறார்கள் மூத்த குடிமக்கள்.

சாதி, மத வேறுபாடின்றி எல்லோருமே தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது முக்கியமான புனிதத் தலங்களுக்குப் போய்வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். வசதி படைத்தவர்களுக்கு இது உடனடியாக சாத்தியப்படும். வசதியற்ற ஏழைகள் பலருக்கு அது கனவாகவே போய்விடும். ஆயிரக்கணக்கில் செலவு செய்து அவர்களால் புனிதத் தலங்களுக்குச் செல்ல முடிவதில்லை. குறிப்பாக மூத்த குடிமக்களிடையே இந்த ஏக்கம் சற்று அதிகம். கடமைகள் முடிந்த காலகட்டத்தில்தான் புதிதாக மக்களையும் புதிதாக ஊர்களையும் பார்க்கவேண்டும்போலத் தோன்றும்.

இதைக் கருத்தில் கொண்டு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்கள் ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து 65 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கான இலவச புனிதப் பயணத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

ரயிலில் இலவச புனிதப் பயணம் செல்லத் தகுதியுள்ள மூத்த குடிமக்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்கிறார். குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், ரயில் பயணத்துக்கான உடல் தகுதிச் சான்று ஆகியவற்றின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

தேர்வு செய்யப்படும் மூத்த குடிமக்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் காசி, கயா, அலகாபாத், ஹரித்வார், ரிஷிகேஷ், அயோத்தி, துவாரகா, சோம்நாத் ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்துக்கும், முஸ்லிமாக இருந்தால் அஜ்மீருக்கும் கிறிஸ்தவராக இருந்தால் கோவாவுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

இதுசம்பந்தமாக சென்னையில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. (தென்மண்டலம்) அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வடமாநிலங்களில் மாதத்துக்கு 4 தடவை மூத்த குடிமக்களை ரயிலில் இலவச புனிதப் பயணம் அழைத்துச் செல்கின்றனர். ஒரு ரயிலில் 1,100 பேர் வரை செல்ல முடியும். பயணம் 5 நாட்கள் முதல் 8 நாட்கள் வரை. இலவச புனிதப் பயணத் திட்டத்துக்கு வடமாநிலங்களில் மூத்த குடிமக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதுபோன்ற திட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்தலாம் என்று தமிழக அரசை ஐ.ஆர்.சி.டி.சி. கோரியுள்ளது. அதற்கான செயல்திட்டத்தையும் 5 மாதங்களுக்கு முன்பு கொடுத்துள்ளது’’ என்றார்.

மேற்கண்ட திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா விரைவாகப் பரிசீலித்து, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்களும் ரயிலில் இலவச புனிதப் பயணம் செல்ல உதவ வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் தமிழக மூத்த குடிமக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x