Published : 06 Jun 2015 10:44 AM
Last Updated : 06 Jun 2015 10:44 AM

வாட்ஸ்அப் வறுவல்: பாம்பு வளர்த்து பணத்தை அள்ளலாம்!

குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்து வருகிறது.‘சிநேக் இந்தியா பார்ம்’ என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:

நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத் தில் நிறைய தடுமாற்றங்களைச் சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.

அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது. இன்று குறைந்த முதலீட்டில் நிறைய சம்பாதிக்க நினைக்கும் ஆட்களுக்கு இந்த தொழில் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.

பண்ணைவைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன்.

இதற்கு ஆகும் செலவு:

5 ஜோடி பாம்பு குட்டிகள் : ரூ.10,000

25 வெள்ளை எலிகள் (தீவனம்) : ரூ.2,000

கொட்டாய் செலவு : ரூ.10,000

பாம்பு முட்டையை பொரிக்க

உதவும் இன்குபேட்டர் : ரூ.60,000

ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்

வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.

குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:

குட்டிகளுக்கு பார்வைத் திறனும்,கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது. குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.

5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும். 1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம். ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும். அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும். அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.

கேட்கவே தலை சுற்றுகிறதா? இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.

ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள். நிறைய பணத்தை அள்ளுங்கள்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

கோப்ரா கோபால்,

1000/1 தண்டுமுட்டிப்பாளையம்,

பெருந்துறை,

ஈரோடு - 634717

(ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு. இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு)

பின்குறிப்பு:

ஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும். அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x