

இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் குருதேவ் என்று அன்புடன் அழைக்கப்பட்டவருமான ரவீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore) பிறந்த தினம் இன்று (மே 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l கல்கத்தாவில் பிறந்தவர் (1861). ஓரியன் டல் செமினரி பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். பள்ளிக்குச் செல்வதை துன்பமாக கருதினார். எனவே, பல ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து கற்பித்தனர். எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கி னார். உலகப் புகழ்பெற்ற பலரின் சுயசரிதை கள், வரலாறு, வானியல், அறிவியல், சமஸ்கிருதம் ஆகியவற்றைப் பயின்றார்.
l இவர் மனம் வங்காளம், சமஸ்கிருத மொழிகளில் நாட்டம் கொண் டது. பாரிஸ்ட்டர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் லண்டன் சர்வகலாசாலையில் 1878-ல் சேர்ந்தார். ஆனால், பட்டம் பெறா மலேயே 1880-ல் நாடு திரும்பினார். பின்னர் ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
l 16-வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப் பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 20-வது வயதில் வால்மீகி பிரபிதா என்ற நாடகத்தை எழுதினார். 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி மெட்டும் அமைத்துள்ளார். அவற்றில் ஒரு பாடல் இந்திய தேசிய கீதமாகவும் மற்றொரு பாடல் வங்க தேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது. வங்காள இலக்கியத்தில் பல புதுமைகளை அறிமுகப்படுத்தினார். 1884-ல் கோரி-ஓ-கமல் என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார்.
l 30-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்காக நிதி திரட்டினார். தமது பயண அனுபவங்களை யாத்ரி என்ற நூலில் எழுதியுள்ளார். வங்காளத்தின், குறிப்பாக கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கை குறித்த பல கதைகளை எழுதியுள்ளார்.
l 1893 முதல் 1900 வரை சோனார் தோரி, கனிகா உள்ளிட்ட ஏழு கவிதைத் தொகுப்புகளை படைத்தார். 1901-ல் பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். முதலில் தாய்மொழியான வங்காளத்தில்தான் எழுதி வந்தார். பின்னர் வங்காள மொழியில் எழுதியிருந்த நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். புதினங் கள், கதைகள், நாட்டிய நாடகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றையும் படைத்துள்ளார்.
l இவரது இசைத்தட்டுகள் ‘ரவீந்திரசங்கீத்’ என்று பிரபலமடைந்தன. சுவாமி விவேகானந்தருடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார். விவேகானந்தர் தனது ‘சங்கீத கல்பதரு’ என்ற இசை நூலில் ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைத் தொகுத்துள்ளார்.
l 1901-ல் சாந்திநிகேதனில் குடியேறினார். அங்கு ஓர் ஆசிரமத்தை நிறுவினார். பிரார்த்தனை கூடம், பள்ளிக்கூடம், புத்தக சாலை, மரங்கள், செடி, கொடிகள் சூழ்ந்த பூஞ்சோலையாக இது மிளிர்ந்தது. 1915-ல் ஆங்கிலேய அரசு இவருக்கு சர் பட்டம் வழங்கியது. 1919-ல் அமிர்தசரசில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் படுகொலையால் மனம் உடைந்து ‘சர்’ பட்டத்தைத் துறந்தார்.
l 1909-ல் இவர் எழுதத் தொடங்கிய கீதாஞ்சலி, 1912-ல் வெளியிடப்பட்டது. இந்த கவிதைத் தொகுப்புக்காக இவருக்கு 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1921-ல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். தனது புத்தகங்களுக்காக கிடைத்த பணம், நோபல் பரிசு மூலம் கிடைத்த தொகை அனைத்தையும் பல்கலைக்கழகத்துக்காக செலவிட்டார்.
l 60-வது வயதில் ஓவியம் வரையத் தொடங்கினார். கவிதைகள்-உரைநடைகள் அடங்கிய இவரது படைப்புகள் மொத்தம் பதினைந்து தொகுதிகள் வெளிவந்துள்ளன. உயிரியியல், இயற்பியல், வானியல் குறித்த ஏராளமான கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
l காந்திஜியை மகாத்மா என்று முதன் முதலாக அழைத்தது இவர்தான். சமூக சீர்திருத்தவாதி, இந்திய கலாசாரத்தின் அடையாளம், வங்கம் தந்த தவப்புதல்வர் என்றெல்லாம் போற்றப்படும் இவர், 1941-ல் 80-வது வயதில் காலமானார்.