Last Updated : 04 May, 2015 08:43 AM

 

Published : 04 May 2015 08:43 AM
Last Updated : 04 May 2015 08:43 AM

இன்று அன்று | 1767 மே 4: பரம்பொருளைக் காட்டும் சங்கீதம்

பக்தியில் ஊறிய இசையன்றி

வழியும் வேறு உண்டோ?

பிருங்கி, நடேசன், அனுமன், அகஸ்தியர்,

மாதங்கர், நாரதர் எல்லாம் இதை அறிந்தே

பக்தியில் பிறந்த இசையைப் போற்றுவார்

நியாயம் அநியாயம் தெரிந்தது

நிஜமில்லை இவ்வுலகு, மாயை என்று தெளிந்தேன்

காமம், குரோதம் உள்ளிட்ட அறுபகை உண்டு உடலினுள்

அவற்றை அடக்கவும் கற்ற தியாகராஜனுக்கு

பக்தியில் ஊறிய இசையன்றி

வழியும் வேறு உண்டோ?

(தியாகையரின் ‘சங்கீத ஞானமு’ என்ற பாடலின் ஆங்கிலம் வழி தமிழாக்கம்: தங்க. ஜெயராமன்)

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராகப் போற்றப்படுபவர் தியாகராஜர். காவிரிக் கரையில் பிறந்து சங்கீதக் கடலில் முத்தெடுத்தவர். 1767 மே 4-ல் திருவாரூரில் பிறந்தார் தியாகராஜர். ஆந்திரத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவரது முன்னோர்கள் 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்னூல் பகுதியிலிருந்து திருவாரூர் பகுதியில் குடியேறினார்கள். புகழ்பெற்ற இசைக் கலைஞர் கிரிராஜ கவி தனது அபாரமான இசைத் திறமை மூலம் தஞ்சை சமஸ்தான வித்வானாக உயர்ந்தவர். அவரது பேரன்தான் தியாகராஜர்.

இவர் சிறுவனாக இருந்தபோதே இவரது அம்மா ஜெயதேவர், புரந்தரதாஸர் மற்றும் அன்னமாச்சார்யா ஆகி யோரது பதங்களை அவருக்குக் கற்றுக்கொடுத்தார். சிறுவன் தியாகராஜர் தனது வீட்டின் சுவர்களிலேயே தனது முதல் பாடலை எழுதினார். அதைப் பார்த்த அவரது தந்தை அந்தப் பாடலை அப்படியே எழுதி, மூத்த இசைக் கலைஞர்களிடம் சென்று காட்டினார். அதைப் பார்த்து அசந்து நின்ற அம்மேதைகள், அந்தப் பாடலைப் பத்திரப்படுத்துமாறு கூறினராம். அந்த அளவுக்குத் தனது திறமையை இளம் வயதிலேயே நிரூபித்தவர் தியாகராஜர். சோந்தி வெங்கடரமணய்யா எனும் இசை மேதையிடம் இசை கற்கத் தொடங்கினார் தியாகராஜர்.

ராமபிரான் மீது அளப்பரிய பக்தியும் ஈடுபாடும் கொண்டவ ராக வளர்ந்தார் தியாகராஜர். அந்த பக்தியின் காரணமாக அரண்மனை மண்டபங்களில் நின்று அரசர்களைப் புகழ்ந்து பாடுவதற்கு ஒருபோதும் அவர் சம்மதித்ததில்லை. பல கோயில்களுக்குப் பயணம்செய்த தியாகராஜர், 14,000 கீர்த்தனை களைப் பாடினார் என்று சொல்லப்படுவதுண்டு.

‘பிரகலாத பக்தி விஜயம்’, ‘நௌகா சரித்திரம்’ போன்ற இசை நாடகங்களை தியாகையர் இயற்றியிருக்கிறார். ‘கனராக பஞ்சரத்தினம்’, ‘நாரத பஞ்சரத்தினம்’, ‘திருவொற்றியூர் பஞ்சரத்தினம்’, ‘கோவூர் பஞ்சரத்தினம்’, ‘சிறீரங்க பஞ்சரத்தினம்’, ‘லால்குடி பஞ்சரத்தினம்’ போன்ற கிருதிகளும் இவரது படைப்புகள்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x