Published : 11 May 2015 10:13 AM
Last Updated : 11 May 2015 10:13 AM

சுத்தானந்த பாரதி 10

கவியோகி, மகரிஷி எனப் போற்றப்பட்டவரும், பன்மொழிப் புலவரும், ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறந்து விளங்கியவருமான சுத்தானந்த பாரதி பிறந்த தினம் இன்று (மே 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l சிவகங்கையில் பிறந்தார் (1897). வழக்கறி ஞரான இவரது தந்தை வேதங்களைக் கற்ற வர். இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணி யன். ஐந்து வயதில் ரங்க ஐயங்கார் திண் ணைப் பள்ளியில் படித்தார். பின்னர் மன்னர் பள்ளியில் படித்தார்.

l எட்டாம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலும் ஆன்மிக விழிப்புணர்வும் இவருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இமய மலையில் வாழ்ந்துவந்த சித்தர் ஒருவர் இவருக்கு ‘சுத்தானந்தம்’ என்று பெயரிட்டு தீட்சை வழங்கினார்.

l கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் வேதம், உபநிஷத்துகள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றைக் கற்று அவற்றைத் தமிழிலும் மொழிபெயர்த்தார். ஷேக்ஸ்பியர், மில்டன், பைரன் ஆகியோரின் நூல்களையும் கற்றார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ‘பாரத சக்தி’ என்னும் காவியத்தைப் பாடத் தொடங்கினார்.

l இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் மிகவும் பிரசித்தம். பல மொழிகளைக் கற்றறிந்தவர். திருக்குறளை ஆங்கிலத்தில் அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் மொழிபெயர்த்தார். சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியர் இவருக்கு ‘கவியோகி,’ ‘பாரதி’ என்றும் பெயர் சூட்டினார். சீரடி சாய்பாபா, ரமண மகரிஷி ஆகியோர் இவருடைய ஆன்மிக உயர்வுக்கு வழிகாட்டினர்.

l திலகர், காந்திஜி, நேதாஜி, உ.வே.சு. ஐயர் ஆகியோருடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். தேசியச் சிந்தனைகளைத் தூண்டும் பல பாடல்களை இயற்றினார். கிராமப் பணி, கதர்ப்பணி, மது ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் மறுவாழ்வு ஆகிய சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டார். அரவிந்தரின் தொடர்பால் இவரது வாழ்வில் புதிய திருப்பம் ஏற்பட்டது.

l புதுவை ஆசிரமத்தில் 20 ஆண்டுகள் மவுன விரதம் இருந்துவந்தார். சமய ஒற்றுமையைப் போற்றியவர். கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமய நூல்களைக் கற்று அவை காட்டும் நெறிகளையும் பின்பற்றி வந்தவர். ‘ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்மநேயர் நாம்’ என்பதை உலகுக்கு உணர்த்தியவர்.

l சமஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளிலும் நூல்கள் இயற்றியுள்ளார். சிறந்த மொழிபெயர்ப்பாளர். கவிதைகள், உரைநடை, பயணநூல், இலக்கணம், கீர்த்தனைகள், நாடகம், திறனாய்வு, சிறுகதை, அறிவியல், வாழ்க்கை வரலாறு ஆகிய பல துறைகளிலும் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக் குவித்தார்.

l தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் ராஜராஜன் விருது இவரது ‘பாரத சக்தி’ நூலுக்குக் கிடைத்தது. 1947-ல் ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்ளத் தொடங்கினார்.

l சோவியத் யூனியன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக் கும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும், அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு சொற்பொழிவுகள் ஆற்றினார். ‘அகவாழ்வு சிறந்திட யோகம்; புறவாழ்வு சிறந்திட அறிவியல் இவை இரண்டும் இணைந்தால், மனித வாழ்வு அமரத்துவம் பெறும்; மண்ணில் விண்ணரசு தோன்றும்’ என்பதுதான் இவர் உலகுக்கு அளித்த செய்தி. 1977-ல் சிவகங்கையில் ‘சுத்தானந்த யோக சமாஜம் என்னும் அமைப்பை இவர் நிறுவினார்.

l 1979-ல் சுத்தானந்த தேசிய வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியை நிறுவினார். அங்கேயே ஒரு குடிலையும் அமைத்துக்கொண்டு சமாஜம், பள்ளியின் வளர்ச்சிக்கு வழிகாட்டிவந்தார். தன் படைப்புகளுக்கு வந்த அத்தனை தொகையையும் சமாஜப் பணிகளுக்கே செலவிட்டார். 1990-ல் தனது 93-வது வயதில் மகாசமாதி அடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x