Published : 13 May 2015 10:23 AM
Last Updated : 13 May 2015 10:23 AM

பாலசரஸ்வதி 10

இந்தியாவின் தலைசிறந்த பரதநாட்டியக் கலைஞரும், பாரம்பரிய நடனம், இசையில் புரட்சியை ஏற்படுத்தியவருமான தஞ்சாவூர் பாலசரஸ்வதி (Balasaraswati) பிறந்த தினம் இன்று (மே 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l சென்னையில் பாரம்பரிய இசைக் குடும்பத்தில் 7-வது தலைமுறைக் கலைஞராக (1918) பிறந்தவர்.குழந்தைப் பருவத்திலேயே இசை கற்கத் தொடங்கினார்.

l நான்கு வயதாக இருந்தபோது, பிரபல நாட்டியக் கலைஞர் தஞ்சாவூர் கே.கந்தப்ப பிள்ளையிடம் தீவிர நடனப் பயிற்சி தொடங்கியது. இவரது கலைப் பயிற்சிக்கு தாய் உறுதுணையாக இருந்தார். நடன அரங்கேற்றம் 7 வயதில் காஞ்சிபுரம் கோயிலில் நடந்தது. வயதுக்கு மீறிய முகபாவனைகள், மிகவும் கடினமான நடன அசைவுகளை அனாயாசமாக செய்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தினார். ‘குழந்தை மேதை’ என்று புகழப்பட்டார்.

l அந்தக் காலத்தில் நடனம் ஆடுபவர்கள் பல இன்னல்களுக்கு ஆளானதால் பரதநாட்டியம் நசியும் கலையாக மாறியிருந்தது. ருக்மணி தேவி போன்றோரின் முயற்சியால் திரும்பவும் உயிர்பெற்ற பரத நாட்டியத்தின் முதல் தூணாக இவர் கருதப்பட்டார்.

l நடனக் கலைஞர்களுக்கு சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தார். கோயில்களில் மட்டுமே நடைபெற்றுவந்த நடனக் கலையை வெளி இடங்களிலும் பரவச் செய்தார்.

l இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பாரநாட்டியத்தின் புகழைப் பரவச் செய்தார். பாரம்பரிய நடனம், இசை ஆகிய இரண்டையும் கற்றுத் தேர்ந்து இரண்டிலும் புரட்சியை ஏற்படுத்தினார். இவரது நடனத்தால் கவரப்பட்ட பிரபல நடன இயக்குநர் உதய் ஷங்கர் இவரது நடனக் கலையை நாடு முழுவதும் பரவச் செய்வதார்.

l தனது குடும்பத்திலேயே தென்னிந்தியாவுக்கு வெளியே முதன்முதலாக கலை நிகழ்ச்சி நடத்தியவர் இவர்தான். முதலில் 1934-ல் கல்கத்தாவில் இவரது நிகழ்ச்சி நடைபெற்றது.

l ஷம்பு மஹராஜ், டேம் மார்கட் ஃபான்டெய்ன், மார்தா கிரஹாம் உள்ளிட்ட புகழ்பெற்ற சர்வதேச விமர்சகர்களின் கவனத்தையும் மரியாதையையும் பெற்றார். ‘உலகின் தலைசிறந்த நடனக் கலைஞர்’ என்று போற்றப்பட்டார்.

l 1960-களில் சர்வதேச அங்கீகாரம் பெறத் தொடங்கினார். ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா என உலகம் முழுவதும் இவரது நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு கலைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடன ஆசிரியராகப் பணியாற்றவும், நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தவும் 1980களில் அமெரிக்கா சென்றார். சென்னை மியூசிக் அகாடமி தந்த ஊக்கத்தால் அந்த அமைப்புடன் இணைந்து நாட்டியப் பள்ளியை நிறுவினார்.

l இவரது நடனக் கலையால் ஈர்க்கப்பட்ட சத்யஜித் ரே இவரை வைத்து ‘பாலா’ என்ற குறும்படம் தயாரித்தார். நாட்டின் 2-வது உயரிய விருதான ‘பத்ம விபூஷண்’ இவருக்குக் கிடைத்தது. சென்னையில் உள்ள இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இவருக்கு சங்கீத கலாசிகாமணி விருதை வழங்கியது. சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார். உலக அளவில் பல கவுரவங்களைப் பெற்றார்.

l இந்தியாவில் பரத நாட்டியக் கலைக்கு புத்துயிர் அளித்து, பரதநாட்டியத்தில் தனி முத்திரை பதித்த பாலசரஸ்வதி 66 வயதில் (1984) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x