Published : 23 Apr 2015 10:19 AM
Last Updated : 23 Apr 2015 10:19 AM

மாக்ஸ் பிளாங்க் 10

சர்வதேச இயற்பியலாளரும் கதிரியக்க அலைவீச்சு இயக்கவியலின் தந்தை என்று போற்றப்படுபவருமான மாக்ஸ் பிளாங்க் (Max Planck) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 23). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :

l ஜெர்மனியில் கீல் என்னும் நகரில் பிறந்தார் (1858). 1867-ல் குடும்பம் முயுனிச் (munich) சென்று குடியேறியது. பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே அறிவாற்றல் மிக்க குடும்பம் இது. பலர் பேராசிரியராகப் பணியாற்றியவர்கள். தந்தை சட்டத் துறை பேராசிரியராகப் பணியாற்றியவர்.

l மாக்ஸ்மில்லியன் ஜிம்னாசியம் பள்ளியில் வானியல், இயந்திரவியல், கணிதம் பயின்றார். ஆற்றல் பாதுகாப்பு கொள்கையையும் கற்றார். இசையும் பயின்றார். 17 வயதில் பட்டம் பெற்றார். பெர்லின் முயுனிச் பல்கலைக்கழகத்தில் 21-வது வயதில் இயற்பியலில் டாக்டர் பட்டம் பெற்றார். இயற்பியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

l முதலில் வெப்ப இயக்கவியலில் (Thermodynamics) ஆராய்ச்சி களைத் தொடங்கினார். இதன் இரண்டாவது விதியில் கவனம் செலுத்தினார். இந்த ஆராய்ச்சி இவரை கதிரியக்க ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது. ஒளி உமிழ்கிற ஆற்றல் (radiant energy) அதாவது, ஒளி அலைகளின் ஆற்றல் ஒரு தொடர் ஓட்டமாக வெளிப்படவில்லை. சிறு சிறு கீற்றுகளைக் கொண்டதாக உள்ளது என்ற கருத்தை வெளியிட்டார்.

l மின்காந்த கதிர்வீச்சின் இயல்பு குறித்து ஆராய்ந்தார். முதலில் முயுனிச் பல்கலைக்கழகத்திலும் பிறகு கீல் பல்கலைக்கழகத்திலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ‘கரும்பொருள் கதிர்வீச்சு (black body radiation) குறித்த ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்தார். கரும்பொருள் கதிர்வீச்சினை துல்லியமாக விளக்கும் ஒரு எளிய, சுருக்கமான இயற்கணித சூத்திரத்தை (algebraic formula) கண்டறிந்தார்.

l இதன் சில நடைமுறைச் சிக்கலைத் தீர்ப்பதற்கான ஆராய்ச்சியில் இறங்கினார். ஒளி அலைகளின் ஆற்றல் குறித்து புதிய கோட்பாட்டை உருவாக்கினார். அந்த அலகுக்கு ‘குவான்டா’ என்று பெயரிட்டார்.

l ஒளியின் ஓர் அலகின் அளவு ஒளியின் அலை எண்ணைப் பொருத்தது. மேலும் அது ஜடப் பொருளின் பரும அளவுக்கு சரிசமவீதமாக இருக்கும். இந்தப் பரும அளவை பிளாங்க் சுருக்கமாக ‘h’ என்று குறிப்பிட்டார். இவரது இந்த கண்டுபிடிப்பு இயற்பியல் உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

l இது தற்போது ‘பிளாங்கின் நிலை எண்’ என குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்துதான் குவான்டம் இயற்பியல் கிளை விரித்தது. இந்தக் கருத்தாக்கத்தைப் பயன்படுத்தி ஐன்ஸ்டீன் ஒளிமின் விளைவை (photoelectric effect) விளக்கினார்.

l இதை கருப்பொருள் கதிர்வீச்சுக்கு மட்டுமன்றி வேறு பல இயற்பியல் நிகழ்வுகளுக்கும் பயன்படுத்த முடியும் என்பது கண்டறியப்பட்டது. 1905-ல் ஒளியின் விளைவு பற்றி விளக்குவதற்கு ஐன்ஸ்டீன் இதைப் பயன்படுத்தினார். நீல்ஸ் போர், அணுகட்டமைப்புக் கோட்பாட்டுக்கு இதைப் பயன்படுத்தினார்.

l குவான்டம் கோட்பாடு குறித்த இவரது கண்டுபிடிப்புகளுக்காக 1918-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1880-ல் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். பிறகு டீனாகவும் நியமிக்கப்பட்டார். 1928-ல் ஓய்வு பெறும் வரைஅங்கு பணியாற்றி வந்தார். அடிக்கடி பயணங்கள் மேற்கொண்டு மதம், அறிவியல் ஆகிய விஷயங்கள் குறித்து உரையாற்றினார். ஐன்ஸ்டீனும் இவரும் நெருங்கிய நண்பர்கள்.

l தனது ஆய்வுகள் அடிப்படையில் பல கட்டுரைகளை வெளியிட்டார். ஏராளமான புத்தகங்களும் எழுதியுள்ளார். 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிவியல் வளர்ச்சியில் மிக முக்கிய சாதனையை நிகழ்த்தியவர் என்று போற்றப்படும் மாக்ஸ் பிளாங்க் 1947-ல் 89-வது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x