Last Updated : 29 Apr, 2015 11:16 AM

 

Published : 29 Apr 2015 11:16 AM
Last Updated : 29 Apr 2015 11:16 AM

ஒரு நிமிடக் கதை: அவமானம்

“குமரேசா!

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கே. சமையல் பண்ற பொண்ணு இப்ப வந்துடுவா. உனக்கும் சேர்த்து சமைக்கச் சொல்றேன். சாப்பிட் டுட்டுத்தான் போகணும்!” தன் மகள் சவும்யா இருக்கும் ஊரிலிருந்து வந்த நண்பனிடம் சொன்னார் சாந்தப்பன்.

“அதுக்கெல்லாம் நேரமில்லப்பா. அவசர வேலையா வந்தேன். கூடவே உன் பொண்ணு சவும்யா இந்த வேட்டி சட்டைத் துணியை உங்கிட்டே கொடுக்கச் சொன்னா. அதைக் கொடுத் துட்டுப் போகத்தான் வந்தேன்…” என்றபடி தன் கையிலிருந்த பையை சாந்தப்பனிடம் கொடுத்தார் குமரேசன்.

“ஏம்பா.. என் மக கொடுத்த துணியைக் கொடுக்க மட்டுந்தான் என்னைப் பார்க்க வந்தியா? ஒருநாள் தங்கிட்டுப் போக மாட்டியா?” உரிமையோடு கேட்டார் சாந்தப்பன்.

“தங்கச்சி இருந்திருந்தா அது கையால சமைக்கச் சொல்லி சாப்பிட்டுட்டுப் போயிருப்பேன். இப்போ சமையல்காரப் பொண்ணு சமைக் கிறதைத்தானே நான் சாப்பிடணும். சரி, நான் ஒண்ணு கேட்கறேன்.. உன் பொண்டாட்டி போனதுக்கப்புறம் நீ இப்படி தனியா சமையலுக்கு ஆளை வெச்சு சமைச்சு சாப்பிட்டுட்டு இருக்கணுமா? உன் பொண்ணுகூட வந்து இருக்க வேண்டியதுதானே? உன் மருமகனும் உன்னை வரச்சொன்னாராமே?” - கேட்டார் குமரேசன்.

“என்ன சொல்றே நீ? பொண்ணு வீட்ல போய் அப்பன் இருந்தா நல்லாயிருக்குமா? என் பொண்டாட்டி போய்ட்டா என்ன? எனக்கு பென்ஷன் வருது. ஆளைவெச்சு சமைச்சு சாப்பிட்டுட்டுப் போறேன்.”

“உனக்கு ஒரே பொண்ணுதானே? ஆம்பளைப் பிள்ளைங்க இல் லையே. உன் சொத்து எல்லாத்தை யும் பொண்ணுக்குத்தானே கொடுக்கப் போறே. அவகூட போய் இருந்தா என்ன தப்பு?”

“என்ன இருந்தாலும் பொண்ணு வீட்ல போய் இருக்க முடியுமாப்பா? அவமானமா இருக்குமேப்பா?” கூச்சத்தோடு சொன்னார் சாந்தப்பன்.

“சாந்தப்பா! உனக்கு அவமானம்னு நீ பேசுறே. வயசான காலத்துல உன்னை தன்னந்தனியா வெளியூர்ல தவிக்க விட்டுட்டு இருக்கிறோமேன்னு உன் பொண்ணும் உன் மருமகனும் ஒவ்வொருத்தர்கிட்டேயும் அவமானப் படுறாங்களே.. அது தெரிய லையா உனக்கு?” குமரேசன் சொல்ல, ‘மகள் வீட்டுக்குப் போய் தங்கிவிடலாம்’ என்ற எண்ணம் சாந்தப்பனின் மனதில் துளிர்விட ஆரம்பித்தது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x