Last Updated : 24 Apr, 2015 09:47 AM

 

Published : 24 Apr 2015 09:47 AM
Last Updated : 24 Apr 2015 09:47 AM

இன்று அன்று | 1800 ஏப்ரல் 24: அமெரிக்காவின் அறிவுச் சுரங்கம் தொடங்கப்பட்டது!

‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’, அமெரிக்காவின் தலைசிறந்த நூலகங்களில் ஒன்று மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த நூலகங்களில் ஒன்றும் கூட. அமெரிக்க வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புள்ள நூலகம் இது. நாடாளுமன்றத்துக்குப் பயனுள்ள புத்தகங் களை வாங்கிச் சேகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 5,000 டாலரை ஒதுக் கினார் அப்போதைய அதிபர் ஜான் ஆடம்ஸ். முதலில் லண்டனிலிருந்து தான் புத்தகங்கள் வரவழைக்கப்பட்டன. 1800 ஏப்ரல் 24-ல் இந்த நூலகம் தொடங்கப் பட்டது. 12 ஆண்டுகள் கழித்து, தலைநகர் வாஷிங்டனுக்குள் நுழைந்த பிரிட்டன் ராணுவம், நகரைத் தீக்கிரையாக்கியது. இதில் இந்த நூலகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் எரிந்து சாம்பலாயின.

இந்தச் சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட முன்னாள் அதிபர் தாமஸ் ஜெபர்ஸன், தனது சொந்த நூலகத்தி லிருந்து புத்தகங்களைத் தந்து நூலகத்தைப் புதுப்பிக்க உதவினார். அவர் நடத்திவந்த அவரது சொந்த நூலகம்தான் அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா விலேயே மிகப் பெரிய நூலகம். 2 முறை அதிபராக இருந்த காலகட்டத்தில் ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகத்தை விரிவாக்கும் பணிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டவர் அவர்.

1851-ல் மீண்டும் ஒரு தீவிபத்து ஏற்பட்டது. இதில் நூலகத்தின் மூன்றில் ஒரு பகுதி நூல்கள் எரிந்து நாசமாயின. தாமஸ் ஜெபர்ஸன் கொடுத்த பல நூல்களும் தப்பவில்லை. இந்த முறை அமெரிக்க நாடாளுமன்றம் விரைவாகச் செயல்பட்டு புத்தகங்களைச் சேகரித்து மீண்டும் புதுப்பித்தது.

அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்குப் பின்னர், இன்னும் அதிகமான எண்ணிக்கையில் புத்தகங்கள் சேகரிக்கப் பட்டன. 20-ம் நூற்றாண்டில் அமெரிக் காவின் அறிவிக்கப்படாத தேசிய நூலக மாகவும், உலகின் மிகப் பெரிய நூலக மாகவும் விரிவடைந்திருந்தது ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ நூலகம். வாஷிங்டன் நகரில் பிரம்மாண்டமான 3 கட்டிடங் களுடன், ஒரு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் மாபெரும் அறிவுத் தலமாக வளர்ந்து நிற்கிறது இந்த நூலகம்.

16 கோடி சேகரிப்புகளைக் கொண்ட இந்த நூலகத்தின் புத்தக அலமாரி களை அளந்தால் 838 மைல் நீளம் இருக்கும் என்று ‘லைப்ரரி ஆஃப் காங்கிர’ஸின் அதிகாரபூர்வ இணைய தளம் தெரிவிக்கிறது. 3.7 கோடிப் புத்தகங்கள் மற்றும் அச்சுப் பிரதிகள், 35 லட்சத்துக்கும் அதிகமான ஒலிப் பதிவு ஆவணங்கள், 1.4 கோடிப் புகைப் படங்கள், 55 லட்சம் வரைபடங்கள், ஓவியங்கள் என்று மனிதர்களின் அறிவை விரிக்க எண்ணற்ற பொக்கிஷங்கள் இந்நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலகத்தின் கிளை அலுவலகங்கள் டெல்லி, கெய்ரோ, ரியோ டி ஜெனிரோ போன்ற உலகின் முக்கிய நகரங்களில் செயல்படுகின்றன.

வரலாறு நெடுகிலும் படையெடுப்புகள், இன அழிப்புகள் போன்றவற்றில் நூலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. பிரம்மாண்டமாக உயிர்பெற்ற ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’, நூலகங்களுக்கு எப்படி உயிர்கொடுக்க வேண்டும் என்பதன் வரலாற்றுச் சாட்சியமாக ஆகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x