Published : 11 Apr 2015 10:30 AM
Last Updated : 11 Apr 2015 10:30 AM

ஜேம்ஸ் பார்க்கின்சன் 10

இங்கிலாந்தை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர், ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் பார்க்கின்சன் (James Parkinson) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 இங்கிலாந்து தலைநகர் லண்டனில் (1755) பிறந்தவர். அறுவை சிகிச்சை நிபுணரான தந்தை, மருந்துகள் தயாரித்தும் விற்பனை செய்துவந்தார். பார்க்கின்சன் சிறு வயதிலேயே லத்தீன், கிரேக்கம், இயற்கை தத்துவம், சுருக்கெழுத்து கற்றார்.

 லண்டன் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலும் பின்னர் ராயல் அறுவை சிகிச்சைக் கல்லூரியிலும் பயின்றார். தந்தைபோல இவரும் அறுவை சிகிச்சை நிபுணரானார்.

 மருத்துவத் தொழிலில் சிறப்பாகப் பணிபுரிந்த இவர், பன்முகத் திறனும் பரந்த கண்ணோட்டங்களும் கொண்டிருந்தார். புவிஅமைப்பியல், தொல்லுயிரியல் மட்டுமின்றி அரசியலிலும் இவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. பின்தங்கிய சமூகத்தினரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார்.

 பல்வேறு சமூக சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். ‘ஓல்ட் ஹப்பர்ட்’ என்ற புனைப்பெயரில் இதுபற்றி பல கட்டுரைகள் எழுதினார். சமூக சீர்திருத்தங்களும் அவற்றுக்கு உலகளாவிய அங்கீகாரமும் தேவை என்பதை வலியுறுத்தினார். இவர் சிறந்த பேச்சாளரும்கூட.

 1799-1807 காலகட்டத்தில் இவரது கவனம் கொந்தளிப்பான அரசியல் களத்தில் இருந்து மீண்டும் மருத்துவத்தின் பக்கம் திரும்பியது. கீல்வாதம், கிழிந்த குடல்வால் (Raptured Appendix) உள்ளிட்டவை குறித்து பல மருத்துவக் கட்டுரைகள், புத்தகங்களை வெளியிட்டார்.

 மக்களின் பொது சுகாதாரம், நல்வாழ்வை மேம்படுத்து வதில் முனைந்து செயல்பட்டார். அரசியல்போல, அதே தீவிரத்தன்மையுடன் பல மருத்துவக் கோட்பாடுகளை வகுத்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களின் சட்டரீதியான பாதுகாப்புக்காகப் போராடினார்.

 பார்க்கின்சன் நோய், அதன் அறிகுறிகள், விளைவுகள் குறித்து முதன்முதலாக முறையாக விளக்கினார். இது மத்திய நரம்பு மண்டல நோய் என்பதை அடையாளம் கண்டார். இந்த நோய்க்கு பக்கவாத நடுக்கம் (Paralysis Agitans), முடக்குவாத நடுக்கம் (Shaking Palsy) என்றுதான் பெயரிட்டார். பின்னாளில் இது ‘பார்க்கின்சன் நோய்’ என்று இவரது பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது.

 மருத்துவத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட களங்களான புவிஅமைப்பியல், தொல்லுயிரியல் மீது இவரது கவனம் திரும்பியது. இதுபற்றி ஆராய்ந்து பல்வேறு தாவரங்கள், விலங்குகளின் மாதிரிகளை சேகரித்தார்.

 புவிஅமைப்பியல், தொல்லுயிரியல் துறையில் அதிக புத்தகங்கள் இல்லை என்பதை அறிந்தார். தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் ‘ஆர்கானிக் ரிமைன்ஸ் ஆஃப் எ ஃபார்மர் வேர்ல்டு’ என்ற நூலின் முதல் பகுதியை 1804-ல் வெளியிட்டார். 1808 மற்றும் 1811-ல் அடுத்தடுத்த பகுதிகள் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றன.

 ஆண்டுதோறும் இவரது பிறந்த தினமான ஏப்ரல் 11-ம் தேதி, உலக பார்க்கின்சன் தினமாகக் கடைபிடிக்கப் படுகிறது. முற்றிலும் மாறுபட்ட பல துறைகளில் ஈடுபட்டு, அவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய ஜேம்ஸ் பார்க்கின்சன் 69 வயதில் (1824) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x