Last Updated : 07 Apr, 2015 09:11 AM

 

Published : 07 Apr 2015 09:11 AM
Last Updated : 07 Apr 2015 09:11 AM

இன்று அன்று | 1994 ஏப்ரல் 7: ருவாண்டாவைக் குலுக்கிய இனப் படுகொலை!

நேற்றுவரை நட்புப் புன்னகையுடன் பேசி வந்த பக்கத்து வீட்டுக்காரர், இன்று உங்களைக் கொல்ல வாளுடன் வந்துநின்றால் எப்படி இருக்கும்? உங்கள் இனத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்ல வேண்டும் என்று வேறு இன மக்களுக்கு அரசே வானொலி மூலம் வேண்டுகோள் விடுப்பதைக் கேட்பது எத்தனை அச்சுறுத்த லாக இருக்கும்? 1994-ல் ருவாண்டாவின் டூட்ஸி இன மக்கள் சந்தித்த மாபெரும் இனப்படுகொலை வரலாற்றிலேயே மறக்க முடியாத பயங்கர நிகழ்வு. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஹிட்லரின் நாஜிப் படையினரால் யூத மக்கள், ஜிப்ஸிக்கள் கொன்றழிக்கப்பட்டதைப் போன்றதொரு சம்பவம் இது. இத்தனைக்கும் டூட்ஸி இன மக்களுக்கும், அவர்களை வாளாலேயே வெட்டிக்கொன்ற ஹூடு இனத்தவர் களுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. ஒரே மொழி. ஒரே மாதிரியான தோற்றம். ஆனால், தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் ஹூடு மக்களுக்கு வந்தது.

அந்த இனவெறியை அரசியல் தலை வர்கள் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண் டார்கள். ‘கினானி’ (வெல்ல முடியாதவர்) என்ற அடைமொழியுடன் செல்வாக்குமிக்கத் தலைவராக இருந்த ருவாண்டா அதிபர் ஜுவெனல் ஹப்யாரிமனா ஹூடு இனத்தைச் சேர்ந்தவர். அந்நாட்டில் 85% மக்கள் ஹூடு இனத்தவர்தான். எனினும், 1959 வரை டூட்ஸி இனத்தவர்தான் ருவாண்டாவை ஆட்சிசெய்தனர். ஹூடு இனப் போராளிகள் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தனர்.

அதன் பின்னர், டூட்ஸி இன மக்களின் சார்பில் ‘ருவாண்டன் பேட்ரியாட்டிக் ஃபிரண்ட்’ (ஆர்.பி.எஃப்.) எனும் பெயரில் ஒரு புரட்சிப் படை அவ்வப்போது ருவாண்டா அரசுடன் மோதிவந்தது. 1990-களிலேயே டூட்ஸி இன மக்களைக் கொன்று குவிக்கும் நடவடிக்கைகளில் ருவாண்டா அதிபர் இறங்கியிருந்தார். லட்சக் கணக்கான டூட்ஸி மக்கள் ஏற்கெனவே கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர். 1994 ஏப்ரல் 6-ல் நடந்த ஒரு சம்பவம், இனவெறியின் கோர முகத்தைக் காட்டுவதற்கு ஒரு சாக்காக அமைந்தது. அதிபர் ஜுவெனல் ஹப்யாரிமனா சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு, ஆர்.பி.எஃப். தான் காரணம் என்று சொல்லப்பட்டது. டூட்ஸி மக்களை அதிக அளவில் கொன்று குவிக்க ஒரு காரணத்தைத் தேடிக்கொண்டிருந்த ஹூடு இனவெறியர்களுக்கு, அதிபரின் படுகொலை ஒரு காரணமாக அமைந்து விட்டது. அதற்கு மறுநாளான ஏப்ரல் 7 தொடங்கி, 100 நாட்களுக்குள் 5 லட்சம் முதல் 10 லட்சம் டூட்ஸி இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

‘உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு டூட்ஸி மக்களைக் கொன்று குவியுங்கள்’ என்று ருவாண்டா வானொலிகள் ஹூடு மக்களை ஊக்குவித்தன. டூட்ஸி இன மக்களின் மறைவிடம் பற்றிய செய்திகளை ஒலிபரப்பி, ஹூடு மக்களை அங்கு அனுப்பி வைத்தன. பலரைக் கொன்று குவித்தவர் களைப் பாராட்டிச் செய்திகள் வாசிக்கவும் வானொலிகள் தவறவில்லை. இதைக் கேட்டு ஹூடு மக்கள் தங்கள் அண்டை வீட்டில் வசித்த டூட்ஸி மக்களை வெட்டிச் சாய்த்தனர். டூட்ஸி இனத்தைச் சேர்ந்த மனைவியை ஹூடு இனக் கணவன் வெட்டிக்கொன்ற அவலமும் நடந்தது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

ஆனால், ஆர்.பி.எஃப். வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில், ஹூடு இன அரசுப் படையினர் வீழ்த்தப்பட்டனர். ஒருவழியாக, ஆட்சி ஆர்.பி.எஃப். வசம் வந்தது. அதற்குள் ருவாண்டாவில் வசித்த டூட்ஸி இன மக்களில் 75% பேர் கொல்லப்பட்டிருந்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x