Published : 06 Mar 2015 10:35 AM
Last Updated : 06 Mar 2015 10:35 AM

புவோனரோட்டி சிமோனி 10

இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியர், சிற்பி, கட்டிடக் கலை வல்லுநர், கவிஞர் எனப் பன்முகத் திறன் கொண்ட மைக்கலாஞ்சலோ டி லோடொவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni) பிறந்த தினம் இன்று (மார்ச் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

 இத்தாலி, தஸ்கனியில் உள்ள அரெ ஸ்சோ என்னும் இடத்தில் பிறந்தார் (1475). தந்தை ஒரு நீதிபதியாக இருந்தவர். தஸ்கனியின் பிரபுத்துவக் குடும்பம் இவர்களுடையது. ஆரம்ப காலத்தில் பிரான்ஸில் வளர்ந்தார்.

 தாயார் இறந்த பிறகு வேறொரு நகரில் கல் வெட்டுபவரின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இங்கு இவரது தந்தைக்குச் சொந்தமாக ஒரு பளிங்குக்கல் குவாரி இருந்தது. சிறிது காலம் இலக்கணம் படித்தார்.

 படிப்பில் இவருக்கு ஆர்வம் இல்லை. தேவாலயங்களில் இருக்கும் ஓவியங்களைப் பார்த்து வரைந்தார். ஓவியர்கள், சிற்பிகளுடன் இருப்பதையே விரும்பினார். பிறகு தந்தையின் விருப்பத்திற்கு மாறாக ஓவியமும் சிற்பமும் பயின்றார். 1488-ல் இவரது திறமையால் கவரப்பட்ட பயிற்சியாளர் அந்நகர ஆட்சியாளரிடம் சிபாரிசு செய்தார்.

 சிறிது காலம் அரசு பாடசாலையில் கல்வி கற்றார். இந்த சமயத்தில் அவர் பல பிரபலமானவர்களைச் சந்தித்தார். அவர்கள் மூலம் கலைகளைப் பற்றிப் பல விஷயங்களை அறிந்துகொண்டார். தனது 21-வது வயதில் ரோம் நகருக்குச் சென்றார்.

 ரோமானியக் கடவுள் பாக்கஸின் சிலையை வடித்தார். தனது 24-வது வயதில் இவர் வடித்த பியேட்டா சிற்பம் (ஏசுவை தன் மடியில் ஏந்தித் துயரத்துடன் காணப்படும் மேரி மாதா) உலகின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. டேவிட், மோசஸ் சிலைகளும் இவரது புகழை இன்றும் பாடும் சிற்ப வடிவங்கள்.

 1499-ல் புளோரன்ஸ் திரும்பினார். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அந்நகரின் சுதந்திர சின்னமாக டேவிட் சிலையை வைக்கத் திட்டமிடப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிப் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்தச் சிலையை முடித்துக் கொடுக்குமாறு மைக்கலாஞ்சலோ கேட்டுக் கொள்ளப்பட்டார். 1504-ல் இவர் இந்தச் சிலையை வடித்து முடித்தார்.

 அடுத்த வருடமே மீண்டும் ரோமிற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். போப்பின் கல்லறையைக் கட்டும் பணி இவருக்கு வழங்கப்பட்டது. இவரது அனைத்துக் கலைப் படைப்புகளும் இவரது பிரமிக்க வைக்கும் திறமைக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளன. இவர் தலைசிறந்த ஓவியர், சிற்பி மட்டுமல்லாமல் நல்ல எழுத்தாளரும்கூட.

 கடிதங்கள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என்று ஏராளமாக எழுதிக் குவித்துள்ளார். ரோம் நகரின் சிஸ்டைன் தேவாலயத்தின் சுவர்களில் இவரது அற்புத ஓவியங்கள் பல இடம் பெற்றுள்ளன.

 இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இரண்டு நூல்கள் எழுதப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மறுமலர்ச்சிக் காலச் சாதனைகள் அனைத்திற்கும் சிகரமாக இவரது படைப்புகள் திகழ்ந்தன என்று போற்றப்படுகிறார்.

 பியேட்டா (Pieta) டேவிட் (David) ஆகியவை இவரது உலகப் புகழ்பெற்ற படைப்புகள். லியானார்டோ டா வின்சியின் சமகாலத்தவரும் அவருடன் இணைத்து மறுமலர்ச்சிக் காலத் தந்தை என்று போற்றப்பட்டவருமான மைக்கலாஞ்சலோ 1564-ம் ஆண்டில் தனது 89-ம் வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x