Published : 07 Feb 2015 10:23 AM
Last Updated : 07 Feb 2015 10:23 AM

தேவநேயப் பாவாணர் 10

மொழிஞாயிறு என்று போற்றப்படும் தமிழறிஞர், சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழி வித்தகர் தேவநேயப் பாவாணர் (Devaneya Pavanar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் தேவநேசன். 5 வயதில் பெற்றோரை இழந்தார். தமக்கையால் வளர்க்கப்பட்டார். சோழபுரத்தில் கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். ஆம்பூரில் நடுநிலைப் பள்ளி ஒன்றிலும், சி.எம்.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.

 பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 17 வயதிலேயே ஆசிரியராகப் பணியாற்றியவர். 1919-ல் ஆசிரியர் பயிற்சி பெற்றார். 1924-ல் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இவர் மட்டுமே. சென்னை, மன்னார்குடி, திருச்சி, புத்தூர், மண்ணடி, ஆகிய இடங்களில் 1925 முதல் 1944 வரை தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார்.

 1925-ல் சிறுவர் பாடல் திரட்டு என்ற இவரது முதல் நூல் வெளிவந்தது. தொல்காப்பிய சூத்திரக் குறிப்புரை, உரிச்சொல் விளக்கம், செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு, தென்மொழி என ஏராளமான கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் இசைக் கலம்பகம், இயற்றமிழ் இலக்கணம் குறிப்பிடத்தக்கவை.

 பல தமிழ் அறிஞர்களைப் பற்றி நூல்கள் எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் பல புத்தகங்கள், கட்டுரைகளை எழுதியவர். 40-க்கும் மேற்பட்ட நூல்கள், 150-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழின் சிறப்பு குறித்து பல்வேறு இடங்களில் உரையாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் சிறந்த நடையுடன் பேசக்கூடியவர்.

 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திராவிட மொழி ஆராய்ச்சித் துறையின் ரீடராக (1956 1961) பணி யாற்றினார். வேலையை இழந்து கஷ்டப்பட்ட நேரத்தில்கூட மொழி ஆராய்ச்சியை இவர் நிறுத்தியது இல்லை.

 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ் கிருதம் ஆகிய இந்திய மொழிகள், ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், கிரேக்கம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உட்பட 17 மொழிகளின் இலக்கணங்களைக் கற்றவர்.

 ‘தமிழ்ச் சொல் பிறப்பியல் அகரமுதலியின் (Etymological Dictionary) தந்தை’ என்று போற்றப்படுகிறார். 1974-ல் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தின் (Tamil Etymological Project) முதல் இயக்குநராகப் பொறுப்பேற்று முத்திரை பதித்தவர்.

 ‘உலகத்தின் முதல் மொழி தமிழ். உலகின் முதல் மனிதன் தமிழன்’ என்று கூறியவர். ‘தமிழ் திராவிட மொழிகளுக்குத் தாய்; ஆரிய மொழிகளுக்கு மூலம்’ என ஆதாரங்களுடன் வாதிட்டவர்.

 கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதத்தில் பல தமிழ்ச் சொற்கள் இருப்பதை நிரூபித்துக் காட்டியவர். 40-க்கும் மேற்பட்ட மொழிகளின் சொல் இயல்புகளைக் கற்று சிறப்பாக சொல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். தமிழ்ப் பெருங்காவலர், செந்தமிழ் நாவலர் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.

 தமிழுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். தனித்தமிழ் இயக்கத்தின் வேர்களில் ஒருவராக கருதப்படுபவர். ‘மொழிஞாயிறு’ என்று போற்றப்படும் தேவநேயப் பாவாணர் 79ஆம் வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x