Published : 13 Feb 2015 10:38 AM
Last Updated : 13 Feb 2015 10:38 AM

சரோஜினி நாயுடு 10

‘கவிக்குயில்’ என்று புகழப்பட்ட கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு (Sarojini Naidu) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்தவர். பெங்காலி குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதில் இருந்தே அறிவுக்கூர்மை மிக்கவராக இருந்தார். உருது, தெலுங்கு, ஆங்கிலம், பெங்காலி, பாரசீக மொழியில் வல்லவர்.

 சென்னை பல் கலைக்கழக மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்றபோது அவருக்கு 12 வயது. இவர் கணித மேதை அல்லது விஞ்ஞானி ஆகவேண்டும் என்பது அப்பாவின் ஆசை. இவருக்கோ கவிதை எழுதுவதில் நாட்டம். ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

 இவரது படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித் தொகை வழங்கினார். லண்டன் கிங்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் பயின்றார்.

 கவிதைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அவற்றின் ஆன்மா இந்தியாவாகவே இருந்தன. ‘தி கோல்டன் த்ரஷோல்ட்’ (The Golden Threshold), ‘தி பேர்ட் ஆஃப் டைம்’ (The Bird of Time), ‘தி ப்ரோக்கன் விங்’ (The Broken Wing) குறிப்பிடத்தக்கவை.

 ‘இந்தியாவின் கவிக்குயில்’ என்று வர்ணிக்கப்பட்டார். இவரது கவிதைகளுக்கு தாகூர், நேரு உட்பட உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருந்தனர். 1905-ல் வங்கப் பிரிவினையின்போது இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தில் இணைந்தார்.

 காந்தி, நேரு, கோகலே, தாகூர், ஜின்னா, அன்னி பெசன்ட் ஆகிய முக்கியத் தலைவர்களுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பணியை முன்னெடுத்தார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உரையாற்றினார். இந்தியப் பெண்கள் சமையலறையை விட்டு வெளியே வந்து உரிமைக்காகப் போராட வேண்டும் என்றார்.

 1919-ல் ஹோம் ரூல் இயக்கத் தூதராக நியமிக்கப்பட்டார். காந்திஜி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியபோது, பெண்கள் சார்பில் ஆதரவு தெரிவித்து முதலில் களம் இறங்கினார். 1925-ல் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பதவியில் இருந்த முதல் பெண் இவர். காந்திஜி இவரை செல்லமாக ‘மிக்கி மவுஸ்’ என்பார்.

 சட்ட மறுப்பு இயக்கத்தில் கைது செய்யப்பட்டு பல மாத சிறைவாசம் அனுபவித்தார். காந்தியடிகளுடன் தண்டி யாத்திரையில் கலந்துகொண்டார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டார். 21 மாதங்கள் சிறையில் இருந்தார்.

 நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார்.

 ‘கவிக்குயில்’ சரோஜினி நாயுடு 70 வயதில் மறைந்தார். 20-ம் நூற்றாண்டின் இணையற்ற பெண்மணிகளில் ஒருவராகத் திகழ்ந்த அவரது பிறந்தநாள் இந்தியாவில் மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x