Published : 01 Feb 2015 05:16 PM
Last Updated : 01 Feb 2015 05:16 PM

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 10

விடுதலைப் போராட்ட வீரரும் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வருமான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (Omandur Ramasamy Reddiar) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 1). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் கிராமத்தில் பிறந்தவர். தமிழகத்தில் குடியேறிய தெலுங்கு ரெட்டி குடும்பத்தைச் சேர்ந்தவர். வால்டர் ஸ்கட்டர் பள்ளியில் படித்தார். சட்டம் பயின்றவர். மிக இளம்வயதி லேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்.

 இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றினார். பாகிஸ்தானில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் ஆயுதங்கள் கொண்டு வரப்படுகின்றன என்று பட்டேலுக்கு எச்சரிக்கை செய்தார். அதன்பின்னர் அங்கு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்திய தேசத்துடன் ஹைதராபாத் இணைக்கப்பட்டது.

 காமராஜர் ஆதரவுடன் 1947-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவி ஏற்றார். சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற எண்ணம் கொண்டவர். விவசாயிகள், மற்றும் ஏழை, எளியவர்களின் முன்னேற்றத் துக்காக சிந்தித்து பல முனைப்புகளை தொடங்கியவர்.

 1949 ஏப்ரல் வரை முதல்வராக பதவி வகித்தார். இவரது ஆட்சிக் காலத்தில் சென்னை கோயில் நுழைவு அதிகாரச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இதன்படி, தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் செல்வதற்கான முழு உரிமை பெற்றனர். ஜமீன், இனாம்தார் முறைகளையும் இவர் ஒழித்தார்.

 ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தை இயற்றினார். கோயில்களில் வழக்கத்தில் இருந்த தேவதாசி முறையை ஒழிக்கவும் சட்டம் கொண்டுவந்தார்.

 முதல்வராக இருந்தபோது ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போனதால் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறதோ அதே சிகிச்சைதான் எனக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட சலுகைகளோ கவனிப்போ கூடாது என்றும் வெளிநாட்டில் இருந்து மருத்துவர் மற்றும் மருந்துகளை வரவழைக்கக் கூடாது என்றும் நிபந்தனைகளை விதித்த எளிய அரசியல்வாதி.

 முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகு இவரது மனம் ஆன்மிகத்திலும், சமூக சேவையிலும் நாட்டம் கொண்டது. வள்ளலாரால் ஈர்க்கப்பட்டு, சமரச சுத்த சன்மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

 வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க நிலையத்தையும் நிறுவினார். வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், ராமலிங்கத் தொண்டர் இல்லம் என பல தொண்டு அமைப்புகளை நிறுவினார்.

 எதையும் வெளிப்படையாகப் பேசும் துணிச்சல்காரர். சிறந்த எழுத்தாளர், ராஜதந்திரி, சமூக சேவகர். நேர்மையும், துணிச்சலும் மிக்க, கறைபடாத அரசியல்வாதியாகப் போற்றப்படும் இவர், 1970-ம் ஆண்டில் தனது 75 -வது வயதில் காலமானார்.

 இவரது நினைவாக சொந்த ஊரில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இவரது தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x