Published : 21 Feb 2015 10:41 AM
Last Updated : 21 Feb 2015 10:41 AM

நிராலா 10

இந்தி இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளி, கவிஞர், நாவல் ஆசிரியர், கட்டுரையாளர் எனப் பன்முகத்திறன் கொண்ட சூரியகாந்த் திரிபாதி ‘நிராலா’ (Suryakant Tripathi ‘Nirala’) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :

 வங்காளத்தின் மிட்னாப்பூரில் பிறந்தவர். 3 வயதில் தாயை இழந்தார். உயர்நிலைக் கல்விக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்துக்கு இவரது குடும்பம் குடிபெயர்ந்தது.

 இயல்பிலேயே தனித்துவச் சிந்தனைகளைக் கொண்டிருந்தார். படிப்பில் கவனம் செலுத்தாமல், ஊர் சுற்றுவதிலும் விளையாடுவதிலும் ஆர்வத்துடன் இருந்தார். இதற்காக அப்பாவிடம் பலமுறை கடுமையான தண்டனைகளையும் பெற்றார்.

 திருமணத்துக்குப் பிறகு இந்தி கற்றுத் தேர்ந்தார். வங்கமொழியில் எழுதுவதை நிறுத்திவிட்டு, இந்தியில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். ‘நிராலா’ (தனித்தன்மை வாய்ந்த) என்ற புனைப்பெயரில் எழுதினார்.

 இவரது படைப்புகளில் வேதாந்த தத்துவங்கள், தேசியம், ஆன்மிகம், இயற்கை அழகு, முற்போக்கான மனிதநேய சித்தாந்தங்கள் முதலியவை கருப்பொருளாக இருந்தன. ராமகிருஷ்ணர், விவேகானந்தர், தாகூரின் தாக்கம் இவரது எழுத்துக்களில் அதிகம் இருந்தது.

 தன் படைப்புகள் மூலம் ஊழல், சமூக அவலங்கள், அதிகார அடக்குமுறைகளைச் சாடினார். இதனால் பல எதிர்ப்புகள், விமர்சனங்களையும் சந்தித்தார். புகழ்பெற்ற வங்க இலக்கியப் படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்தார்.

 வங்கமொழி, இந்தி தவிர ஆங்கிலம், பாரசீகம், சமஸ்கிருதமும் அறிந்தவர். 1916-ல் ‘ஜுஹி கீ கலி’ என்ற தனது முதல் கவிதையை எழுதினார். குறுகிய காலத்தில் மனைவியையும் பின்னர் மகளையும் இழந்தார். வறுமையில் வாடினார். வாழ்க்கையில் அடுக்கடுக்காக துயரங்களைச் சந்தித்ததால், அவரது படைப்புகளில் தத்துவ ஞானம் அதிகம் வெளிப்பட்டது.

 கொல்கத்தாவில் இருந்து வெளியான ‘சமன்வய’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக 1920-ல் பொறுப்பேற்றார். 1923-ல் ‘அனாமிகா’, 1929-ல் ‘பரிமள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாயின. 1935-ல் தன் மகள் நினைவாக ‘சரோஜ் ஸ்மிருதி’ என்ற நூலை எழுதினார்.

 இந்தி இலக்கியத்தின் தூண்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். வஹ் தோட்தீ பத்தர் கவிதை, கீதிகா, துளசிதாஸ், குகுர்முத்தா, அணிமா, பேலா, நயே பத்தே, அர்ச்சனா, ஆராதனா ஆகிய நூல்கள் இந்தி இலக்கியத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க, புகழ்பெற்ற படைப்புகள்.

 இவரது குல்லிபான்ட், பில்லெசுர் பகரிஹா ஆகிய நகைச்சுவை நூல்களும் புகழ்பெற்றவை. சதுரி சமார், சுகுல் கீ பீவி ஆகியவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். ரபீந்த்ர கவிதா கானன், பண்ட் அவுர் பல்லவ், சபக் ஆகியவை இவரது புகழ்பெற்ற விமர்சன நூல்கள்.

 கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சன நூல் என இலக்கியத்தின் அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்த மகத்தான படைப்பாளியாக போற்றப்படும் நிராலா, 65 வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x