Last Updated : 15 Jan, 2015 09:50 AM

 

Published : 15 Jan 2015 09:50 AM
Last Updated : 15 Jan 2015 09:50 AM

மேத்யூ மவுரி 10

அமெரிக்க கடல் ஆராய்ச்சியாளர், வானியல் வல்லுநர், வரலாற்று அறிஞர், வரைபட நிபுணர், எழுத்தாளர், புவியியலாளர், கல்வியாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட மேத்யூ ஃபான்டெய்ன் மவுரி பிறந்தநாள் இன்று (ஜனவரி 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 19 வயதில் அமெரிக்க கடற்படையில் மிட்ஷிப்மேனாக சேர்ந் தார். கடல், கப்பல்கள் குறித்து ஆராயத் தொடங்கினார்.

 33 வயதில் காலில் அடிபட்டதால் கப்பலில் பணிபுரிவதற்கான தகுதியை இழந்தார். கப்பல் ஓட்டும் முறை, காற்றின் போக்கு, நீரோட்டம் குறித்த ஆராய்ச்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அமெரிக்க கடற்படை வானிலை ஆய்வு மையக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

 இவர் எழுதிய ‘தி ஃபிஸிகல் ஜியாகிரஃபி ஆஃப் தி ஸீ’ என்ற கடலியல் பற்றிய புத்தகம், கடல் பயணம் தொடர்பான முக்கியமான விவரங்களை விரிவாக, தெளிவாக எடுத்துக் கூறியது.

 1842-ல் வாஷிங்டனில் அமெரிக்க கடற்படை அலுவலகப் பொறுப்பாளராக பணிபுரிந்தார். பதிவேடுகள், ஆவணங்களை ஒழுங்குபடுத்தினார். கடல் போக்குவரத்தை சீரமைத்தார். இவரது பணிகள் ‘விண்ட் அண்ட் கரன்ட் சார்ட் ஆஃப் தி நார்த் அட்லான்டிக்’ என்ற தலைப்பில் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு அங்கீகாரம் பெற்றது.

 புவியியல் குறித்து தொடர் கட்டுரைகளை வெளியிட்டார். கடல் பற்றி இவர் எழுதிய புத்தகங்கள் உலகம் முழுவதும் உள்ள மாலுமிகளுக்கும் பயனளிக்கக்கூடியவை.

 அனைத்து கடற்பகுதிகள், எல்லா வகையான கால நிலைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பதிவேடுகள், தகவல்களைத் திரட்டி ஆராய்ச்சி செய்தார்.

 இந்த பதிவேடுகள் மூலம், திமிங்கிலம் இடம்பெயர்தல், அவற்றின் பாதைகள் ஆகியவற்றைக் கண்டறிந்தார். உலக அளவில் கடல், நீரோட்டம் குறித்த அட்டவணையைத் தயாரித்தார். உலகம் முழுவதும் இருந்து பெற்ற கடலியல் கண்காணிப்பு குறிப்புகளை மதிப்பிட்டு இவர் உருவாக்கிய சீரான கடலியல் புள்ளிவிவர பதிவேட்டு முறை கடற்படைகள், வணிகக் கப்பல் நிறுவனங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தன.

 கடற்படை கல்வி மையம், அமெரிக்க கடற்படை அகாடமி உட்பட பல நிறுவனங்களை உருவாக்கினார். கடல் பயணம் தொடர்பாக பல்வேறு மாற்றங்கள், சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். நியூயார்க் நகரின் சாதனையாளர் அரங்கத்தில் (ஹால் ஆஃப் ஃபேம்) இவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.

 பல்வேறு நாடுகளின் கவுரவப் பட்டங்கள், விலை மதிப்பில்லாத ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளார். பல்வேறு இடங்கள், கப்பல்கள், கடற்படைப் பிரிவுகளுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 கடல் ஆராய்ச்சிக்காக தினமும் 14 மணிநேரம் கடுமையாக உழைத்த மேத்யூ ஃபான்டெய்ன் மவுரி 67 வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x