Published : 14 Dec 2014 03:54 PM
Last Updated : 14 Dec 2014 03:54 PM

நாஸ்ட்ரடாமஸ் 10

வரலாற்று முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்துச் சொன்ன தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸ் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

* பிரான்ஸ் நாட்டில் யூத வம்சாவளி தம்பதிக்குப் பிறந்தவர். பிறகு தந்தை கத்தோலிக்க மதத்துக்கு மாறினார். 15 வயதில் அவிக்னன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

* இலக்கணம், பேச்சுத் திறன், தர்க்கம், கணிதம், இசை, ஜோதிடக்கலை ஆகியவற்றைக் கற்றார். அப்பகுதியில் கொள்ளை நோய் பரவியதால் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இதனால், படிப்பு பாதியில் நின்றது.

* 1521 முதல் 8 ஆண்டுகளுக்கு கிராமங்களில் மூலிகை சிகிச்சை ஆராய்ச்சி செய்தார். மருந்துகளைத் தயாரித்து விற்றார். சில ஆண்டுகள் கழித்து, மான்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மருத்துவக் கல்வி பயின்றார். இவர் மூலிகை வைத்தியர் என்று தெரியவந்ததால் வெளியேற்றப்பட்டார்.

* மூலிகை ஆராய்ச்சி மற்றும் மருந்து தயாரிப்பை மீண்டும் தொடங்கினார். இவரது ‘ரோஜா மாத்திரை’ பிளேக் நோய் வராமல் தடுத்ததாக மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டதால், பிரபலமானார்.

* பிளேக் வராமல் பலரைக் காப்பாற்றிய அவரால், தன் குடும்பத்தை அதில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. இதில் விரக்தி அடைந்தவர் நாடோடியாகத் திரிந்தார்.

lஒரு பாதிரியாரிடம் சீடராகச் சேர்ந்தார். அப்போது இவரது மன நிலையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. வெகுநேரம் வானத்தை உற்றுப் பார்க்கத் தொடங்கினார். எதிர்காலக் கணிப்புத் திறன் வசப்பட ஆரம்பித்தது. இவர் சொன்னதெல்லாம் நடந்தது. புகழ் பரவியது. கூடவே பிரச்சினைகளும் எழுந்தன.

* இவரது கணிப்புகள், சாத்தானின் எச்சரிக்கைகள் என்றது கத்தோலிக்க திருச்சபை. இவர் மீது மதக் குற்றம் சுமத்தப்பட்டதால் தலைமறைவானார். தனது கணிப்புகளை குழப்பமான கவிதை வடிவில் இவர் எழுதியதற்கும் அதுவே காரணம்.

* இவரது கணிப்பு, வழக்கமான ஜோதிட முறைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. இதற்கு உதவியாக ஒரு பொறி இயந்திரத்தைப் பயன்படுத்தினார். அதை பார்த்துதான் ‘தி செஞ்சுரீஸ்’ என்ற புகழ்பெற்ற ஆரூட புத்தகத்தை எழுதினார். நாஸ்ட்ரெடாம் என்ற தன் பெயரை 1550-ல் நாஸ்ட்ரடாமஸ் என்று மாற்றிக்கொண்டார். பல பதிப்புகளாக வெளிவந்த இவரது புத்தகங்களில் 6,338 தீர்க்க தரிசனங்கள் இடம்பெற்றுள்ளன.

* பல ஜோதிட நூல்களை எழுதியுள்ளார். ‘லெஸ் புராஃபடீஸ்’ என்ற முக்கியமான நூலின் முதல் பதிப்பு 1555-ல் வெளியானது. அவரது மறைவுக்குப் பிறகு, புத்தகம் ஸ்டாக் இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தொடர்ந்து பிரின்ட் செய்யப்பட்டது.

* லண்டனின் மாபெரும் தீ விபத்து, நெப்போலியன், ஹிட்லர் ஆகியோரின் எழுச்சி, இரண்டு உலகப் போர்கள், ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு பேரழிவு, அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் போன்ற பல முக்கிய சம்பவங்களை முன்கூட்டியே குறிப்புகளாகத் தெரிவித்திருக்கிறார். மாபெரும் தீர்க்கதரிசியான நாஸ்ட்ரடாமஸ் 63-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x