இன்று அன்று | 2005 டிசம்பர் 9: ஊழலுக்கு எதிரான சர்வதேச நாள் அறிவிக்கப்பட்டது

இன்று அன்று | 2005 டிசம்பர் 9: ஊழலுக்கு எதிரான சர்வதேச நாள் அறிவிக்கப்பட்டது
Updated on
1 min read

ஊழலுக்கு எதிரான சர்வதேச அமைப்பு, சமீபத்தில் வெளியிட்ட பட்டியலின்படி, ஊழல் நிறைந்த 175 நாடுகளில் 85-வது இடத்தில் இந்தியா உள்ளது. அதிகபட்சம் 100 மதிப்பெண் பெற்றால், ஊழலே இல்லாத நாடு என்றரீதியில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

0 மதிப்பெண் பெற்றால், ஊழல் மலிந்த நாடு என்று அர்த்தம். டென்மார்க் நாடு 92 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. நியூஸிலாந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் முறையே 2 மற்றும் 3-ம் இடத்தில் உள்ளன. இதில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் மதிப்பு, 38. 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் 36-ஆக இருந்த இந்தியாவின் மதிப்பு சற்றே உயர்ந்திருக்கிறது. அதாவது, ஊழல் சற்றுக் குறைந்திருக்கிறது என்றாகிறது. எனினும், நாட்டின் அனைத்து வளர்ச்சிப் பணிகளும், நலத் திட்டங்களும் ஊழலால் பாதிக்கப்பட்டிருப்பது கவலைதரும் விஷயம்தான்.

‘உலகின் அனைத்து நாடுகளிலும் இருக்கும் பொதுவான பிரச்சினை ஊழல்தான். சமூகம், அரசியல், பொருளாதாரத் தளங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியும், சந்தேகமில்லாமல் ஊழல்தான். ஜனநாயக அமைப்புகளைப் பலவீனப்படுத்துவதுடன், பொருளாதார வளர்ச்சியைத் தாமதப்படுத்தி, அரசையே செயலிழக்கச் செய்துவிடுகிறது ஊழல்’ என்று ஐநா குறிப்பிட்டிருக்கிறது. 2003 அக்டோபர் 31-ல் ஊழலுக்கு எதிரான மாநாடு அளித்த பரிந்துரைகளை ஐநா பொதுச் சபை ஏற்றுக்கொண்டது. போதைமருந்து, குற்றம் தொடர்பான ஐநா அலுவகப் பிரிவின் பொதுச் செயலாளரை, அந்த மாநாட்டின் செயலாளராகப் பணியாற்று மாறு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஊழல் தொடர்பான விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காக, டிசம்பர் 9-ம் தேதியை சர்வதேச ஊழல் தடுப்பு நாளாக ஐநா அறிவித்தது. 2005 முதல் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளில் ஊழல் தொடர்பான விவாதங்கள், ஊழலின் பாதிப்பை விளக்கும் வீதி நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் என்று பல்வேறு வகைகளில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை உலக நாடுகள் இந்த நாளில் மேற்கொள்கின்றன. ஊழலுக்கு எதிரான பதாகைகள், வாசகங்கள் உள்ளிட்டவற்றை, பொதுஇடங்களில் வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in