Published : 05 Nov 2014 10:32 AM
Last Updated : 05 Nov 2014 10:32 AM

சித்தரஞ்சன் தாஸ் 10

‘தேசபந்து’ என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தலைவர் சித்தரஞ்சன் தாஸ் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 வங்கதேசத் தலைநகர் தாகா அருகே விக்ரம்பூரில் வசதியான குடும்பத்தில் பிறந் தவர். மாணவப் பருவத் திலேயே விடுதலை இயக் கங்களில் கலந்துகொண்டார். இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர். 1894-ல் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார்.

 தீவிர அரசியலில் ஈடுபட்டு, இந்திய தேசிய காங்கிரஸில் முக்கியத் தலைவராக உயர்ந்தார். ‘தேசபந்து’ (தேசத்தின் நண்பன்) என்று அன்புடன் அழைக்கப்பட்டார். இவரை தன் அரசியல் குருவாகப் போற்றினார் சுபாஷ் சந்திரபோஸ்.

 அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வெளி யேற்ற விவகாரம், ரயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் ஆகிய போராட்டங்களில் பங்கேற்றார். திலகருடன் நெருக்கமாகப் பணியாற்றியவர். 1910-ல் இருந்து 1932 வரை ‘கேசரி’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

 1920-ல் இவரது மாத வருமானம் ரூ.50 ஆயிரம். பின்னாளில் ஒரு வழக்கு நடத்த ரூ.1 லட்சம் வரை கட்டணம் வாங்கியவர். வழக்கறிஞர் தொழில், வருமானம், வசதியான வாழ்க்கையைத் தியாகம் செய்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். வேல்ஸ் இளவரசர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இவரது ஒட்டுமொத்த குடும்பமும் கைது செய்யப்பட்டது.

 ஒத்துழையாமை இயக்கத்தை காங்கிரஸ் கைவிட்டதால் அதிருப்தி அடைந்து, 1922-ல் சுயராஜ்ஜியக் கட்சியைத் தொடங்கினார். இதன் கொள்கைகளைப் பரப்ப ‘ஃபார்வர்டு’, ‘பங்களாசுதா’ ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கினார்.

 அரவிந்தரும் இவரும் சுதந்திரப் போராட்ட புரட்சி இயக்கமான அனுஷீலன் சமிதி இயக்கத்தின் துணைத் தலைவர்கள்.1909-ல் அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் வாதாடி அரவிந்தருக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.

 1923-ல் நாடாளுமன்ற கவுன்சில் உறுப்பினரானார். 1924-ல் நடந்த கல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றி பெற்றது. சித்தரஞ்சன் தாஸ் மேயரானார். கிராமப் பஞ்சாயத்து, கிராம சுயாட்சி ஆகியவற்றை அப்போதே தனது ஐந்து அம்ச திட்டத்தில் கொண்டுவந்தவர்.

 பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர். ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் விதவை மறுமண இயக்கத்துக்கு உதவினார். தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முழங்கியவர்.

 இலக்கியத்திலும் ஆர்வம் உடையவர். பிரம்மசமாஜ நூல்கள், ராமகிருஷ்ணர் உபதேசங்கள், பக்கிம் சந்திரர், டி.எல்.ராய், கிரீஷ் கோஷ், தாகூர் ஆகியோரது புத்தகங்களை ஆழ்ந்து படித்தார். சாகர் சங்கீத் கவிதைத் தொகுப்பு, நாராயண்மாலா, கிஷோர் கிஷோரி, அந்தர்யாமி உள்ளிட்ட புத்தகங்கள், திலகர் குறித்து பல நூல்கள் எழுதியுள்ளார்.

 தன் ஈகை குணத்தால் ஏழையான இந்த வள்ளல், தன் வீட்டையும் அதைச் சுற்றியுள்ள நிலங்களையும் ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக எழுதிவைத்தார். 55-வது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x