

தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர்
பிரபல தமிழிசைக் கலைஞரும் சித்த மருத்துவருமான ஆபிரகாம் பண்டிதர் (Abraham Pandithar) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
திருநெல்வேலி மாவட்டத்தில் சாம்பவர்வடகரை என்ற சிற்றூரில் பிறந்தார் (1859). பங்களாச் சுரண்டையில் ஆரம்பக் கல்வி பயின்றார். பின்னர் ஆசிரியர் பயிற்சி முடித்து, தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பாட்டனார் தமிழ் மருத்துவர் என்பதால், இவரும் தமிழ் மருத்துவத்தில் பயிற்சி பெற்று, மருத்துவராகவும் பணியாற்றினார்.
1879-ல் மூலிகை மலையான சுருளிமலைக்குச் சென்று, கருணானந்த முனிவர் என்பவரிடம் மூலிகைகளின் மருத்துவத் தன்மைகளைக் கற்றறிந்தார். திருமணத்துக்குப் பிறகு 1886-ல் தஞ்சாவூரில் குடியேறினார்.
தமிழ் மருத்துவத்தில் அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்ததால், தஞ்சாவூரின் புறநகர்ப் பகுதியில் 100 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் பெரிய மூலிகைப் பண்ணையை உருவாக்கினார். உள்ளுர் மக்களிடையே அது ‘பண்டிதர் தோட்டம்’ எனப் பிரபலமடைந்தது.
மூலிகைகளைப் பயன்படுத்தி ‘கருணானந்தர் சஞ்சீவி மருந்துகள்’ என்ற பெயரில் பல்வேறு சித்த மருந்துகளைத் தயாரித்தார். இவர் தயாரித்த கோரசனை மாத்திரை, இந்தியாவில் மட்டுமல்லாமல், இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரிட்டிஷ் அரசு இவரது சேவையைப் பாராட்டி ‘ராவ் பகதூர்’ பட்டம் வழங்கியது.
நாதஸ்வரம், ஆர்மோனியம், வீணை, பிடில் ஆகிய வாத்தியங்களை இசைப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ‘பரதரின் நாட்டிய சாஸ்திரம்’, ‘சாரங்க தேவரின் சங்கீத ரத்னாகரம்’ உள்ளிட்ட பிற மொழி இசை நூல்களையும் சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், கல்லாடம், தண்டியலங்காரம் முதலிய பண்டைத்தமிழ் நூல்களையும் பழந்தமிழ் இசை நூல்களையும் ஆழ்ந்து கற்றார்.
சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் இசை குறித்த செய்திகள் இன்றைய கர்னாடக இசையில் மூல இலக்கணங்களாக இருப்பதைப் பண்டிதர் சுட்டிக் காட்டினார். இதன்மூலம் தமிழிசையே இன்று தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பல வடிவங்களில் வழங்கி வரும் இசை என்று நிரூபித்தார். ஐரோப்பிய இசைமேதை பேராசிரியர் தஞ்சை ஏ.ஜி.பிச்சைமுத்துவிடம் மேற்கத்திய இசை பயின்றார்.
பழந்தமிழ் இசை வடிவமே இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் இசைக்கப்படுகிறது என்பதை நிரூபிப்பதற்காக, முதன்முதலாக அகில இந்திய இசை மாநாட்டை தஞ்சாவூரில் நடத்தினார். 1912-ம் ஆண்டு ‘சங்கீத வித்யா மகாஜன சங்கத்தை’ நிறுவினார்.
தனது பல்லாண்டு கால தமிழிசை ஆராய்ச்சி முடிவுகளை ‘கருணாமிர்த சாகரத் திரட்டு’ என்ற இசை நூலாகத் தொகுத்து, 1917-ல் வெளியிட்டார். தமிழிசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் குறித்த ஒரு கலைக்களஞ்சியமாக இது போற்றப்படுகிறது. சுமார் 1,400 பக்கங்கள் கொண்ட இந்நூல் இன்றுவரை தமிழிசை ஆய்வுகளுக்கான மூலநூலாக அமைந்துள்ளது.
இசை. மருத்துவம், இலக்கியம் தவிர, புதுப்புது வகைப் பயிர்களை வேளாண்மை செய்வதிலும், காற்றாலைகளை நிறுவி நீர்ப்பாசனம் செய்வதிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டார். 1911-ல் மின்சாரத்தில் இயங்கும் அச்சுக்கூடம் ஒன்றை நிறுவினார்.
ஆசிரியர், தமிழிசைக் கலைஞர், படைப்பாளி, சித்த மருத்துவர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டிருந்த ஆபிரகாம் பண்டிதர் 1919-ம் ஆண்டு தமது 60-வது வயதில் மறைந்தார். - ராஜலட்சுமி சிவலிங்கம்