Published : 23 Jul 2017 01:33 PM
Last Updated : 23 Jul 2017 01:33 PM

தாராசங்கர் பந்தோபாத்யாய 10

தலைசிறந்த வங்கப் படைப்பாளியும் ஞானபீடம், சாகித்ய அகாடமி விருதுகளை வென்றவருமான தாராசங்கர் பந்தோபாத்யாய (Tarashankar Bandyopadhyay) பிறந்த தினம் இன்று (ஜூலை-23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கிழக்கு வங்காளத்தில், வீர்பூம் மாவட்டம், லாப்பூர் என்ற பகுதியில் பிறந்தார் (1898). ஆரம்பக் கல்வியை சொந்த ஊரில் பயின்றார். கல்கத்தா செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் இன்டர்மீடியட் பயின்றார்.

* விடுதலைப் போராட்டக் காலத்தில், ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டார். அரசியல் ஈடுபாடு, உடல்நிலை பாதிப்பால் படிப்பு பாதியில் நின்றது.

* 1932-ல் இவரது முதல் நாவல் ‘சைதாலி கூர்ணி’ வெளிவந்தது. 1942-ல் நடைபெற்ற வீர்பூம் மாவட்ட இலக்கிய மாநாட்டுக்குத் தலைமை தாங்கி நடத்தினார். வங்காள எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்துக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் பல இலக்கிய அமைப்புகளில் துடிப்புடன் செயல்பட்டார்.

* இவரது இந்த அனுபவங்கள் இவரது படைப்புகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது படைப்புகளில், வகுப்புக் கலவரங்கள், போர், பஞ்சம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், சமூகத்தில் அரசியல் தாக்கங்கள், சுதந்திரப் போராட்ட இயக்கம், சமூக நிலைமைகள், பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் முரண்பாடுகள் என அத்தனையும் இடம்பெற்றன.

* தான் பார்த்த உலகை, தன் கண்ணோட்டத்தை, தனது அரசியல் கருத்துகளை தான் நம்பும் சித்தாந்தங்களைத் துணிச்சலுடன் தன் படைப்புகளில் பதிவுசெய்தார். இவரது படைப்புகளில், சமூகத்தின் அத்தனை பிரிவு மக்களின் வாழ்க்கை முறை குறித்தும் விரிவாக இடம்பெற்றிருந்தது.

* 1952 முதல் 1960 வரை சட்டப்பேரவை உறுப்பினராகச் செயல்பட்டார். 1960 முதல் 1966 வரை ராஜ்யசபா உறுப்பினராகச் செயல்பட்டார். சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற இலக்கிய மாநாடுகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார்.

* 65 நாவல்கள், 53 சிறுகதைகள், 12 நாடகங்கள், 4 கட்டுரை நூல்கள், 4 வாழ்க்கை வரலாற்று நூல்கள், 2 பயணக்கட்டுரை நூல்களை எழுதியுள்ளார். ‘பஞ்சகிரம்’, ‘கவி’, ‘கன்னா பேகம்’, ‘சப்தபதி’, ‘ஹன்சுலிபாகெர்’, ‘உபகாந்தா’ உள்ளிட்ட நாவல்கள், ‘சல்நாமயி’, ‘ரஸகலி’, ‘டின் சூன்யோ’, ‘பேதினி’ உள்ளிட்ட சிறுகதைகள் குறிப்பிடத்தக்கவை.

* இவரது ‘காளிந்தி’, ‘கல்ராத்ரி’, ‘தாக்’ உள்ளிட்ட நாடகங்கள், ‘ரவீந்திரநாத் ஓ பாங்லர் பாலி’, ‘சாஹித்யெர் சத்யா’ உள்ளிட்ட கட்டுரைகள், ‘த்ரிபாத்ரா’ கவிதை உள்ளிட்ட இவரது படைப்புகளும் வங்க இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. இவரது ‘ஆரோக்கிய நிகேதன்’ நூலுக்கு 1956-ம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதும் ‘கணதேவதா’ நூலுக்கு 1966-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதும் கிடைத்தன.

* ரவீந்திர புரஸ்கார், பத்ம, பத்மபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். கல்கத்தா பல்கலைக்கழகம் இவருக்கு சரத் மெமோரியல் பதக்கம் வழங்கியது. இவரது ‘ஜல்சாகர்’ கதையை சத்யஜித் ரே திரைப்படமாகத் தயாரித்தார். மேலும் ‘துயி புருஸ்’, ‘காளிந்தி’, ‘ஆரோக்ய நிகேதன்’ உள்ளிட்ட படைப்புகளைத் தழுவி திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.

* நவீன வங்க இலக்கியத்தின் முக்கியத் தூண்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். நாவல், கவிதை, கதை, நாடகம், வாழ்க்கை வரலாறு, கட்டுரை என இலக்கியத்தின் அத்தனைக் களங்களிலும் முத்திரைப் பதித்த தாராசங்கர் பந்தோபாத்யாய 1971-ம் ஆண்டு தமது 73-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x