Published : 06 Jul 2017 09:48 AM
Last Updated : 06 Jul 2017 09:48 AM

பாலமுரளி கிருஷ்ணா 10

பிரபல கர்னாடக இசைக் கலைஞர்

இந்தியாவின் சிறந்த கர்னாடக இசைப் பாடகர்களில் ஒருவரும், திரைப்படப் பின்னணி பாடகர், இசையமைப்பாளருமான பாலமுரளி கிருஷ்ணா (Balamurali krishna) பிறந்த தினம் இன்று (ஜூலை 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மதராஸ் மாகாணத்தின் கிழக்கு கோதாவரிப் பகுதியில் (இன்றைய ஆந்திரா) சங்கர குப்தம் என்ற ஊரில் பிறந்தார் (1930). இவரது முழுப்பெயர், மங்களம்பள்ளி முரளி கிருஷ்ணா. குழந்தைப் பருவத்தில் தாய் இறந்துவிட்டதால். தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார்.

* பாருபள்ளி ராமகிருஷ்ணய்யரிடம் முறையாக இசை பயின்றார். 6 வயதிலிருந்தே கச்சேரி செய்யத் தொடங்கி விட்டார். 9 வயதுக்குள் மிருதங்கம், வீணை, புல்லாங்குழல், வயலின், கஞ்சிரா உள்ளிட்ட வாத்தியங்கள் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றார். ‘குழந்தை இசைமேதை’ எனப் புகழ்பெற்றார்.

* சிறுவயதில் இவரை, ஹரிகதை மேதை சூர்யநாராயண மூர்த்தி, இவரது பெயருடன் ‘பால’ என்று சேர்த்து அழைத்த பிறகு, இவரது பெயர் ‘பாலமுரளி கிருஷ்ணா’ என மாறியது. அரியங்குடி ராமானுஜ அய்யங்கார், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் சந்தானம், ஜி.என்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பிரபலங்களுக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்.

* பி.லீலா, இசை ஆராய்ச்சியாளர் பி.எம்.சுந்தரம், கமலஹாசன், ஜெயலலிதா, எஸ்.பி.சைலஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரது மாணாக்கர்கள்.

* 1967-ல் ‘பக்த பிரகலதா’ திரைப்படத்தில் நாரதராக முதன்முதலாக நடித்தார். கர்னாடக சங்கீதத்தை சினிமாவில் வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்களுள் இவர் முக்கியமானவர். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 25,000-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

* 72 மேள கர்த்தா ராகங்களிலும் கிருதிகளை இயற்றி சாதனை புரிந்தவர். சமூகம், மகதி, ஓம்காரி, பிரதிமத்தியமாவதி, ஸித்தி உள்ளிட்ட பல ராகங்களையும் பல புதிய தாளங்களையும் உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் 400-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளவர்.

* தமிழ், கன்னடம், சமஸ்கிருதம், மலையாளம், இந்தி, வங்காளம், பஞ்சாபி என பல மொழிகளிலும் பாடியுள்ளதோடு அந்த மொழிகளையும் நன்கு அறிந்தவர். பிரெஞ்சு மொழியிலும்கூட பாடியுள்ளார்.

* இவரது ‘ஒரு நாள் போதுமா’, ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’, ‘மவுனத்தில் விளையாடும் மனசாட்சியே’, ‘தங்க ரதம் வந்தது வீதியிலே’ உள்ளிட்ட பாடல்கள் மக்கள் மனதில் இன்றும் பசுமையாக குடிகொண்டுள்ளன. பத்ம , பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளைப் பெற்றுள்ளார். 2005-ல் பிரான்சின் உயரிய விருதான செவாலியே விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

* சங்கீத கலாநிதி, கலாசிகாமணி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, 1976-ம் ஆண்டில் சிறந்த பாடகருக்கான தேசிய விருது, 1987-ல் சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது, சிறந்த பாடகருக்கான கேரள அரசின் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார். ஆந்திரா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.

* கலை மற்றும் கலாச்சார வளர்ச்சிக்காகவும், இசை தெரப்பி குறித்த விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவும் ‘எம்.பி.கே.’ என்ற அறக்கட்டளையை நிறுவியுள்ளார். இது நடனம் மற்றும் இசைப் பள்ளியும் நடத்தி வருகிறது. ‘சங்கீத உலகின் சக்கரவர்த்தி’ எனப் போற்றப்பட்ட பாலமுரளி கிருஷ்ணா 2016-ம் ஆண்டு 86-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x