Last Updated : 20 Apr, 2017 09:41 AM

 

Published : 20 Apr 2017 09:41 AM
Last Updated : 20 Apr 2017 09:41 AM

இதுதான் நான் 72: விவசாயிகளிடம் அசைக்க முடியாத பற்று!

மூணு வருஷங்களுக்கு முன்னால் என்னோட பாட்டியைப் பார்க்க மைசூரு பக்கத்தில் இருக்கும் தூரா கிராமத்துக்குப் போயிருந்தேன். நான் சின்ன வயசில் சுற்றித் திரிஞ்ச எங்க பழைய வீட்டு கிச்சன் பகுதி மட்டும்தான் எந்த மாற்றமும் இல்லாம அப்படியே இருந்தது. அதில்தான் பாட்டி குடியிருக்காங்கன்னு என் அம்மா சொன்னாங்க. மீதி பாகம் சிமெண்ட் வீடா மாறி, அதில் என் மாமா குடியிருக்கார்னு சொன்னாங்க. மாமா குடியிருந்தது சிமெண்ட் வீடா மாறுனது எனக்கு ஷாக்கிங்கா இருந்தது.

‘‘சரி, பாட்டியும் மாமாவும் ஒண்ணாயிருக்க வேண்டியதுதானே’’ன்னு அம்மாவிடம் கேட்டேன். அதுக்கு, ‘‘ரெண்டு பேரும் சரியாப் பேசிக்கிறதில்லை’’னு சொன் னாங்க. ‘‘இந்த வயசுல இதெல்லாம் என்னன்னு…’’ கேட்டேன். அதுக்கு அவங்க ஏதோ சொன்னாங்க. பாட்டியிடம் ‘‘எங்க ளோட வந்துடுங்க பாட்டி’’ன்னு சொன் னேன். ‘‘இந்த பழைய வீட்டுலதான் இருப் பேன்’’ன்னு பிடிவாதமா சொல்லிட்டாங்க. இதுக்கு முன்னால, ‘‘எங்கக்கூட வந்து டுங்க’’ன்னு அம்மா கேட்டதுக்கும் இதைத்தான் சொல்லியிருக்காங்க.

கதைப் புத்தகத்தில் பார்த்திருப்போம். ஒரு வீடு, அதைச் சுற்றி மணல் ரோடு, மாட்டு வண்டி, உட்கார திண்ணை, மாட்டுக் கொட்டகை, அதில் கொஞ்சம் மாடுங்க, முற்றம், பாட்டி, தாத்தா, மாமா, சித்தின்னு வீடு முழுக்க நிறைஞ்சு இருக்குற சொந்தம், வயல்வெளின்னு ஒரு ஓவியம் மாதிரி இருந்த அந்த வீடு, நான் போயிருந்தப்ப ஜெயில் மாதிரி இருந்தது. எங்கப் பாட்டி தனியா, மாமா தனியான்னு இருக்கிறதை என்னால பார்க்க முடியலை. இதை எழுதுறப்பவும் எனக்கு கஷ்டமா இருக்கு.

அதுவும், அந்த வீட்டுல ஒரு சின்ன அறைக்குள்ளேயே தங்கி, அதிலேயே சமைச்சி சாப்பிட்டுட்டு, அங்கேயே படுத்து எழுந்திருச்சிட்டிருக்கிற பாட்டி யைப் பார்க்குறப்ப பயங்கர ஃபீலிங்கா இருந்துச்சு. அந்த நிலைமையில அவங் களைப் பார்த்ததும் என்னை அறியாம கண்ணுலேர்ந்து பொலபொலன்னு தண்ணி கொட்ட ஆரம்பிச்சுட்டுது. ‘‘அழு வாதடா பிரபு’’ன்னு அம்மாவும், சித்தியும் சமாதானப்படுத்தினாங்க. என்னால கொஞ்ச நேரத்துக்கு அழுகையை நிறுத் தவே முடியலை. அப்புறமா, ஒருவழியா என்னால முடியாம கிளம்பிட்டேன்.

விவசாயிகளும் இப்படித்தான். தான் வாழுற இடம், கூடவே வாழ்ற மனுஷங்க, வாழ்ந்த மண்ணை விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் வந்துட மாட்டாங்க. அவங்களோட வைராக்கியத்தைக் கொஞ்சம்கூட அசைச்சிட முடியாது.

இதே மாதிரி, என் ஃபிரெண்ட் ஒருத் தன் அமெரிக்காவில் இருக்கான். அவ னோட அம்மா இங்கே நம்ம ஊர்ல இருக்காங்க. அவனைப் பார்த்தப்ப, ‘‘ஏண்டா, அம்மாவையும் அமெரிக்கா வுக்கு அழைச்சிட்டு வந்துட வேண்டியது தானே’’ன்னு கேட்டேன். அதுக்கு, ‘‘அடப் போடா! எவ்வளவோ முயற்சி பண்ணி யாச்சு. சொந்த ஊரை விட்டுட்டு அவங்க வரவே மாட்டேன்னு சொல்லிட் டாங்க’’ன்னு சொன்னான். பல பெரிய வங்க, தான் வாழ்ந்த இடத்து மேல அப்படி ஒரு ஆழமான பற்று பாசம் வெச்சிருக்காங்க. அதுவும் அசைக்கவே முடியாத பற்று!

இதே மாதிரி இன்னொரு வகை பெரிய வங்களும் இருக்காங்க. என்னோட அசோஸியேட் டைரக்டரோட அப்பா ஒருத்தர். அவர் எந்த ஒரு விஷயத்துக்கும் ரியாக்ட் பண்ணவே மாட்டார். தன்னோட அப்பாக்கிட்ட போய் அந்த அசோஸியேட் டைரக்டர், ‘‘நம்மளோட அந்த இடத்தை வித்துட்டேன்’’ன்னு சொன்னாலும், ‘‘என் னோட படம் பயங்கர ஹிட் ஆகி யிருக்கு’ன்னு சொன்னாலும் அவரிடம் எந்த ரியாக்‌ஷனும் இருக்காது. அவர்கிட்ட இருந்து வரும் ஒரே பதில் இதுதான்: ‘‘நான் பண்ண வேண்டியதைப் பண்ணிட்டேன். நல்லதோ, கெட்டதோ நீங்க பார்த்துக்கோங்க!’’

பெரும்பாலான பெரியவங்க 70 வயசைக் கடந்ததும் வேற மனநிலைக்குப் போயிடுறாங்கன்னு நினைக்கிறேன். வீட்டுல டி.வி இருக்கா, ஓ.கே! இல் லையா… ஓ.கே! கார் இருக்கா… ஓ.கே! இல்லையா… ஓ.கே! மழை பெய்யுதோ, பெய்யலையோ எல்லாமே ஓ.கேதான்! இப்படி இருக்கிற நிலைமை ஒருவித ‘செம’யான நிலைன்னுதான் தோணுது.

என்னோட தாத்தாக்கூட 94 வயசு வரைக்கும் ஸ்ட்ராங்கா, தலைமுடி கொட்டாம அப்படி ஒரு பவரோட இருந் தார். காரணம், எதைப் பத்தியும் கவலைப் படுறது இல்லை. சில சமயம் வீட்டுல என்னோட மாமன்களுக்குள்ளே சண்டை நடக்கும். மாமனுக்கும் சித்திக்கும் சண்டை நடக்கும். அந்த நேரம் உள்ளே வர்ற தாத்தா எதையுமே கண்டுக்க மாட் டார். சீரியஸ்ஸா வீட்டுக்குள்ள வரும் அவர் பாட்டிக்கிட்ட, ‘‘சாப்பாட்டை போடுடீ. இன்னிக்கு என்ன சமை யல்?’’ன்னு கேட்பார். ‘‘சாம்பார்’’ன்னு சொல்வாங்க. அதுக்கு அவர், ‘‘இந்த பாயசமெல்லாம் செய்யவே மாட்டீயா? எப்பவும் சாம்பார்… சாம்பார்?’’ன்னு திட்டுவார்.

இப்படி அவர் கேட்குறப்ப, அந்தப் பக்கத்துல மாமன்களுக்குள்ளே ‘ஒருத் தரை ஒருத்தர் அடிச்சி கொன்னுக்க போறாங்களோ’ங்கிற மாதிரி சண்டை நடக்கும். ஆனா, எங்க தாத்தா கூலா சாப்பிட்டுட்டே, ‘‘நாளைக்காவது பாயா சம் செய்’’ன்னு சொல்லிட்டு, அங்கே நடக்கிற சண்டையைப் பார்த்து, ‘‘ச்ச்சீ’’ன்னுட்டு, அவருக்கே உரிய வாக்கிங் ஸ்டைல்ல வலது குதி காலை கீழே வைக்காம நடந்து போயிடுவார்.

சின்ன வயசுலேர்ந்தே என்னோட அப்பா சைடுல யாரும் எங்களுக்கு அவ்வளவா பழக்கமில்லை. அம்மா சைடுலதான் நாங்க பயங்கர குளோஸ். ஆனா, அம்மாவோட தம்பி, தங்கை எல் லாருமே எங்க அப்பான்னா… பயங்கரமா பயப்படுவாங்க. இதை, பயம்னு சொல்றதைவிட மரியாதைன்னுதான் சொல்லணும்.

எனக்கு நாலு மாமன்கள். எங்க தாத்தா மாதிரி எங்க மாமன்களும் ரொம்பவும் கோபக்காரங்க. அதில் ஒருத்தர் மட்டும் அமைதியான டைப். ஆனா, கோபம் வந்தா அவ்வளவுதான். மத்த மூணு பேரையும் மிஞ்சிடுவார். அவங்க யாரும் எங்களை இதுவரைக்கும் திட்டுனதே இல்லை. எங்க மாமன்கள், சித்திங்க எல்லாரும் என் அம்மாவுக்கும் பயங்கர மரியாதை கொடுப்பாங்க. அம்மாதான் வீட்டுல ராஜா மாதிரி. ஏன்னா, அவங்க தான் மாமா, சித்திங்களை வளர்த்து, கல்யாணமும் செஞ்சு வெச்சாங்க.

எங்க குடும்பத்துக்கும் ‘ராஜ்’ங்கிற பெயருக்கும் பயங்கர பொருத்தம். நாலு மாமன்களோட பெயரும் ‘ராஜ்’லதான் முடியும். பசவராஜ், சிவராஜ், நட்ராஜ், நாகராஜ். அதே மாதிரி என்னோட அண்ணன் பேருகூட பசவராஜ்தான். சினிமாவுக்கு வந்து அப்பாவோட சேர்ந்து நிறைய படங்களுக்கு கொரியோகிராஃப் பண்ண ஆரம்பிச்சான். ஒரு கட்டத்துல அப்பா பேரும், ராஜுவோட பேரும் சேர்ந்து டைட்டில்ல வர ஆரம்பிச்சுது. காலப்போக்குல அதுவாவே ராஜு சுந்தரம்னு ஆயிடுச்சு. அவனும் அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டான்.

அதேமாதிரி எனக்கும் முதல்ல வேறு ஒரு பெயரை வைக்கலாம்னுதான் வீட்டுல முடிவு செஞ்சிருந்தாங்க. அது என்ன பெயர்?

- இன்னும் சொல்வேன்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x