

சின்ன வயதில் ‘இரும்புக்கை மாயாவி’ உருவாக்கித் தந்த வாசிப்பு உலகம் இன்று பல தளங்களில் விரிவடைந்திருக்கிறது... தேடலும் அதிகரித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேடல் உண்டு. அதனால்தான் நான் யாருக்கும் எந்தவொரு புத்தகத்தையும் பரிந்துரைப்பதில்லை. அவரவர் தேடலுக்கு ஏற்பப் புத்தகங்களை வாங்கிப் படித்தாலே போதும்.
இந்தக் கால இளைஞர்கள் எல்லா துறைகளைப் பற்றியும் ஓரளவுக்கேனும் தெரிந்துவைத்திருக்கிறார்கள். இந்த வயதுக்கு இவ்வளவு தெரிந்திருப்பதே பாராட்ட வேண்டிய ஒன்று. சில இளைஞர்கள் தீவிர வாசகர்களாய் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். இதுபோன்ற இளம் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.
நான் இந்த முறை ஸ்கார்ட் கார்னியின் ‘சிவப்பு சந்தை’ (தமிழில்: பாபு ராஜேந்திரன் - அடையாளம் பதிப்பகம்), ‘கழிவறைக்குள் ஒளிந்திருக்கும் கடவுள்’ (திருமகன் - அறம் பதிப்பகம்), ‘நீங்கள் சுங்கச் சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்’ (ஆதவன் தீட்சண்யா - சந்தியா பதிப்பகம்), ‘வருகிறார்கள்’ (கரன் கார்க்கி - பாரதி புத்தகாலயம்), ‘சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்’ (கவின் மலர் - எதிர் வெளியீடு) போன்ற புத்தகங்களை வாங்கியுள்ளேன். இன்னும் நிறையத் தேடிக்கொண்டே இருக்கிறேன்.
பிரகதீஸ்வரன், அரசியல் நையாண்டிக் கலைஞர்.