Published : 26 May 2017 10:05 AM
Last Updated : 26 May 2017 10:05 AM

சுகுமார் அழிக்கோடு 10

மலையாள எழுத்தாளர், இலக்கியவாதி

புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர், விமர்சகர், தத்துவமேதை, பேச்சாளர் என பன்முகத் திறன் படைத்த சுகுமார் அழிக்கோடு (Sukumar Azhikode) பிறந்த தினம் இன்று (மே 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அழிக்கோடு என்ற சிற்றூரில் பிறந்தார் (1926). பள்ளிப் படிப்பு முடிந்த பின் 1946-ம் ஆண்டு, வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சமஸ்கிருதம் மற்றும் மலையாளத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மலையாள மொழி ஆய்வு மேற்கொண்டு, மலையாள சாகித்திய விமர்சனம் என்ற ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றார்.

* 1946-ம் ஆண்டு குஜராத் சென்று காந்திஜியை சந்தித்த இவர், அங்கு சேவா கிராமத்தில் சிறிது காலம் பணியாற்றினார். ஆரம்பத்தில் ராஜாஸ் உயர்நிலைப் பள்ளி, சிரக்கல் பள்ளிகளில் ஆசிரியராகவும் புனித அலோசியஸ் உள்ளிட்ட கல்லூரிகளில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

* பின்னர், எஸ்.என்.எம். பயிற்சிக் கல்லூரியிலும், மூட்டக்குன்னம் கல்லூரியிலும் முதல்வராகப் பணியாற்றினார். சமஸ்கிருதம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். வேதம், புராணம், உபநிடதங்கள், வரலாறு, இலக்கண, இலக்கியம் அத்தனையையும் கற்றார்.

* இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த இவர் எழுத்தாற்றலும் பெற்றிருந்தார். நிறைய எழுதியும் வந்தார். இவரது எழுத்துகளுக்கு கிடைத்த சிறந்த வரவேற்பு, தொடர்ந்து எழுத வைக்கும் தூண்டு சக்தியாக அமைந்தது.

* நவயுகம், தினபத்ரா, நேதமித்ரம், தீனபந்து, மலையாள ஹரிஜன், வர்த்தமானம் உள்ளிட்ட பல இதழ்களில் ஆசிரியராகச் செயல்பட்டார். இவற்றில் அரசியல் - சமூக நிகழ்வுகளில் மக்கள் நலனுக்கு எதிரான அம்சங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கில் கட்டுரைகளை எழுதினார்.

* சமுதாயத்தில் நிலவும் அனைத்து அநீதிகளுக்கும் எதிராகப் போராடிய ஒரு கலாச்சாரக் காவலன் என்றும் அநீதிகளை வேரறுக்கப் போராடுவதில் தானே ஒரு இயக்கமாகச் செயல்பட்டவர் என்றும் பலரும் பாராட்டியுள்ளனர்.

* ‘ஆசானின் கீதா காவியம்’, ‘மகாகவி உள்ளூர்’, ‘குருவின்ட்டே துக்கம்’, ‘அழிகோடின்டே ஃபலிதங்கள்’, ‘என்டினு பாரததாரே’, ‘கந்தனவும் மந்தனவும்’, ‘மலையாள சாகித்திய பதனங்கள்’, ‘தத்வமஸி’, ‘ரமணனும் மலையாள கவிதையும்’, ‘மகாத்மாவின்டே மார்க்கம்’, ‘ஆசானன்டே சீதாகாவ்யம்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் மிகவும் பிரபலமடைந்தன.

* காலிகட் பல்கலைக்கழகத்தில் மலையாள மொழிப் பிரிவு தலைவராகச் செயல்பட்டார். பின்னர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உயர்ந்தார். இவரது படைப்பான ‘தத்வமஸி’ உலகப் புகழ்பெற்ற நூல். இதில் இந்திய தத்துவம், வேதங்கள், உபநிஷதங்கள் குறித்து எழுதியுள்ளார்.

* ‘தத்வமஸி’ நூலுக்காக மத்திய சாகித்ய அகாடமி விருதையும் கேரள மாநில சாகித்ய அகாடமி விருதையும் பெற்றார். மேலும் இவரது இலக்கியப் பங்களிப்புகளுக்காக வயலார் விருது, ராஜாஜி விருது, பத்ம விருது (அரசியல் அமைப்பின்படி அனைவரும் சமமானவர்கள் என்பதால் இத்தகைய கவுரவம் பெறுவது அதற்கு எதிரானது என்று கூறி இவ்விருதை மறுத்துவிட்டார்) பஹ்ரைன் கேரளிய சமாஜம், சாகித்ய புரஸ்காரம் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.

* மலையாள இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராகப் போற்றப்பட்டவர். மலையாள இலக்கியக் களத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கிய சுகுமார் அழிக்கோடு 2012-ம் ஆண்டு மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x