Published : 02 Apr 2017 08:22 AM
Last Updated : 02 Apr 2017 08:22 AM

ந.மு.வேங்கடசாமி நாட்டார் 10

தமிழ் பேராசிரியரும், எழுத்தாளருமான ந.மு.வேங்கடசாமி நாட்டார் (Na.Mu.Venkataswamy Nattar) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* தஞ்சை மாவட்டம் நடுக்காவேரியில் (1884) பிறந்தார். நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் என்பது முழுப்பெயர். தந்தை தமிழ் அறிஞர், கல்விமான், விவசாயி. அவரைத் தேடி வரும் அறிஞர்களோடு பழகும் வாய்ப்பு சிறுவனுக்கு வாய்த்தது.

* சிறு வயதில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு, வேங்கடேசப் பெருமாள் அருளால் நீங்கியதால், சிவப்பிரகாசம் என்ற பெயரை வேங்கடசாமி என மாற்றினர் பெற்றோர். உள்ளூர் திண்ணைப் பள்ளியில் 4-ம் வகுப்பு வரை படித்தார். நெடுங்கணக்கு, இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று என கணக்கு சம்பந்தப்பட்ட அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்.

* தந்தையிடம் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், அந்தாதி, கலம்பகம் உள்ளிட்ட நூல்களைக் கற்றார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை தானாகவே கற்றறிந்தார். மதுரை தமிழ்ச் சங்கத்தின் பிரவேச பண்டிதம், பால பண்டிதம், பண்டிதம் ஆகிய தேர்வுகளை எழுதி முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

* வள்ளல் பாண்டித்துரை தேவரின் கையால் தங்கப் பதக்கம் பெற்றார். 24-வது வயதில் திருச்சி எஸ்பிஜி கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். கோவை தூய மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் ஓராண்டு பணியாற்றினார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தலைமை தமிழ் பேராசிரியராக 24 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

* இவரது திறமையைக் கேள்விப்பட்ட அண்ணாமலை அரசர், இவரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக நியமித்தார். அங்கு 7 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பினார். பின்னர் தமிழ் அறிஞர் உமா மகேஸ்வரரின் விருப்பத்துக்கு இணங்க, கரந்தை புலவர் கல்லூரியில் 4 ஆண்டுகள் ஊதியம் பெறாமலேயே மதிப்பியல் முதல்வராகப் பணியாற்றினார்.

* பாரதியார் 1912-ல் இவரது வீட்டுக்கு வந்து, சிலப்பதிகாரம், தொல்காப்பிய நூல்களில் சில இடங்களுக்குப் பொருள் கேட்டு அறிந்ததாகக் கூறப்படுகிறது. சிறந்த தமிழ் அறிஞரான அ.ச.சரவண முதலியாருடன் இணைந்து திருவிளையாடல் புராணத்துக்கு உரை எழுதினார்.

* அரிய கருத்துகளையும் மாணவர்களுக்கு எளிதாக விளங்க வைப்பதில் வல்லவர். புலவர்களின் நூல்களில் உள்ள பிழைகளை துணிச்சலாக சுட்டிக்காட்டுவார். நிறைய எழுதிக்கொண்டே இருந்தார். பல ஆய்வு நூல்கள், உரை நூல்களைப் படைத்துள்ளார். பல புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து பல நூல்களை எழுதினார்.

* தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தார் கேட்டுக்கொண்டதால் தேவாரத் திரட்டு, தண்டியலங்காரப் பழைய உரை, யாப்பருங்கலக் காரிகை உரை ஆகியவற்றுக்கு திருத்தங்கள் செய்து கொடுத்தார். இவரது பல நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக இடம்பெற்றன.

* சிறந்த சொற்பொழிவாளரான இவருக்கு, சென்னை மாகாண தமிழ்ச் சங்கம் 1940-ல் ‘நாவலர்’ பட்டம் வழங்கியது. புதிய செய்தியோ, புதிய ஆய்வுக் குறிப்போ இல்லாமல் இவரது உரை இருப்பதில்லை. எனவே, இவரது சொற்பொழிவைக் கேட்க பலரும் வெகுதொலைவில் இருந்து நடந்தே வருவார்களாம்.

* ‘நாட்டார் ஐயா’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். எளிமையாக வாழ்ந்தவர். அனைவரிடமும் இனிமையாக பழகுவார். வாழ்நாள் முழுவதும் தமிழ்த் தொண்டாற்றிய ‘நாவலர்’ நா.மு.வேங்கடசாமி நாட்டார் 1944-ம் ஆண்டு மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x