Published : 21 May 2017 09:25 AM
Last Updated : 21 May 2017 09:25 AM

சரத் ஜோஷி 10

இந்தி இலக்கியத்தின் முன்னோடி நகைச்சுவை எழுத்தாளரும், கவிஞர், திரைப்பட வசனகர்த்தாவுமான சரத் ஜோஷி (Sharad Joshi) பிறந்த தினம் இன்று (மே 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் (1931) பிறந்தார்.சிறு வயது முதலே புத்தகம் படிப்பதில் நாட்டம் கொண்டிருந் தார். தனக்குத் தோன்றுவதை எல்லாம் ஆர்வத்தோடு எழுதத் தொடங்கினார். பட்டப் படிப்பை முடித்த பிறகு, மாநில தகவல் மற்றும் பதிப்பகத் துறையில் பணியாற்றினார்.

* எழுத்தில் இருந்த ஆர்வம் காரணமாக நாளிதழ்கள் மற்றும் இந்தூர் வானொலிக்கு ஏராளமான கட்டுரைகள் எழுதிவந்தார். முதலில் இவர் எழுதிய சிந்தனைக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் போன்றவை பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. மாறாக, எதிர்மறை விமர்சனங்களும் எழுந்தன.

* இதனால் மனம் நொந்தவர், நகைச்சுவை எழுத்தில் கவனம் செலுத்தினார். அபார நகைச்சுவை, நையாண்டி இவருக்கு இயல்பாக கைவரப்பெற்றது. இந்த பாணி நல்ல வரவேற்பையும் பெற்றது. அதையே தன் நிரந்தர பாணியாக மாற்றிக்கொண்டார். அரசு வேலையை விட்டுவிட்டு முழுநேர எழுத்தாளராக மாறினார்.

* பல இதழ்களில் தொடர்ந்து நகைச்சுவை, நையாண்டிக் கட்டுரைகள் எழுதிவந்தார். கவியரங்க மேடைகளில் இவரது உரைநடை வாசிப்புகள் இடம்பெற்றன. கவியரங்குகளில் கவிதைகளைவிட இவரது உரைநடை வாசிப்புக்குதான் அதிக பாராட்டுகள் கிடைத்தன. பம்பாய் சகல்லஸ் மேடையில் இவரது உரை பெரிதும் வரவேற்பு பெற்றது.

* இலக்கிய உலகில் பிரபலமடைந்தார். அரசியல், சமூகம், கலாச்சாரம், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து ஏராளமான நையாண்டிக் கட்டுரைகள் எழுதினார். தொடர் கட்டுரைகள், கட்டுரைத் தொகுப்புகள், நையாண்டி நாடகங்கள் என பலவற்றிலும் தன் முத்திரையைப் பதித்தார்.

* திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதத் தொடங்கினார். ‘சோட்டி ஸீ பாத்’, ‘சாஞ்ச் கோ ஆஞ்ச் நஹி’, ‘சோர்னி’, ‘உத்சவ்’,‘மேரா தாமாத்’, ‘உடான்’ உள்ளிட்ட பல படங்களுக்கு எழுதியுள்ளார். ‘யே ஜோ ஹை ஜிந்தகி’, ‘விக்ரம் அவுர் வேதாள்’, ‘யே துனியா கஜப் கீ’, ‘குல்தஸ்தா’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களுக்கும் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

* பிரபல இதழ்களில் வெளிவந்த இவரது தொடர் கட்டுரைகள், வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றன. இவரது பல நையாண்டி நாடகங்கள் காலத்தைக் கடந்து இன்றும் மக்களிடையே பிரபலமாக இருந்துவருகின்றன.

* ‘வன்முறை, பரபரப்பு நிறைந்த உலகில் இவரது நகைச்சுவை, நையாண்டி படைப்புகள் மக்களுக்கு பெரிய ஆறுதலை வழங்குகின்றன. இந்தி இலக்கியத்தில் நையாண்டிப் படைப்புகளுக்கு இருந்த பற்றாக்குறையை இவர் நீக்கிவிட்டார்’ என சக படைப் பாளிகளால் போற்றப்பட்டார்.

* அரசியல், அழகுணர்ச்சி, இயற்கை, இலக்கியம், மொழி, பத்திரிகை, இதழியல், அறநெறி, சமூகம், கலாச்சாரம் இப்படி அனைத்தையும் குறித்து எழுதினார். 1990-ல் இவருக்கு பத்ம விருது வழங்கப்பட்டது. சகல்லஸ் விருது, காகா ஹத்ரஸி விருது எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

* இந்தி இலக்கியத்தின் ஒப்பற்ற நையாண்டி எழுத்தாளராகப் புகழ்பெற்று, இந்தி இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய சரத் ஜோஷி 60-வது வயதில் (1991) மறைந்தார். படைப்புலகில் சாதனை படைப்பவர்களுக்கு இவரது பெயரில் ‘சரத் ஜோஷி சம்மான்’ விருதை மத்தியப் பிரதேச அரசு வழங்கி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x