Published : 23 Jun 2017 09:54 AM
Last Updated : 23 Jun 2017 09:54 AM

சண்டி பிரசாத் பட் 10

இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்

காந்தியவாதியும் இந்தியாவின் தலைசிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலருமான சண்டி பிரசாத் பட் (Chandi Prasad Bhatt) பிறந்த தினம் இன்று (ஜூன் 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* உத்தராகாண்ட் மாநிலத்தின் கோபேஷ்வர் என்ற கிராமத்தில் பிறந்தவர் (1934). குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். ருத்ரபிரயாக் மற்றும் புரியில் பள்ளிக் கல்வி பயின்றார். பட்டப் படிப்பு முடிக்காமலேயே இவரது படிப்பு முடிவுக்கு வந்தது.

* கர்வால் மோட்டார் ஓனர்ஸ் யூனியனில் புக்கிங் கிளர்க்காக பணியாற்றினார். 1956-ல் அந்த ஊருக்கு வருகை தந்த ஜெயபிரகாஷ் நாராயணனின் பேச்சால் கவரப்பட்டார். இவரும் ஏராளமான இளைஞர்களும் சர்வோதயா இயக்கத்தில் இணைந்தனர். காந்திஜி, ஜெயபிரகாஷ் நாராயணன், வினோபா பாவே ஆகியோரைத் தன் வழிகாட்டிகளாக ஏற்றார்.

* காந்தியக் கொள்கைகள், பூமிதானம், கிராமதானம் குறித்து பிரச்சாரம் செய்தார். பெண்கள் மற்றும் தலித்துகளின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டார். சர்வோதயா இயக்க செயல்பாடுகளில் முழு மூச்சாக ஈடுபடுவதற்காகத் தான் பார்த்து வந்த வேலையை 1960-ல் துறந்தார்.

* 1964-ல் கோபேஷ்வர் என்ற இடத்தில் ‘தஷோலி கிராம் ஸ்வராஜ்யா மண்டல்’ அமைப்பைத் தொடங்கினார். இதன் மூலம் கிராம மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே காடுகள் சார்ந்த தொழில்களில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

* மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும் தன் மக்களின் நலனைக் காப்பதற்காகவும் ‘சிப்கோ ஆந்தோலன்’ என்ற இயக்கத்தை 1973-ல் தொடங்கினார். கிராம மக்கள் மரங்களைக் கட்டித் தழுவியபடி, அவற்றை வெட்ட வருவோரைத் தடுத்தனர். இதனால் மரங்கள் வெட்டப்படுவது சட்டபூர்வமாகத் தடைசெய்யப்பட்டது.

* காடுகளைப் பாதுகாக்கும் பல்வேறு வழிமுறைகளை மலைப்பகுதி மக்களின் பங்கேற்புடன் மேற்கொண்டார். இந்த முகாம்களில் பங்கேற்றவர்கள் தங்கள் கிராமங்களில் மரங்களை நட்டனர். இவர்கள் நட்ட மரங்களில் 88 சதவீத மரங்கள் செழித்து வளர்ந்தன. இந்தத் திட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது.

* ‘பர்பத் பர்பத் பஸ்தி பஸ்தி’, ‘பிரதிகார் கே அங்க்கூர்’, ‘ஃபர்தர் ஆஃப் லார்ஜ் பிராஜக்ட்ஸ் இன் தி ஹிமாலயா’, ‘சிப்கோ எக்ஸ்பீரியன்ஸ்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். 2003-ம் ஆண்டு தேசிய வன ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த அமைப்பு, காடுகள் மேலாண்மை தொடர்பான தற்போதைய அனைத்து கொள்கைகள் மற்றும் சட்டபூர்வமான கட்டமைப்புகளை மீளாய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.

* ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று, சுற்றுச்சூழல், வனப் பாதுகாப்பு குறித்த சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்றார். மேலும், இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் தனது அனுபவ அறிவைப் பகிர்ந்துகொண்டார்.

* இவரது சமூக சேவைகளுக்காகவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மகத்தான பங்களிப்புகளுக்காகவும் ரமன் மகசேசே விருது வழங்கப்பட்டது. மேலும் பத்மபூஷண், காந்தி அமைதி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

* இன்று 84-வது வயதில் அடியெடுத்து வைக்கும் சண்டி பிரசாத் பட், இப்போதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான செயல்பாடுகளைச் சுறுசுறுப்பாக மேற்கொண்டு வருகிறார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x