Published : 07 Jun 2016 11:59 AM
Last Updated : 07 Jun 2016 11:59 AM

குவெண்ட்லின் ப்ரூக்ஸ் 10

புலிட்சர் விருது பெற்ற அமெரிக்க கவிஞர்

புலிட்சர் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க பெண் கவிஞர் குவெண்ட்லின் எலிசபெத் ப்ரூக்ஸ் (Gwendolyn Elizabeth Brooks) பிறந்த தினம் இன்று (ஜூன் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத் தலைநகர் டபீக்காவில் (1917) பிறந்தார். குழந்தைக்கு 6 வயது இருக்கும்போது, குடும்பம் சிகாகோவில் குடியேறியது. 7 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார்.

# பள்ளி ஆசிரியையான தாய், இவரை அப்போதே ஒரு கவிஞராகப் பார்க்கத் தொடங்கினார். தந்தையோ தன் குட்டிப் பெண் எழுதவும் படிக்கவும் ஏதுவாக, மேஜை, நாற்காலி, அலமாரி நிறைய புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தார்.

# இவரது முதல் கவிதை 13-வது வயதில் குழந்தைகள் இதழ் ஒன்றில் வெளியானது. 16 வயதுக்குள் 75 கவிதைகள் எழுதி வெளியிட்டார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் வில்சன் ஜூனியர் கல்லூரியில் பயின்றார்.

# இனப் பாகுபாடு காரணமாக பள்ளிகளில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களால், மேற்கொண்டு படிப்பதில்லை என்று முடிவெடுத்து, படிப்பை நிறுத்திக்கொண்டார். எழுத்தாளராக வேண்டும் என்று தீர்மானித்தார். அலுவலக உதவியாளர், செயலாளர் போன்ற வேலைகளும் பார்த்து வந்தார்.

# வெள்ளையினப் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட கவிதைப் பயிலரங்குகளில் பங்கேற்றார். இவரது கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இவரது முதல் கவிதை நூலான ‘எ ஸ்ட்ரீட் இன் ப்ரான்ஸ்வில்’ 1945-ல் வெளிவந்து, பரவலாக பாராட்டு பெற்றது. சமூகத்தின் செயல்பாடுகளுக்கு கடுமையாக பதில் அளிக்கும் விதமாக இவரது கவிதைகள் அமைந்தன.

# கவிதை வடிவம், பாணி குறித்து இவர் அலட்டிக்கொள்வதில்லை. அதன் கருவில் மட்டுமே கவனம் செலுத்துவார். சாதாரண ஆப்பிரிக்க அமெரிக்கரின் வேதனை மிகுந்த வாழ்க்கை, ஏழ்மை மற்றும் இனப்பாகுபாடு கொடுமைகளுக்கு எதிரான அவனது போராட்டம் ஆகியவையே இவரது கருப்பொருட்களாக அமைந்தன.

# ‘ஆனி ஆலன்’ கவிதை நூல் இவருக்கு ‘புலிட்சர்’ விருதை பெற்றுத் தந்தது. இவரது ‘மூட் மார்த்தா’ நாவல் சுயசரிதை வடிவில் அமைந்தது. 1962-ல் ‘லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்’ கவிதை விழாவில் தனது கவிதையை வாசிக்குமாறு அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி இவருக்கு அழைப்பு விடுத்தார்.

# சிகாகோ, கொலம்பியா கல்லூரி, இலினாய்ஸ் பல்கலைக்கழகம், சிகாகோ மாநில பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படைப்புத் திறன் குறித்து கற்பித்தார். குழந்தைகள், குடும்பச் சுமை எதுவும் தன் எழுத்துகளுக்கு தடங்கல் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொண்டார். ஏராளமான கவிதைகளை எழுதி, பல தொகுதிகளாக வெளியிட்டார்.

# அமெரிக்கன் கலை அகாடமி விருது, கவிதை இதழ் விருது, ராபர்ட் பெர்கூசன் நினைவு விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். உலகம் முழுவதும் சுமார் 75 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.

# மிகவும் சாதாரண, ஏழ்மையான கறுப்பினக் குடும்பத்தில் பிறந்து, தனது விடாமுயற்சியாலும் எழுத்தாற்றலாலும் ஆங்கில இலக்கியக் களத்தில் தனி முத்திரை பதித்த குவெண்ட்லின் ப்ரூக்ஸ் 83-வது வயதில் (2000) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x