Published : 05 Jun 2016 02:28 PM
Last Updated : 05 Jun 2016 02:28 PM

வ.அ.ராசரத்தினம் 10

இலங்கையை சேர்ந்த சிறுகதை எழுத்தாளரும், நாவலாசிரியரும், சிறந்த ஆசிரியருமான வ.அ.ராசரத்தினம் (V.A.Rasarathinam) பிறந்த தினம் இன்று (ஜூன் 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இலங்கையின் திரிகோணமலை அடுத்த மூதூரில் (1925) பிறந்தார். கத்தோலிக்கப் பாடசாலை, மூதூர் புனித அந்தோணியார் பாடசாலையில் பயின்றார். மட்டக்களப்பில் ஆசிரியர் பயிற்சி பெற்று, ஆசிரியராகப் பணியாற்றினார். ‘இலக்கியம் படிப்பதற்கான கருவியே ஆசிரியர் தொழில்’ என்பார்.

* புதுமைப்பித்தன் எழுத்துகளால் கவரப் பட்டார். அதன் தாக்கம் இவரது ஆரம்பகால படைப்புகளில் காணப்பட்டது. வல்லிக்கண்ணன், சிதம்பர ரகுநாதன், கு.அழகிரிசாமி ஆகியோரது படைப்புகளையும் தேடித் தேடிப் படித்தார்.

* முதன்முதலாக ‘மழையால் இழந்த காதல்’ என்ற சிறுகதை எழுதினார். தொடர்ந்து ‘தோணி’ என்ற சிறுகதை எழுதினார். இவை இலக்கிய உலகில் பரவலான வரவேற்பையும் கவனிப்பையும் பெற்றன. துறைக்காரன், தீர்த்தக்கரை, கொழுகொம்பு, கிரௌஞ்சப் பறவைகள் உட்பட பல நாவல்களை எழுதியுள்ளார்.

* ‘கோயில் மணி ஓசை’, ‘பங்கம்’, ‘அறுவடை’, ‘தோழருக்குத் தெரி யாதது’ உள்ளிட்ட பல சிறுகதைத் தொகுதிகளும் வெளிவந்தன. ‘தினக் குரல் ஞாயிறு’ இதழில் ‘பொச்சங்கள்’ என்ற தலைப்பில் நெடுந் தொடர் எழுதினார். ஆசிரியப் பணியின் அனுபவங்கள் அடிப்படை யிலும் பல கதைகள் எழுதியுள்ளார். ‘வீரகேசரி’ இதழில் தொடர்கதை கள் எழுதினார். நூற்றுக்கணக்கான கதைகளை எழுதியுள்ளார்.

* தனது இலக்கியப் பயணத்தை விவரித்து ‘இலக்கிய நினைவுகள்’ என்ற சுயசரிதை நூல் எழுதினார். மூதூர் அந்தோணியார் கோயிலின் பூர்வீக வரலாறு குறித்த கட்டுரை நூலையும் எழுதினார். கவிதை எழுதும் ஆற்றலும் கொண்டிருந்தார். தனது பல படைப்புகளை தன் பதிப்பகம் மூலமே வெளியிட்டார்.

* இவரது படைப்புகளில் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம், எதார்த்த நோக்கம், முற்போக்கு சிந்தனை, மனிதநேயம், நம்பிக்கை மனோபாவம் இழையோடும். இவரது பல கதைகள் அற்புதமான வாழ்வியல் சித்திரங்களாகப் போற்றப்படுகின்றன. புதுமையான, அழகான, நயமான உவமைகளைக் கையாளக்கூடியவர்.

* மனைவி இவரது இலக்கியப் பணிகளுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். அவருடன் சேர்ந்து வீட்டிலேயே ஒரு பதிப்பகத்தை நடத்தி வந்தார். மனைவி இவரது அந்தரங்க செயலாளர் போலவே செயல்பட்டார். மனைவியின் மரணம் இவரிடம் ஏற்படுத்திய வேதனையின் வெளிப்பாடுதான் ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ என்ற நெடுங்கதை.

* போரில் இவரது வீடும், சேகரித்து வைத்திருந்த ஏராளமான நூல்களும் தீக்கிரையாகின. வீடு இழந்து, அதில் உருவாக்கிய அச்சகத்தையும் இழந்து, இடம்பெயர்ந்து, வாழும் நிலையும் ஏற்பட்டது. ஒரு தாக்குதலில் தனது மகள், மருமகனை இழந்தார். வாழ்வில் இவர் அனுபவித்த சோகங்கள், இழப்புகளும் இவரது பல படைப்புகளின் அடிநாதமாக விளங்கின.

* சுருக்கமாக ‘வ.அ.’ என அழைக்கப்பட்ட இவர், ஈழநாயகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்பது போன்ற புனைப்பெயர்களில் எழுதினார். பழகுவதற்கு எளிமையானவர். நேர்மை, உண்மை, மனிதாபிமானம் மிக்க படைப்பாளி. எளிமையாக, சரளமான மொழியில் பேசுவார்.

* சாகித்ய மண்டலப் பரிசையும் கலாபூஷண் விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார். 1940-களில் தொடங்கிய இவரது எழுத்துப் பயணம் இறுதிவரை தொடர்ந்தது. அவர் மறைந்த ஆண்டு, நாள் குறித்த சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x