Published : 15 Jun 2016 10:07 AM
Last Updated : 15 Jun 2016 10:07 AM

எரிக் எரிக்சன் 10

ஜெர்மனியை சேர்ந்த உளவியல் பகுப்பாய்வாளர் எரிக் எரிக்சன் (Erik Erikson) பிறந்த தினம் இன்று (ஜூன் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஜெர்மனியின் ஃபிராங்பர்ட் நகரில் (1902) பிறந்தார். தந்தை பங்கு வர்த்தகத் தரகர். சில காரணங்களால், இவர் பிறப்பதற்கு முன்பே பெற்றோர் பிரிந்தனர். தாய் ஒரு மருத்துவரை மணந்தார்.

* தன்னை வளர்த்து வருபவர், பெற்ற தந்தை இல்லை என்பது சிறிது காலத்துக்குப் பிறகு இவ ருக்கு தெரிந்தது. இதனால் குழப்பம் அடைந்தவருக்கு, தனது அடையா ளத்தை தேடும் ஆர்வம் ஏற்பட்டது. இதுபற்றி ‘ஐடென்டிடி கன்ஃபியூஷன்’ என்ற கட்டுரையை எழுதியுள் ளார்.

* இளம் பருவத்தில் ஏற்பட்ட இந்த அனுபவம் பிற்காலத்தில் பாரம்பரியம், அடையாளம் பற்றிய ஆய்வுகளுக்குத் துணையாக இருந்தது. பள்ளிப் பருவத்தில் வரலாறு மற்றும் மொழிகளில் ஆர்வம் கொண்டிருந்தார். இவர் மருத்துவராக வேண்டும் என்பது வளர்ப்புத் தந்தையின் விருப்பம். அதற்கு மாறாக, கலைகளில் தேர்ச்சி பெற ஃப்ளாரன்ஸ் சென்றார்.

* யூத இனத்தவர் என்பதால் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஜெர்மனி, இத்தாலியில் கண்போன போக்கில் சுற்றினார். அப்போது தன் சொந்த அப்பா, இனம், மதங்கள் குறித்து பல்வேறு கேள்விகளுக்கான பதில்களை தனக்குள்ளே தேடினார்.

* வியன்னாவில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. உளவியல் பகுப்பாய்வு துறையில் நாட்டம் ஏற்பட்டதால், வியன்னாவில் உளவியல் பகுப்பாய்வு பயிலகத்தில் பயின்றார். குழந்தை உளவியல் பகுப்பாய்வு, மான்டிசோரி கல்விமுறையில் தேர்ச்சி பெற்றார்.

* ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு அங்கு வசிக்க முடியா மல் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் சென்றார். அங்கும் நிலைமை சரியில்லாதால், குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறி னார். பாஸ்டனில் குழந்தை உளவியல் நிபுணராகப் பணியாற்றினார். பின்னர் மசாசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் பணிபுரிந்தார்.

* ஹார்வர்டு மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். குழந்தை உளவியல் மருத்துவத்திலும் ஈடுபட்டார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், யேல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி, சான்பிரான்சிஸ்கோ உளவியல் நிறுவனத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

* சான்பிரான்சிஸ்கோவில் குழந்தைகள் உளவியல் பகுப்பாய்வு மருத்துவமனை தொடங்கினார். உளவியல் மேம்பாட்டின் பல்வேறு நிலைகள், உளவியல் மானுடவியல் இடையிலான தொடர்புகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஹார்வர்டில் மனிதவள மேம்பாட்டுத் துறை பேராசிரியராக 10 ஆண்டுகாலம் பணிபுரிந்தார். பதவி ஓய்வு பெற்ற பிறகும், ஆராய்ச்சிகள் மற்றும் நூல்கள் எழுதும் பணியைத் தொடர்ந்தார்.

* ‘குழந்தைகளை முறையாகப் பராமரிப்பதும், வளர்ப்பதும் சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது’ என்று வலியுறுத்தினார். மனித வாழ்வில் சமுதாயம் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் ஆய்வு செய்தார். தனது ஆய்வுகள் குறித்து பல கட்டுரைகள், நூல்களை எழுதினார்.

* இந்தியாவில் சில காலம் தங்கியிருந்து, காந்திஜி பற்றி ‘காந்திஸ் ட்ரூத்’ என்ற நூலை எழுதினார். இந்நூலுக்காக இவருக்கு ‘புலிட்சர்’ பரிசும், அமெரிக்க தேசியப் புத்தக விருதும் கிடைத்தன. உளவியல் பகுப்பாய்வு தொடர்பாக இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த எரிக் எரிக்சன் 92-வது வயதில் (1994) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x