Published : 18 Aug 2016 09:58 AM
Last Updated : 18 Aug 2016 09:58 AM

சிலை சிலையாம் காரணமாம் - 31: நேர்த்தியான சுத்தமல்லி கோயில் சிலைகள்!

‘‘விசாரணைகள் போய்க் கொண் டிருக்கிறது. இடை யில் எதாவது சொல்லி எனக்கு நானே சிக்கலை உண்டாக்கிக்கொள்ள மாட்டேன்’’ என்ற நிபந்தனையுடன் பேசிய, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு (சி.ஐ.டி) ஐ.ஜி-யான ஏ.ஜி.பொன் மாணிக்கவேல், ‘‘சிலைக் கடத்தல் பின்னணியில் பல சதி காரர்கள் கைகோத்து இருக் கிறார்கள். எங்களது பலத்தை வைத்து நாங்கள் விசாரணை யில் முன்னேறிக் கொண்டிருக் கிறோம். இருந்தாலும் ‘இதன் பின்னணியில் இத்தனை பேர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் இத்தனை நாளைக்குள் தூக்கிவிடுவோம்’ என்றெல்லாம் நான் சொல்லவிரும்பவில்லை. ஆனால், யாரையும் தப்ப விட மாட்டோம்’’ என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் தமி ழகம் முழுவதும் சுமார் 18 ஆயிரம் கொலைகள் நடந்திருக்கின்றன. இது தொடர்பான வழக்குகளை 1,400 ஆய்வாளர்கள் விசாரித் திருக்கிறார்கள். எந்த வழக்கிலும் யாரும் அப்ரூவராக மாறியதாகத் தகவல் இல்லை. ஆனால், ஏ.ஜி.பொன் மாணிக்கவேல் பொறுப்பேற்ற பிறகும் சிலைக் கடத்தல் வழக்குகளில் 5 பேரை அப்ரூவராக்கி இருக்கிறார். இன்னும் ஒரு முக்கியமான நபரையும் அப்ரூவராக மாற சம்மதிக்க வைத் திருக்கிறார்’’ என்று பெரு மிதம் கொள்கிறார்கள் தற்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியில் இருப்பவர்கள்.

என்றாலும், ‘கபூரை நான்கு ஆண்டுகளாக சிறைக்குள் அடைத்து வைத்திருப் பவர்கள், தமிழகத்துக்குச் சொந்தமான அரிய சிலைகளை மறைத்து வைத்திருப்பதாக வாக்குமூலம் கொடுத்திருக்கும் கபூரின் தங்கை சுஷ்மா சரீனை கைது செய்து சிலை களை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று சென்னை வரைக்கும் வந்துபோன அமெரிக் காவின் ஹோம்லேண்ட் செக் யூரிட்டி போலீஸ் அதிகாரிகள் கேள்வி எழுப்பிவிட்டுப் போயி ருக்கிறார்கள்.

சுத்தமல்லி கோயிலுக்குச் சொந்தமான நடராஜர், வீணா தாரா, ஆலிங்கனமூர்த்தி, அஷ்ட தேவர் ஆகிய நான்கு சிலை கள் நியூயார்க்கில் கபூரின் ‘ஆர்ட் கேலரி’யில் இருந்ததை அமெரிக்காவில் உள்ள ‘தி இந் தியா ப்ரைடு புராஜெக்ட்’ அமைப் பின் தன்னார்வலர்கள்தான் போட்டோ ஆதாரத்துடன் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக் குத் தகவல் கொடுத்தார்கள்.

ஆலிங்கன மூர்த்தி

சுத்தமல்லி அந்தக் காலத் தில் சுத்தவல்லியாக இருந்திருக் கிறது. அதனால், சுத்தமல்லி கோயில் சிலைகளில் சுத்த வல்லி என்று பெயர் பொறிக் கப்பட்டுள்ளது. இது தெரியாமல், தன்னார்வலர்கள் ‘சுத்தவல்லி’ யைத் தேடி இருக்கிறார்கள். அது ‘சுத்தமல்லி’ என்பதை கண்டு பிடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. பிறகு, கபூர் ‘ஆர்ட் கேலரி’யில் எடுக்கப்பட்ட புகைப் படத்தையும் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் புகைப் படத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து, இரண்டும் ஒன்றுதான் என்பதை தன்னார்வலர்கள் உறுதிப்படுத் தினார்கள். அதுவரைக்கும் இந்த நடராஜர் சிலைதான் ஆஸ்தி ரேலியாவில் இருப்பதாக தமிழக போலீஸ் சொல்லிக் கொண்டிருந் தது. ஆனால், அது ஸ்ரீபுரந்தான் நடராஜர் என்பது இதற்குப் பிறகு தான் போலீஸுக்கே தெரிந்தது.

ஸ்ரீபுரந்தான், சுத்தமல்லி கோயில்களுக்குச் சொந்தமான மொத்தம் 26 ஐம்பொன் சிலைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டிருந்தும், இதுவரை நான்கு சிலைகள் மட்டுமே மீட்கப் பட்டுள்ளன. இன்னும் சில சிலை கள் பறிமுதல் செய்யப்பட்டும் தமிழகத்துக்கு மீட்டு வரப்பட வில்லை. பல சிலைகள் இருக்குமிடமே தெரியவில்லை.

டொலைடோ மியூசியத்தில் இருந்து மீட்கப்பட்ட ஸ்ரீபுரந்தான் விநாயகர் சிலை கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடியிடம் ஒப் படைக்கப்பட்டது. நடன சம்பந்தர், மாணிக்கவாசகர் சிலைகளும் நியூயார்க்கில் கைப்பற்றப்பட் டன. இவை இரண்டும் தமிழகத் தில் இருந்து கடத்தப்பட்ட 8-வது நாளில் விற்கப்பட்டுள்ளன. இதில் மாணிக்கவாசகர் சிலையும் மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இன்னொரு அம்மன் (உமா) சிலை யும் சந்திரசேகரர் சிலையும் அமெரிக்காவில் கைப்பற்றப் பட்டுள்ளன.

ஸ்ரீபுரந்தான் சிலைகளைவிட சுத்தமல்லி கோயில் சிலைகள் நேர்த்தியானவை; பழமை யானவை. ஆனால், ‘ஆர்ட் கேலரி’யில் ஸ்ரீபுரந்தான் சிலை களை வாங்க போட்டிபோட்ட வர்கள் சுத்தமல்லி சிலைகளை வாங்கத் தயங்கி இருக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தக் கோயில் சிலைகளின் அடியில் ‘சுத்தவல்லி’ என்று ஊரின் பெயர் இருந்ததுதான்.

திருடுபோய் மீட்கமுடியாத சிலைகள் ஒருபக்கமிருக்க, இன்னமும் வெளியில் தெரியாத சிலைத் திருட்டு சம்பவங்களும் இருக்கின்றன. அரியலூருக்கும் திருமானூருக்கும் இடையில் உள்ளது சுள்ளங்குடி. இங்கு சோழர் காலத்து சிவன்கோயில் ஒன்று உள்ளது. இங்கிருந்த 13 சிலைகளையும் காணவில்லை என்று கூறும் தொல்லியல் ஆர் வலர் பாண்டுரங்கன், ‘‘பெரம்பலூர் மாவட்டம் அயன்பேரையூர் கிராமத்தில் திருமுக்கூட்டீஸ் வரர் கோயில் உள்ளது. இங்கு கோஷ்டத்தில் இருந்த ஒன்பது சிலைகளில் விநாயகரைத் தவிர மற்ற எட்டு சிலைகளும் 20 வருடங்களுக்கு முன்பே களவுபோய்விட்டன. இதுவரை தேடுவார் இல்லை.

அந்த எட்டு சிலைகளில் பிரம்மா சிலை மட்டும் தீனதயாள் வீட்டில் கிடைத்துள்ளது. விழுப் புரம் மாவட்டம், குகையூரில் ராஜ நாராயணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கிருந்த ஸ்ரீதேவி, பூதேவி, வரதராஜ பெருமாள் செப்புத் திருமேனிகளை நான்கு மாதங்களுக்கு முன்பு கடத்தி விட்டார்கள். இதுவரை ஒரு வழக்கும் இல்லை; எந்தத் தேடலும் இல்லை’’ என்கிறார்.

சிலைத் திருட்டு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்தாலும், ஆயிரம் ஆண்டுகள் பழமை யான கோயில் சிலைகளையும் இன்னமும் போதிய பாதுகாப் பின்றி போட்டுவைத்திருக்கிறார் கள். அதற்கு ஒருசில உதாரணங் களை அடுத்து பார்ப்போம்.

- சிலைகள் பேசும்… | IFP/EFEO - புதுச்சேரி மற்றும் ‘The India Pride Project’ உதவியுடன்

முந்தைய அத்தியாயம்: >சிலை சிலையாம் காரணமாம் - 30: கடத்தல் மன்னன் கபூரின் வேலைகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x